அமெரிக்காவால் எம்மை, அச்சுறுத்தி அடிபணியவைக்க முடியாது - எர்டோகன் சூளுரை
அமெரிக்காவால் துருக்கியை அச்சுறுத்தி அடிபணிய வைக்க முடியாது என துருக்கிய ஜனாதிபதி தாயிப் எர்டோகன் சூளுரைத்துள்ளார்.
துருக்கியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அமெரிக்க மதபோதகர் ஒருவரை விடுதலை செய்வதற்கு அந்நாடு தொடர்ந்து மறுப்புத் தெரிவித்து வருகின்ற நிலையில் அந்நாட்டிற்கும் அமெரிக்காவுக்குமிடையிலான முறுகல் நிலை அதிகரித்து வருகிறது.
மேற்படி மதபோதகர் விவகாரம் குறித்து அமெரிக்கா துருக்கி மீது வர்த்தகத் தடைகளை முன்னெடுத்துள்ள நிலையில் துருக்கியும் தனது பங்கிற்கு அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் இலத்திரனியல் பொருட்கள் மீதான சுங்க வரியை அதிகரித்துள்ளது.
இந்நிலையில் தனது ஆளும் நீதி மற்றும் அபிவிருத்திக் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் உரையாற்றிய எர்டோகன், "எம் மீது தந்திரோபாய ரீதியில் இலக்குவைக்க முயற்சிக்கும் அதேசமயம் தம்மை எமது தந்திரோபாய பங்காளர்களாக காண்பிப்பவர்களிடம் நாம் சரணடையப் போவதில்லை. சிலர் எமக்கு பொருளாதாரம், தடைகள் , வெளிநாட்டு நாணயமாற்று வீதங்கள் மற்றும் வட்டி வீதங்கள் என்பவற்றால் அச்சுறுத்தல் விடுக்கின்றனர். நாங்கள் உங்கள் தந்திர வித்தைகளை அறிவோம். நாங்கள் உங்களை எதிர்த்து நிற்போம்" என்று தெரிவித்தார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் துருக்கியிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அலுமினியம் மற்றும் உருக்கிற்கான சுங்க வரிகளை இரு மடங்காக அதிகரிக்கப் போவதாக அண்மையில் அறிவித்ததையடுத்து துருக்கியின் நாணயமான லிராவின் பெறுமதியானது வீழ்ச்சியடைந்தது. இதனையடுத்து துருக்கி அநேக அமெரிக்க இறக்குமதிகள் மீது சுங்க வரிகளை அதிகரிக்க நடவடிக்கை எடுத்தது.
இந்நிலையில் துருக்கி எல்லையைக் கடந்த இராணுவ செயற்பாடுகளை விரிவுபடுத்த அழுத்தம் கொடுக்கவுள்ளதாக எர்டோகன் ஆளும் கட்சிக் கூட்டத்தில் உரையாற்றுகையில் மேலும் தெரிவித்தார்.
துருக்கி இரு வருடங்களுக்கு முன்னர் சிரியாவில் அமெரிக்கா தலைமையிலான கூட்டமைப்பு நாடுகளின் ஆதரவுடன் செயற்படும் சிரிய ஜனநாயகப் படையின் முதுகெலும்பாகவுள்ள குர்திஷ் மக்கள் பாதுகாப்பு படைப் பிரிவினருக்கு எதிராகப் போராட தனது படையினரை அனுப்பி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment