Header Ads



மைத்திரிபாலவை சந்தித்ததனால், அரசியல் புரட்சி ஏற்படாது - மகிந்த

பௌத்த விகாரைகளை அடிப்படையாக கொண்டே சமூகம் கட்டியெழுப்பட்டுள்ளதாகவும் எனினும் அண்மைய காலமாக அந்த நிலைமையை மாற்ற பௌத்தர்களே முன்வந்திருப்பது கவலைக்குரிய விடயம் எனவும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டையில் இன்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதியின் இளைய சகோதரர் சந்திரா டியூடர் ராஜபக்சவின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மெதமுலன வீட்டுக்கு நேற்று வந்திருந்தமை குறித்து ஊடகவியலாளர்கள், மகிந்த ராஜபக்சவிடம் வினவினர்.

இதற்கு பதிலளித்த மகிந்த ராஜபக்ச, தற்போதைய ஜனாதிபதியை தனிப்பட்ட ரீதியில் தான் நன்கு அறிந்தவர் எனவும், பல காலங்கள் ஒன்றாக இணைந்து அரசியலில் ஈடுபட்டதன் காரணமாக தனது கடமையென நினைத்து ஜனாதிபதி வந்திருக்கலாம் எனவும் கூறியுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தன் காரணமாக அரசியல் புரட்சி ஏற்படாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை ஜனாதிபதி நியமித்த குழு ஒன்று தாக்கல் செய்த அறிக்கையை அரசாங்கம், நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ததாகவும், பிரதமரின் அறிவுறுத்தல்களுக்கு அமைய அதனை தோற்கடித்துள்ளனர் எனவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இறுதியில் ஜனாதிபதி முன்வைத்த அறிக்கையை அரசாங்கமே தோற்கடித்துள்ளது. எல்லை நிர்ணய அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதன் பின்னர், அதற்கான பொறுப்பு பிரதமருக்கே இருக்கின்றது. இதனால், பிரதமர் தனது பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என்றும் மகிந்த ராஜபக்ச மேலும் கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.