Header Ads



ரூபா வீழ்ச்சியை கட்டுப்படுத்த, நடந்த முக்கிய கூட்டம்


நாட்டின் தற்போதைய பொருளாதார நிலை தொடர்பில் தேசிய பொருளாதார சபையில் கலந்துரையாடப்பட்டுள்ளது. 

அரச மற்றும் தனியார் துறையினர், பல்கலைக்கழக உபவேந்தர்கள் உள்ளிட்ட புத்திஜீவிகளின் பங்குபற்றலில் ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் தேசிய பொருளாதார சபை ஒன்றுகூடியது. 

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலை குறித்து புத்திஜீவிகளின் கருத்துக்கள் இதன்போது கேட்டறியப்பட்டதுடன், பல முன்னணி நிறுவனங்களின் தலைவர்கள் உள்ளிட்ட பிரதிநிதிகளும் இக்கலந்துரையாடலில் பங்குபற்றினர். 

மேலும் இலங்கை முதலீட்டு சபை, ஏற்றுமதி அபிவிருத்தி சபை மற்றும் சகல முதன்மை வர்த்தக சபைகளின் தலைவர்களும் மத்திய வங்கி உள்ளிட்ட அரச வங்கிகளினதும் தனியார் வங்கிகளினதும் பிரதிநிதிகளும் இந்த கலந்துரையாடலில் பங்குபற்றினர். 

நாட்டின் ஏற்றுமதி துறையை மேம்படுத்துதல் மற்றும் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைவதைத் தடுத்தல் தொடர்பாக இதன்போது விசேடமாக கவனம் செலுத்தப்பட்டது. 

ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைவதனைக் கட்டுப்படுத்துவதற்காக தற்போது மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக இதன்போது தெளிவுபடுத்தப்பட்டது. 

ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைவதில் வெளிப்புற காரணிகளே செல்வாக்கு செலுத்தி உள்ளதாகவும் இந்தியா, பாகிஸ்தான், மலேசியா, இந்தோனேசியா உள்ளிட்ட பல நாடுகள் இந்த நிலைமைக்கு முகங்கொடுத்துள்ளதாகவும் இதன்போது மத்திய வங்கியினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

ஏற்றுமதி துறையை மேம்படுத்துவதற்காக வழங்கக்கூடிய சலுகைகள் மற்றும் வாய்ப்புகள் குறித்து தேசிய பொருளாதார சபை தெளிவூட்டப்பட்டதுடன், வரிக்கொள்கை தொடர்பாகவும் பொருளாதார சபை கவனம் செலுத்தியுள்ளது. 

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர்கள் மங்கள சமரவீர, மஹிந்த சமரசிங்க, ஹர்ஷ த சில்வா, எரான் விக்கிரமரத்ன, ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர். செனவிரத்ன, தேசிய பொருளாதார சபையின் பொதுச் செயலாளர் பேராசிரியர் லலித் சமரக்கோன், மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி உள்ளிட்டோர் இந்த கலந்துரையாலில் பங்குபற்றினர். 

(ஜனாதிபதி ஊடக பிரிவு)

1 comment:

  1. ​செய்தியை வாசிக்கும் போது நிலைமையைக் கட்டுப்பாட்டில் கொண்டுவர எந்த ஆக்கபூர்வமான தீர்மானங்களும் எடுக்கப்பட்டதாக இல்லை. ஏன் உறுதியான தீர்மானங்களும் செயற்திட்டங்களும் இல்லாத மக்களின் நேரங்களைப் பாழடைந்து வீணாக்கும் இந்தவகையான கூட்டங்கள் தேவைதானா?

    ReplyDelete

Powered by Blogger.