Header Ads



இளஞ்செழியன் விதித்த 2 மரண தண்டனைகளை, ரத்துச்செய்ய ஜனாதிபதியிடம் கோரிக்கை

இலங்கை இராணுவத்தினர் இருவருக்கு இலங்கையில் பிரசித்தி பெற்ற தமிழ் நீதிபதி இளஞ்செழியன் மரண தண்டனை விதித்துள்ளதால் அவர்களுடைய குடும்பத்தினர் மிகவும் கவலையில் இருக்கின்றனர்.

இவர்கள் இருவருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொது மன்னிப்பு வழங்க வேண்டும் என தாய்நாட்டுக்கான படையினர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஓய்வுபெற்ற மேஜரான சட்டத்தரணி அஜித் பிரசன்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

மரண தண்டனை விதிக்கப்பட்ட இருவரும் தற்போது போகம்பறை சிறையில் உள்ளனர். மஹநுவர மற்றும் அனுராதபுரத்தைச் சேர்ந்த இருவருக்கே மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

யுத்தத்திற்கு சென்று உயிரை பணயம் வைத்து நாட்டுக்காக போராடிய இருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட காரணத்தினால் இவர்களது குடும்பத்தினர் பெரும் துயரத்தில் உள்ளனர்.

யுத்த காலத்தில் சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைது செய்து விசாரணை செய்ய முடியும். அந்த வகையிலலேயே கொலை செய்யப்பட்டதாக குறிப்பிடப்படும் ஞானசிங்கம் என்டன் குணசேகரம் என்ற நபரை குறித்த இராணுவ வீரர்கள் யாழ். பொது வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று பாரப்படுத்தியுள்ளனர்.

இதை மட்டுமே இவர்கள் செய்தார்கள். அவர்கள் நினைத்திருந்தால் ஞானசிங்கம் என்டன் குணசேகரம் என்பவரை கொலை செய்து தடயங்கள் இல்லாமல் உடலை அழித்திருக்க முடியும்.

ஆனால் அவர்கள் அப்படி செய்யவில்லை. இவர்கள் வைத்தியசாலையில் பாரப்படுத்தியது மட்டுமே இவர்கள் செய்தது.

இதற்காக மூன்று இராணுவத்தினர் கைது செய்யப்பட்டு விசாரணைகள் நடைபெற்ற நிலையில் நேற்று நீதிபதி இளஞ்செழியனால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த மரண தண்டனையை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. சற்றும் சகித்துக்கொள்ளவும் முடியாது.

தன்னை கொலை செய்ய வந்த நபருக்கே பொது மன்னிப்பு வழங்கிய ஜனாதிபதி இவர்களுக்கும் பொது மன்னிப்பு வழங்க வேண்டும் என சட்டத்தரணி அஜித் பிரசன்ன கோரிக்கை விடுத்துள்ளார்.

No comments

Powered by Blogger.