Header Ads



உள்நாட்டுப் பிரச்சினையைத் நாங்களே தீர்க்கிறோம், அதற்கு இடமளியுங்கள் - ஐ.நா.வில் மைத்திரி

யுத்தம் நிறைவடைந்து 10 வருடங்கள் கடந்துள்ள பின்னணியில் போருக்குப் பின்னரான பொறுப்புக்களை உரியவாறு நிறைவேற்றிவரும் இந்த சந்தர்ப்பத்தில் எமது தாய்நாட்டை புதியதோர் கோணத்தில் பாருங்கள் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய நாடுகள் சபையிலிருந்து உலக மக்களுக்கு அழைப்பு விடுத்தார்.

ஐக்கிய நாடுகளின் 73 ஆவது பொதுச்சபை கூட்டத்தொடரின் பிரதான அமர்வில் கலந்துகொண்டுள்ள ஜனாதிபதி,இலங்கை நேரப்படி இன்று அதிகாலை ஆற்றிய விசேட உரையின் போதே இந்த அழைப்பை விடுத்தார்.

ஜனநாயகம், மனித உரிமைகள், அடிப்படை உரிமைகள் மற்றும் ஊடக சுதந்திரத்திற்கான விரிவான பொறுப்புக்களை நிறைவேற்றிய, நிறைவேற்றிவரும் நாடு என்ற வகையில் மனித உரிமைகள் தொடர்பான பிரச்சினைகளில் ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சகல நாடுகளினதும் ஒத்துழைப்பினை தொடர்ந்தும் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.

கடந்த மூன்றரை வருட காலத்திற்குள் யுத்தத்தின் பின்னரான காலத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய பொறுப்புக்களை உரியவாறு நிறைவேற்றுவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட எமது அரசாங்கம், தேசிய சமாதானம், நல்லிணக்கம் மற்றும் நாட்டில் மீண்டும் ஒரு யுத்தம் ஏற்படுவதைத் தடுத்தல் போன்ற நோக்கங்களுடன், விரிவான வேலைத்திட்டங்களை செயற்படுத்தி வருகின்றது என ஜனாதிபதி குறிப்பிட்டார்.

எமது பாதுகாப்பு படையினரால் உலகின் பிரபல பயங்கரவாத இயக்கமே தோற்கடிக்கப்பட்டுள்ளது என்பதுடன், இன்று எமது நாடு பிரிக்கப்படாத, ஒற்றுமையான தேசமாகக் காணப்படுவதற்கு எமது இராணுவத்தினரால் நிறைவேற்றப்பட்ட அந்த யுகப் பணியே காரணமாகும் என தெரிவித்த ஜனாதிபதி, நாட்டின் ஐக்கியத்தை பாதுகாப்பதற்காக பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட அந்த அர்ப்பணிப்பினை என்றும் கௌரவத்துடன் நினைவுகூருவதாக தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, நாட்டின் சுயாதீனத் தன்மை இன்றியமையாதது என வலியுறுத்தினார்.

எனவே நாட்டின் சுயாதீனத் தன்மையைப் பாதுகாத்து, ஜனநாயத்தையும் மனித உரிமைகளையும் பாதுகாப்பதற்காக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு நல்குமாறு வேண்டுகோள் விடுத்ததுடன், நீண்டகால யுத்தத்தின் கொடிய அனுபவங்களின் வேதனையை சுமந்துள்ளவர்கள் வேறு யாருமன்றி எமது மக்களே எனவும் தெரிவித்தார்.

ஆகையினால் நாட்டின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தமக்கு இடமளிக்குமாறும் சகலரிடமும் இதன்போது ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்தார்.

அதேபோன்று ஏற்பட்டுள்ள சிக்கலான நிலைமைக்கு தீர்வு காண்பதற்கு அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் முக்கியமானதாகும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, ஒரு சுயாதீன நாடு என்ற வகையில் எந்தவித வெளிநாட்டு அழுத்தங்களோ அச்சுறுத்தல்களோ எமது நாட்டுக்கு அவசியமல்ல எனவும் தெரிவித்தார்.

மேலும் இற்றைக்கு மூன்றரை வருடங்களுக்கு முன் காணப்பட்ட நிலைமையை விட முற்றிலும் மாறுபட்ட மனிதநேய, பரிபூரண சமூகத்துடன் கூடிய சூழலே தற்போது இலங்கையில் காணப்படுவதாக ஜனாதிபதி இதன்போது தொடர்ந்தும் வலியுறுத்தினார்.

சர்வதேச அரசியல் போக்குகள் தொடர்பாக இதன்போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, அகதிகள் தொடர்பான பிரச்சினையில் ஐக்கிய நாடுகள் சபையும் அதன் உறுப்பு நாடுகளும் நிறைவேற்றும் செயற்பணிகள் மேலும் விரிவானதாகவும் வலுவானதாகவும் அமைய வேண்டும் என குறிப்பிட்டார்.

இலங்கையின் அணிசேரா வெளிநாட்டு கொள்கை தொடர்பாக கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, விசேடமாக பலஸ்தீன மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கு இலங்கை அரசாங்கம் என்றும் ஒத்துழைப்பு வழங்கியதுடன், பலஸ்தீன மக்களுக்கு ஏற்பட்ட அசாதாரண நிலைமைகளை கருத்திற்கொண்டு அம்மக்களின் உரிமைக்காக ஐக்கிய நாடுகள் சபையும் அதன் உறுப்பு நாடுகளும் விரிவான செயற்பணிகளை நிறைவேற்ற வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

வறுமை நிலையை இல்லாதொழிப்பதற்காக ஐக்கிய நாடுகள் சபை இதனை விட விரிவான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என ஜனாதிபதி பொதுச்சபை அமர்வில் ஆற்றிய விசேட உரையில் வலியுறுத்தினார்.

காலநிலை மற்றும் வானிலை மாற்றங்களும் வறுமை நிலை உயர்வடைவதற்கு முதன்மை காரணியாக அமைந்துள்ளதுடன், காலநிலை, வானிலை மாற்றங்களை அதிகளவில் எதிர்நோக்க நேர்ந்துள்ள நாடுகளை சேர்ந்த மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்காக உதவிகளை வழங்க வேண்டியதன் முக்கியத்துவத்தை ஐக்கிய நாடுகளி்ன் பொதுச்சபையில் வலியுறுத்திய ஜனாதிபதி, இன்று மானிட சமூகத்திற்கு அச்சுறுத்தலாகவுள்ள சட்ட விரோத போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற அமர்வின்போது ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட இணக்கப்பாடு தொடர்பாகவும் மகிழ்ச்சி தெரிவித்தார்.

சுற்றாடலை பாதுகாப்பதற்காக பாரிஸ் மாநாட்டில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட உடன்படிக்கைகளை நடைமுறைப்படுத்த ஐக்கிய நாடுகள் சபையின் சகல நாடுகளும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதுடன், இலங்கை அவ்விடயம் தொடர்பில் அதிக முன்னுரிமையளித்து செயற்படுவதாகவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.



ஐக்கிய நாடுகளின் 73 ஆவது பொதுச்சபை கூட்டத்தொடரின் பிரதான அமர்வு “ஐக்கிய நாடுகள் சபையுடன் சகல மக்களையும் அணுகச் செய்தல், நீதியும் அமைதியும் பேண்தகு தன்மையும் கொண்ட சமூகத்திற்கு உலகளாவிய தலைமைத்துவத்தின் ஒன்றிணைந்த பொறுப்பு” என்ற தொனிப்பொருளில் நியூயோர்க் நகரிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையத்தில் தற்போது இடம்பெற்று வருவதுடன், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உள்ளிட்ட உலக தலைவர்கள் இதில் பங்குபற்றியுள்ளனர்.

No comments

Powered by Blogger.