Header Ads



இந்தோனீசியா நிலநடுக்க சுனாமி, பலி 1,234 ஆக உயர்வு - இடிபாடுகளிலிருந்து 34 மாணவர்களின் உடல்கள் மீட்பு


இந்தோனீசியாவின் சுலவேசி தீவை தாக்கிய நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் பலியானவர்களின் எண்ணிக்கை 1,234 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டின் தேசிய பேரிடர் முகமை தெரிவிக்கிறது.

முன்பு இந்த எண்ணிக்கை 844 ஆக இருந்தது.

முதலில் நினைத்தததைக் காட்டிலும் பாதிக்கப்பட்ட பகுதி பெரியதாக உள்ளது என அந்த முகமை தெரிவித்துள்ளது.

வெள்ளியன்று 7.5 என்ற அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இடிந்த கட்டடங்களின் இடிபாடுகளில் பலர் சிக்கியுள்ளனர் என முகமையின் செய்தி தொடர்பாளர் சுட்டோபோ பூர்வோ நுக்ரோஹோ செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த நிலநடுக்கம் 6 மீட்டர் உயரத்தில் சுனாமி அலைகளை உருவாக்கியது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்தோனீசியாவின் பாலு நகரில் இடிபாடுகளுக்கு மத்தியில் சிக்கியவர்களை மீட்புப் பணியாளர்கள் வெறும் கைகளோடு தேடி வருகின்றனர்.

மக்களின் நிலை

சுனாமி காரணமாக மக்கள் உணவு, தண்ணீர், எரிபொருள் இல்லாமல் தவிக்கின்றனர்.

தேவாலய இடிபாடுகளிலிருந்து 34 இந்தோனீசிய மாணவர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாக பிபிசியிடம் பேசிய இந்தோனீசிய செஞ்சிலுவை சங்கத்தினர் தெரிவித்தனர்.

இத்தனை பலிகள் ஏன்?

இந்தோனீசியாவின் சுலவேசி தீவில் மாலை 6.03க்கு 7.5 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன்பின் சுனாமியும் ஏற்பட்டது என அமெரிக்க கண்காணிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பாலு தீவில் திருவிழா ஒன்றுக்கு தயார் செய்து கொண்டிருந்த மக்கள் 3 மீட்டர் உயரத்துக்கு வந்த அலையில் அடித்துச் செல்லப்பட்டனர்.

உயிர்பிழைத்தவர்கள் என்ன சொல்கிறார்கள்?

"நிலநடுக்கம் ஏற்பட்ட போது நாங்கள் அனைவரும் பயந்து வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தோம் இங்குள்ள மக்களுக்கு உதவிகள் தேவைப்படுகின்றன. உணவு, குடிநீர் மற்றும் சுத்தமான நீர் தேவைப்படுகிறது; அடுத்த வேளை சாப்பிடுவதற்கும் எங்களுக்கு உணவில்லை" என நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட 39 வயது அன்சர் பாச்மிட் தெரிவித்தார்.

"எங்களை பாதுகாத்துக் கொள்ள எங்களுக்கு போதிய நேரம் இல்லை நான் சுவர்களின் இடிபாடுகளுக்கு மத்தியில் சிக்கிக் கொண்டேன்..எனது மனைவியும், குழந்தையும் உதவிகேட்டு அழுது கொண்டிருந்தனர் அவர்களுக்கு என்வாயிற்று என்று எனக்கு தெரியவில்லை. அவர்கள் பாதுகாப்பாக இருப்பார்கள் என்று நான் நம்புகிறேன்." என நிலநடுக்கத்தில் சிக்கிய நபர் ஒருவர் செய்தி முகமை ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.