Header Ads



'என்னை மன்னித்து விடுங்கள்', இலங்கையரிடம் கெஞ்சிய கோஹ்லி


இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோஹ்லி, ஆரம்ப காலத்தில் தான் செய்த தவறுகளை தற்போது நினைவுகூர்ந்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைவராக சிறப்பாக செயலாற்றி வரும் விராட் கோஹ்லி, ஆடுகளத்தில் ஆக்ரோஷமாக விளையாடுவதில் புகழ்பெற்றவர்.

ஆனால், இவர் இந்திய அணிக்கு அறிமுகமானபோது இவரது ஒரு சில நடவடிக்கைகள் சர்ச்சைகளை உண்டாக்கியுள்ளன. குறிப்பாக ஆரம்பகட்டத்தில் கோஹ்லி எதிரணி வீரர்களை தகாத வார்த்தைகளால் சீண்டுவது, அவர்கள் ஏதாவது கூறினால் பதிலடி கொடுப்பது என்பவை குறிப்பிடத்தக்கது.

எனினும், இந்திய அணியின் தலைவராக பொறுப்பேற்ற பிறகு பல வெற்றிகளை குவித்தார். தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இந்திய அணி தொடரை இழந்துள்ளது.

இவ்விரு அணிகளுக்கும் இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி வரும் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. இந்நிலையில், இங்கிலாந்து ஊடகங்களை சந்தித்த விராட் கோஹ்லி தனது பழைய நினைவுகளை பகிர்ந்துள்ளார்.

விராட் கோஹ்லி கூறுகையில், ‘2012யில் அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் போட்டியில் விளையாடி வந்தோம். சிட்னியில் நடைபெற்றப் போட்டியில் நான் பவுண்டரி அருகே பீல்டிங் செய்து கொண்டிருந்தேன்.

அப்போது அவுஸ்திரேலிய ரசிகர்கள் என்னை தகாத வார்த்தைகளில் சீண்டிக் கொண்டிருந்தனர். நான் அவர்களை அவமானப்படுத்தும் நோக்கில் என் நடுவிரலை காட்டினேன்.

பின்பு, மறுநாள் போட்டி நடுவர் ரஞ்சன் மதுகலே என்னை அவரின் அறைக்கு அழைத்தார். என்னிடம் நேற்று பவுண்டரி அருகே என்ன நடந்தது என்று கேட்டார். நான் ஒன்றும் இல்லை என கூறினேன். உடனே நாளிதழை என் முன்னே காட்டினார், அதில் நான் ரசிகர்களை நோக்கி நடுவிரலை காட்டிய புகைப்படம் பெரிதாக வெளியாகி இருந்தது.

நான் பதறிவிட்டேன். உடனே, ரஞ்சன் மதுகலேவிடம் என்னை மன்னித்து விடுங்கள் தெரியாமல் செய்துவிட்டேன். என்னை போட்டியில் விளையாட தடை விதித்துவிடாதீர்கள் என கெஞ்சினேன். அதிர்ஷ்டவசமாக நான் அவரால் தண்டிக்கப்படவில்லை. ரஞ்சன் மிகவும் நல்ல மனிதர்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் கோஹ்லி கூறுகையில், ‘நான் என் கடந்த காலத்தை நினைத்து பார்க்கும்போது மிகவும் சிரிப்பாக இருக்கும். நான் எவ்வளவு தவறு செய்திருக்கிறேன், என் தவறுகளை ஏற்று மன்னித்தவர்களால் தான், என்னை என்னால் மாற்றிக் கொள்ள முடிந்தது.

ஆசிரியர் தினம் என்பதால் என்னுடைய முதல் பயிற்சியாளர் ராஜ்குமார் ஷர்மாவை நினைவு கூறுகிறேன். ஒரு தந்தையைப் போல என்னை அவர் வழிநடத்தினார். இப்போது உள்ள இளைஞர்கள் தவறு செய்கிறார்கள். ஆனால் அந்த தவறு ஒரு முறைக்கு மேல் இருக்கக் கூடாது.

தவறில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு வாழ்க்கையில் முன்னேற வேண்டும். இளமை பகுதி வாழ்க்கையை மாற்றியமைக்கும் முக்கியமான கட்டம் என்பதை மறக்கக் கூடாது’ என தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.