Header Ads



நாணய மதிப்பிறக்கம், மக்கள் பீதியடையக்கூடாது - மத்திய வங்கியின் ஆளுநர்

நாட்டின் பொருளாதாரம் சீர்குலைகிறது என்பது ஒரு மாயத் தோற்றமேயாகும். எனவே பொது மக்கள் பீதியடையக்கூடாது என்று மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்தார்.

“தற்போதுள்ள பணப் பரிமாற்று விகிதம் மற்றும் கடன் விவகாரம் ஆகியவற்றை தொழில்சார் முறையில் கையாள முடியும் என்று மத்திய வங்கி நம்புகிறது” என்று மத்திய வங்கி ஆளுநர் இந்திரஜித் குமாரசாமி நேற்று மத்திய வங்கியின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கூறினார். சந்தையில் மேற்கொள்ளப்பட்ட சில தீர்க்கமான இடையீடுகள் மற்றும் சொகுசு இறக்குமதிகளை கட்டுப்படுத்தல் ஆகிய செயற்பாடுகள் மூலம் பணப்பரிமாற்ற விகித பிரச்சினையின் நெருக்கடி குறைந்துள்ளது என்று மத்திய வங்கி ஆளுநர் குறிப்பிட்டார்.

இப்போது நாம் உள்ள நிலையிலிருந்து வெளியேற போதுமான தொழில்நுட்பத் திறன் எம்மிடமுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். மத்திய வங்கியைப் பொறுத்தவரை 2018 இல் பணப் பரிமாற்ற விகிதம் 9.7 சதவீதம் என்ற வேகமான வீதத்தில் குறைந்து வருகிறது. இதையடுத்து அரசாங்கம் மத்திய வங்கியின் நிதிச் சபையும் தங்கம் மற்றும் வாகன வரி மற்றும் அவசிய மில்லாத இறக்குமதிகள் ஆகியவற்றை கட்டுப்படுத்தும் இடையீட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு ரூபாவின் வீழ்ச்சியை சமாளிக்க வேண்டியுள்ளது.

இவை தற்காலிக நடவடிக்கைகள் மட்டுமேயாகும். சந்தை நிலை சீரானதும் இவற்றை நிறுத்தி விடலாம் என்று அவர் குறிப்பிட்டார்.

“2015 இல் ரூபாவின் வீழ்ச்சியை சமாளிக்க 3.2 பில்லியன் அமெரிக்க டொலரை செலவிட வேண்டியிருந்ததை நான் இங்கு நினைவுபடுத்த வேண்டும். எனினும் 9.5 சதவீதத்தால் ரூபா குறைந்தது. அதேபோல் 2011/2012 ஆம் ஆண்டுகளில் 4.1 பில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிட்டும் 15 சதவீதத்தால் ரூபா குறைந்தது.

எப்போது நாம் சொகுசு பொருட்கள், அத்தியாவசிய பொருட்கள் இடைநிலை பொருட்கள் மற்றும் மூலதன பொருட்கள் ஆகியவற்றை மாற்றாமல் உச்ச கடன் கட்டுப்பாட்டை மேற்கொண்டிருந்தோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

2018 இல் 9.7 சதவீதத்தால் ரூபாவின் மதிப்பு குறைந்துள்ளது. எனினும் நாம் 184 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மட்டுமே விற்பனை செய்து எமது சேமிப்பை பாதுகாத்துக்கொள்வோம். இம்முறை நாம் மேற்கொண்ட செயற்பாடுகள் கவனமாக தெரிவு செய்யப்பட்டவை. இம்முறை நாம் மூலதன பொருட்களையோ, அத்தியாவசிய இறக்குமதிகளையோ அல்லது இடைநிலை பொருட்களையோ நாடவில்லை”

“நிலைமை இப்போது சுமுகமாகும் என்று நாம் நம்புகிறோம். நான் 20 நாடுகளில் பணி புரிந்துள்ளேன். ஆனால் இந்த நாட்டின் பணப் பரிமாற்ற விகிதம் அபூர்வமாக உள்ளது. ரூபாவின் மதிப்பு குறைந்தால் எமது பொருளாதாரம் சீர்குலையும் என்று மக்கள் நினைக்கின்றனர்.

ஆனால், எமது சேமிப்பு, வளர்ச்சி, பண வீக்கம் அனைத்துமே சரியாக உள்ள நிலையில் எவ்வாறு பொருளாதாரம் சீர்குலைய முடியும் என்றும் மத்திய வங்கி ஆளுநர் கேள்வி எழுப்பினார்.

No comments

Powered by Blogger.