Header Ads



இதற்குத்தானா இவ்வளவு நாளும் நான், கஷ்டப்பட்டு பணம் சம்பாதித்தேன்...?


நான் படுக்கையில் கிடக்கிறேன். என்னுடைய பிள்ளைகள், சகோதரர்கள், சகோதரிகள் அனைவரும் என்னருகில் கவலை தோய்ந்த முகத்துடன் அமர்ந்திருக்கின்றனர்.

என்னுடைய நெருங்கிய நண்பர்களும் என்னைச் சூழ்ந்து நின்றுகொண்டு என் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

திடீரென்று எனது மூச்சு பெரிதாக இழுத்தது. பெரும் மூச்சாக இழுத்து இழுத்து விட்டேன். எனது நிலைமை மோசமாவதைக் கண்ட சிலர் யாசீன் சூராவை ஓத ஆரம்பித்தனர்.

மூச்சு இப்பொழுது கொஞ்சம் இலேசானது. எனது கண்களைத் திறக்கிறேன். ஏதோ ஒன்றை எனது கண்கள் காண்கின்றன. ஆம்! வந்துவிட்டார். மரணத்தின் வானவரான மலக்குல் மவ்த் வந்துவிட்டார்.

நிரந்தரப் பயணத்தை நான் ஆரம்பிக்கப் போகிறேன். எனது வாய் திறந்தது. என் சகோதரன் சில துளிகள் தண்ணீரை எனது வாயில் ஊற்றுகிறான். அது அநேகமாக “ஜம் ஜம்” தண்ணீராக இருக்கும். மரணத் தறுவாயில் எனது வாயில் ஊற்ற வேண்டும் என்பதற்காக நான் அதனைப் பாதுகாத்து வைத்திருந்தேன்.

அனைவரும் “லாஇலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்” என்று மொழிய ஆரம்பித்தனர். எனது பார்வை பறி போய் விட்டது. எனது நாடி நரம்புகளெல்லாம் அடங்கிப் போய் விட்டன. எனது உணர்வுகளும் மங்கி மரத்துப் போய் விட்டன.

ஆனால் என்னால் இப்பொழுதும் கேட்க மட்டும் முடிகிறது. என் அன்புக்குரியவர்கள் அழும் சப்தம் கேட்கிறது. நான் இன்னும் இறக்கவில்லை. ஆனால் உயிரற்ற ஜடமாக ஆகி விட்டேன்.

எனக்குள்ள நேரம் வந்தது. ஒரு நிமிடம் முந்தவும் இல்லை. பிந்தவும் இல்லை. காத்திருந்த மலக்குல் மவ்த் அவரது கடமையைச் செய்ய ஆரம்பித்தார். விசுக் என்று என் உயிரைப் பிடுங்கினார். என் உடல் சட்டென்று குலுங்கி அடங்கியது.

அவ்வளவுதான். எல்லாம் முடிந்து விட்டது. நான் இவ்வுலகை விட்டுப் பிரிந்து விட்டேன். என்னை வழியனுப்பி வைப்பதற்குள்ள ஏற்பாடுகள் ஆரம்பமாயின.

நான் மாடாய் உழைத்து சேர்த்த சொத்துகள், வங்கித் தொகைகள், அனுபவித்த விலை உயர்ந்த கார்கள், வாழ்நாள் முழுவதும் நான் சேகரித்த எனது தொடர்புகள் அனைத்தும் இனி எனக்கு எந்தப் பயனையும் அளிக்கப் போவதில்லை.

இனி எனது அடையாளம் என் கப்று மட்டும்தான். ஓ.... எனது பெயரும் மாற்றப்பட்டு விட்டது. என் பெற்றோர் பல நாட்கள் ஆலோசனை செய்து தேர்ந்தெடுத்த எனது பெயர், அவர்கள் வாயால் கூவிக் கூவி அழைத்து மகிழ்ந்த அந்தப் பெயர் மாற்றப்பட்டு விட்டது. இப்பொழுது எனது பெயர் ஜனாஸா!

அதாவது, இறந்த உடல்!

எனக்கு நெருங்கியவர்கள் எனது கப்றை வெட்டுவதற்கான ஏற்பாடுகளில் இறங்கியுள்ளார்கள். ஜனாஸாவை நீண்ட நேரம் வீட்டுக்குள் வைக்கக்கூடாதாம். அவர்களுக்குள் பேசிக் கொள்கின்றனர்.

வீடு... என்னை இப்பொழுது நீண்ட நேரம் வைத்துக்கொள்ள அனுமதியில்லாத இந்த வீட்டை நான்தான் கட்டினேன். பல கனவுகளுடன் பார்த்துப் பார்த்து இலட்சக் கணக்கில் செலவு செய்து கட்டினேன்.

என்னைக் குளிப்பாட்ட ஏற்பாடு நடக்கிறது. நான் வீட்டுக்கு வெளியே குளிப்பாட்டுவதற்காக எடுத்துச் செல்லப்படுகிறேன். நான் பார்த்துப் பார்த்து கட்டிய வீட்டில், நான் அழகுற கட்டிய குளியலறையில் எனக்கு குளிக்க அனுமதியில்லை.

குளியலறையை சொகுசாகப் பயன்படுத்தவேண்டும் என்பதற்காக விலையுயர்ந்த பொருட்களை வாங்கி அங்கே பொருத்தினேன். அவையெல்லாம் இனி எனக்கு சொந்தமில்லை. இந்த நிலையில் எனக்குப் பயன்படாத இந்தப் பொருட்களை நான் ஏன் வாங்கினேன்?

குளிப்பாட்டி முடிந்தது. என்னை வெள்ளைத் துணியில் சுற்றினார்கள். விலையுயர்ந்த என் ஆடைகளெல்லாம் எங்கே போய் விட்டன?

என்னை சந்தூக்கில் வைத்தார்கள். எனது விலையுயர்ந்த ஏசி கார் ஒரு பக்கம் கம்பீரமாக நின்று கொண்டிருந்தது. அது இப்பொழுது எனக்கில்லை. எனக்குக் கிடைத்திருப்பதெல்லாம் இந்த மரப் பெட்டிதான்!

இதற்குத்தானா நான் இவ்வளவு நாள் கஷ்டப்பட்டு பணம் சம்பாதித்தேன்? இப்பொழுது எந்தப் பயனும் தராத இந்தப் பணத்தைச் சம்பாதிப்பதற்குத்தான் நான் எத்தனை பொய்கள் சொன்னேன்! எல்லாம் வீணாகப் போய் விட்டது. நான் என் வாழ்க்கையைத் தொலைத்து விட்டேன். எனது இறுதிப் பயணத்தை சுத்தமாக மறந்து வாழ்ந்தேன்.

ஆனால் அது உறுதியானது, மிக நெருங்கியது என்று எனக்குத் தெரியும். இருந்தாலும் அதனை மறந்து உலக மாயையில் மூழ்கிப் போனேன். பாவங்களில் பழகிப் போனேன்.

ஆனால் இன்றோ.... எனது விளையாட்டு முடிந்து விட்டது.

இது எனக்கு மட்டுமல்ல. உங்கள் எல்லோருக்கும்தான். நீங்கள் எல்லோரும் இதே நிலையை ஒரு நாள் அடையத்தான் போகிறீர்கள்.ஒரு நாள் உங்களுக்கு இந்த உலகம் ஒரு சிறிய கனவு போல் கலைந்து விடும். எனக்கு நேர்ந்தது போல் உங்களுக்கும் நடக்கும். உங்கள் உயிர்களும் ஒரு நாள் பிடுங்கப்படும்.

ஆதலால் தயாராக இருந்துகொள்ளுங்கள். நன்மைகளைக் கட்டி வைத்துக்கொள்ளுங்கள். அது ஒன்றுதான் உங்களுக்கு உதவும். உங்கள் இறுதிப் பயணத்தை இன்பமயமாக மாற்றும். மறுமை வாழ்வை மகிழ்ச்சிகரமாக மாற்றும்.

மரணத்தை மறவாதீர்கள். அது நிச்சயம் வந்தே தீரும். அது உங்களை இதோ நெருங்கி விட்டது.

ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆக வேண்டும். அன்றியும், இறுதித் தீர்ப்புநாளில்தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதிபலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும். எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார். இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை. (சூரா ஆல இம்ரான் 3:185)

MSAH



1 comment:

  1. "...மரணத் தறுவாயில் ஒருவனின் (உயிர்) தொண்டைக் குழியை அடையும் போது - அந்நேரம் நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.

    ஆயினும், நாமோ அவனுக்கு உங்களை விட சமீபமாக இருக்கிறோம். எனினும் நீங்கள் பார்க்கிறீர்களில்லை.

    எனவே, (மறுமையில் உங்கள் செயல்களுக்கு) கூலி கொடுக்கப்பட மாட்டீர்கள் என்று இருந்தால் -

    நீங்கள் உண்மையாளராக இருப்பின், (அவ்வுயிரை) மீளவைத்திருக்கலாமே!... "

    (சூரா அல் வாகிஆ 56: 83-87)

    ReplyDelete

Powered by Blogger.