Header Ads



காலநிலை தொடர்பில், வளிமண்டலவியல் திணைக்களத்தினால் எச்சரிக்கை

இலங்கையில் நிலவும் காலநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இன்று சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினமும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் அடைமழை பெய்யும் அபாயம் உள்ளதாக திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

அராபிக் கடலில் நிலைகொண்டுள்ள தாழமுக்கம் வலுவடைந்து இலங்கை ஊடாக பயணிக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இதன்போது நாட்டில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தும் என்பது தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அராபிக் கடல் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள குறைந்த தாழமுக்கம் வடக்கு அகலக்கோட்டில் 11.9 இலும், கிழக்கு அகலக்கோட்டில் 65.8இலும் நிலை கொண்டுள்ளது.

தாழமுக்கம் கொழும்பில் இருந்து 1650 கிலோமீற்றர் தூரத்தில் நிலை கொண்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமுக்கம் நிலை கொண்டுள்ள இடத்தில் 100 - 200 கிலோமீற்றர் தூரத்தில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும், கடல் மிகவும் கொந்தளிப்புடன் காணப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தாழமுக்கம் மேலும் வலுவடைந்து எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்குள் சூறாவளியாக மாறி, இலங்கை ஊடாக வடமேல் பகுதியை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதன் காரணமாக இலங்கையின் பல்வேறு பகுதிகளில் காலநிலையில் மாற்றம் ஏற்படும். அதற்கமைய இன்றைய தினமும் அடைமழையுடனான காலநிலை நீடிக்கும்.

தெற்கு, மத்திய, சப்ரகமுவ, மற்றும் மேல் மாகாணத்தில் பல பகுதிகளிலும் 150 மில்லிமீற்றரை தாண்டிய அடைமழை பெய்யக் கூடும் என குறிப்பிடப்படுகின்றது.

மன்னாரில் இருந்து புத்தளம் கொழும்பு, காலி மற்றும் மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையிலான கடல் பிரதேசங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மழை பெய்யும் போது 70 - 80 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும். கடல் பிரதேசங்கள் கொந்தளிக்க வாய்ப்புகள் உள்ளதாக திணைக்களம் வெளியிட்டுள்ள சிவப்பு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சீரற்ற காலநிலை காரணமாக மீனவர்கள் மற்றும் கடல் செயற்பாடுகளில் ஈடுபடுவோர் மிகுந்த அவதானமாக செயற்படுமாறு திணைக்களம் விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.