Header Ads



"கொழம்பட்ட ஜன பலய" முஸ்லிம்களை சிங்களத்துக்குள் திணிக்கும் வியூகம்

"காலம்அறிந்து காரியம் செய்யின் ஞாலமும் கைகூடும்" என்பது முதுமொழி.எத்தனையோ அர்த்தங்கள் அடங்கிய இந்த முதுமொழிக்குள் அரசியலும் இழையோடியுள்ளது.நாட்டின் அண்மைக்கால அத்தனை நிகழ்வுகளையும் காலம் அறிந்து செய்யப்பட்டதாகக் கருத முடியாதுள்ளது. அண்மையில் மஹிந்த அணியினர் நடாத்திய "கொழம்பட்ட ஜன பலய" கொழும்பை நோக்கிய மக்கள் திரட்சிப் பேரணிக்குள் உள்ளடங்கிய அனைத்துமே அரசியல் வேட்கைக்கான வேட்டைகளே. ஆனால் இந்த வேட்டைகள் விலங்குகள் இல்லாத காட்டுக்குள் நடத்தப்பட்டுள்ளதா என்ற கேள்வியைப் பலருக்குள் ஏற்படுத்தியுள்ளது.

சுமார் ஒரு வருடங்களுக்குள் ஆட்சியைத் தீர்மானிக்கும் எந்தத் தேர்தல்களும் நடத்தப்படுவதற்கான சாத்தியங்களைக் காண முடியவில்லை. அவ்வாறு தேர்தல்களை நடத்தும் நிலைக்கு அரசு நிர்ப்பந்திக்கப்பட்டாலும் மாகாணசபைத் தேர்தலுக்கே அதிக சாத்தியங்கள் உள்ளன.

இந்நிலையில் அரசை வீழ்த்தும் அல்லது அசைக்கும் ஆர்ப்பாட்டம் மஹிந்த அணிக்கு ஏன் தேவைப்பட்டது.? இதுவே இன்று அனைவரையும் ஆழச்சிந்திக்க வைத்துள்ளன. 

சுமார் 75 வருட அரசியல் அனுபவமுள்ள ராஜபக்ஷ குடும்பத்தின் அரசியல் நகர்வுகளை இலேசாக மட்டிடவும் முடியாது. அவ்வாறு மட்டந் தட்டி மட்டிடுவது பக்கச்சார்பான ,அல்லது கட்சி சார்ந்த செயற்பாடுகளாகவே கருதப்படும். அவ்வாறெனில் ஆட்சியைப் பிடிப்பதற்காக மஹிந்த அணி இப்போதிருந்து தயாராகிறதா? இதற்கான வெள்ளோட்டமா "கொழம்பட்ட ஜன பலய" பேரணி. இவ்வாறு பல கோணங்களில் பல அரசியல் பார்வைகள் இன்றைய களத்தில் விரிகின்றன.  ராஜபக்ஷவுக்கு எதிரான முஸ்லிம் சமூகத்தின் சிந்தனைகளை வேறு பக்கத்திற்குத் திசை திருப்பும் முயற்சியாகவும் இதைப் பார்க்க முடியும். இவ்வாறான முயற்சிகள், நகர்வுகள் இற்றைக்கு இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. 

நல்லாட்சி அரசில் இடம்பெற்ற கண்டி, திகன,அம்பாறைச் சம்பவங்கள், ஞானசாரதேரரின் விடயத்தில் அரசுக்குள்ள மெல்லவும் முடியாத,விழுங்கவும் இயலாத இரு தலைக்கொள்ளி நிலைமைகள் இம் முயற்சியாளர்களை மேலும் உஷாராக்கியது. ஆனால் "கொழம்பட்ட ஜனபலய” பேரணியில் முஸ்லிம்கள் அதிகளவில் கலந்துகொண்டதாக காட்டப்படுவதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகள் சில விடயங்களை வெளிச்சத்துக்கு கொண்டுவந்துள்ளன.

 முஸ்லிம்களுக்கு தனித்த ஏக தலைமைத்துவம் இல்லாத நிலை, இலங்கை முஸ்லிம்களின் அரசியல் அபிலாஷைகள் புவியியல், பிரதேச ரீதியாக வேறுபட்டுள்ளமை, கிழக்கு முஸ்லிம்களின் அரசியல், தென்னிலங்கை முஸ்லிம்களிடமிருந்து தனியாக பிரிந்து செல்ல வேண்டியதன் அவசியங்கள் என்பவற்றையும் இவ்வார்ப்பாட்டம் வெளிப்படுத்தியுள்ளது. 

மஹிந்தவின் ஒரு தசாப்த ஆட்சியில் முப்பது வருட யுத்தத்தை முடிவுறுத்தியமை அவரைத் தேசத் தலைவராக்கிற்று. குறிப்பாக போரில் அவர் ஈட்டிய சாதனை சிங்கள தேசத்தின் வீரனாகவும் அவருக்கு மகுடம் சூட்டியுள்ளது . இதை மறக்கடிக்கவும் , மறைக்கவும் ராஜபக்ஷ யுகத்தின் மீது, இந்த அரசாங்கம் பல குற்றங்களை அடுக்கிச் சென்றாலும் தென்னிலங்கையில் மஹிந்தவின் மவுசை கணிசமாகக் குறைக்க முடியாதுள்ளமை அரசுக்கு ஏற்பட்ட தோல்வியே. அதேபோன்று சிறுபான்மைச் சமூகங்களின் நம்பிக்கையை மீளப்பெற முடியாது ராஜபக்ஷ அணி தடுமாறுவதும், அவர்கள் எதிர் காலத்தில் ஆட்சிபீடமேறுவதற்கான சந்தர்ப்பங்களைத் தூரப்படுத்துகின்றன. இதை நன்கு உணர்ந்த ராஜபக்ஷ சகோதரர்கள் சிங்கள தேசியத்தை விழிப்பூட்டவும், முஸ்லிம்களை சிறுபான்மைக் கட்சிகளின் தலை மையிலிருந்து விடுவிக்கவுமே இவ்வாறான பேரணிகளை ஏற்பாடு செய்கின்றனர் . இத்தனைக்கும் அடுத்த ஆர்ப்பாட்டம் கண்டியில் நடத்தவும் ஏற்பாடாகி உள்ளது. 

நாட்டில் மொத்தமாகவுள்ள சுமார் இருபது இலட்சம் முஸ்லிம்களில் சுமார் 13 இலட்சம் பேர் தென்னிலங்கையிலே வாழ்கின்றனர். இங்குள்ள முஸ்லிம்களை உளவியல் ரீதியாகப் பயமுறுத்தும் நாடகமாவும் "கொழம்பட்ட  ஜன பலய" வைப் பார்க்க முடியும். சிங்கள தேசத்து வீரனுக்கு எதிராகச் சிந்திக்கும் சிறுபான்மையினர் தென்னிலங்கையில் துரோகிகளாகப் பார்க்கப்படும் சூழலை ஏற்படுத்தி விட்டால், ராஜபக்ஷ அணியினரின் கணக்குகள் சரியாகி விடும். எண்பது வீதச் சிங்கள வாக்குகளில் அறுபது வீதத்தைப் பெறுவது, மீதமுள்ள சிறுபான்மை வாக்குகளில் பத்துவீதத்தை பயமுறுத்தியோ, அல்லது நண்பர்போல் பாசாங்கு செய்தோ பெறுவது இதுவே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் திட்டம். திட்டங்கள் யாவும் தென்னிலங்கையிலே அமுலாகவுள்ளன. 

அம்பாரையில் தனியலகு கோரும், முஸ்லிம் களையும், வடக்கில் தனி ஈழம் நாடும் தமிழர்களையும் பிரிவினைவாதிகளாகக் காட்டுவதில் ராஜபக்ஷக்கள் கவனமாகவுள்ளனர்.இவ்வாறு காட்டுவதனூடாக தென்னிலங்கை சிறுபான்மையினரை,  சிங்கள கடும்போக்காளர்களின் கண்காணிப்புக்குள் கொண்டுவருதே ராஜபக்ஷக்க ளின் ராஜதந்திரமாகவுள்ளது.

கிழக்கு முஸ்லிம்களை வலைவீசி வீழ்த்துவதை விட தென்னிலங்கை முஸ்லிம்களை வசீகரித்துப் பெறுவது,அல்லது அச்சுறுத்தி அரவணைப்பது ராஜபக்ஷ அணிக்கு இலகுவானது. உண்மையில் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தென்னிலங்கை முஸ்லிம்களுக்காகவே, கிழக்கு முஸ்லிம்கள் மஹிந்தவை எதிர்த்தனர். எனினும் மஹிந்தவின் ஆட்சியில் கிழக்கு முஸ்லிம்களுக்கு ஓரளவு நிம்மதியே நிலவியது. 


மத உணர்வுகள் புண்படுத் தப்பட்டாலும் இருப்புக்கான அச்சுறுத்தல்கள் கிழக்கில் இல்லாதிருந்தன. இந்நிலையில் வில்பத்து விவகாரத்திலோ அல்லது கிழக்கு முஸ்லிம்களின் தனியலகு, அல்லது நிர்வாக விடயத்திலோ தென்னிலங்கை முஸ்லிம்கள் கிழக்கு முஸ்லிம்களுடன் இணைந்து குரல்கொடுக்க தயங்குவது ஏன்? சிங்கள கடும்போக்காளர்கள் மத்தியில் பிரிவினைவாதிகளுக்குத் துணை போவதாகக் காட்டப்படலாம் என்ற அச்சமே இவ்விடயங்களில் தென்னிலங்கை முஸ்லிம்களை மௌனிக்க வைக்கின்றன. இப்பலவீனத்தையே சிங்கள கடும் போக்குவாதம் ஒரு கருவியாகப் பாவித்து, திடீர்பாய்ச்சலுக்குத் தயாராகிறது. பேருவளையில் கோத்தபாயவை அழைத்து இப்தார் வழங்கிய முஸ்லிம்கள் கிழக்கு முஸ்லிம்களின் மனநிலைகளைப் புரிய மறந்துள்ளனரா? அல்லது மறுக்கின்றனரா என்ற கேள்வியை முஸ்லிம் தலைமைகள் சிரமேற்கொள்ள வேண்டிய தருணமே இது. இதற்கான தெளிவான விடைகளின் தெரிவிலே தனித்துவ தலைமைகள் முஸ்லிம்களை வழிநடத்த வேண்டியுள்ளன. என்னவானாலும் தமிழக, கர்நாடக நீர்ப் பிரச்சினை போன்று இலங்கையின், கிழக்கு,தெற்கு முஸ்லிம்களின் பிரச்சினைகள் புவியியல் வேறுபாடுகளுக்கு ஏற்ப வித்தியாசமாக உள்ளதையே உணர முடிகின்றன. எனவே வடக்கு,கிழக்கை மாத்திரம் செயற்படு தளமாகக் கொண்ட ஒரு தனித்துவ தலைமையின் தேவை இதற்குப் பின்னர் முஸ்லிம்களிடத்தில் உணரப்படுமா என்பதே இன்றுள்ள கேள்வி.

1 comment:

  1. இவற்றுடன் தேர்தலுக்கு முன்னம் ராஜபக்ச குடும்பதினரை கைதுசெய்வது ஆபத்து என்கிற சூழலை உருவாக்குவதும் கொழும்பு பேரணியின் நோக்கமாக இருக்கவேணும். ஏனெனில் அதற்க்கான முயற்சிகள் உள்ளன. தெற்க்கு முஸ்லிம்களும் வடகிழக்கு முஸ்லிம்கள் தனி தனி அலகுகளாக உருவாகுவதை 1970பதுகளின் பிற்பகுதியில் இடம்பெற்ற எனது “தேசிய இனப்பிரச்சினையும் முஸ்லிம் மக்களும்” ஆய்வில் நிறுவியுள்ளேன். இதை கையெழுத்துபிரதியாக வாசித்த தோழர் அஸ்ரப் அவர்கள் இப்புத்தகம் தன்னை பாதித்ததாக குறிப்பிட்டிருக்கிறார். இப்புத்தகம் 1983ல் நூலுருபெற்றது. இதனை யப்னா முஸ்லிம் சஞ்சிகை மறு பிரசுரம் செய்தால் மகிழ்வேன்.

    https://www.facebook.com/photo.php?fbid=10155935389189332&set=pob.754614331&type=3&theater

    ReplyDelete

Powered by Blogger.