Header Ads



"பள்ளிவாசல்களை பாதுகாக்க, முன்வருமாறு கோரிக்கை"

முஸ்­லிம்கள் இந்­நாட்டில் மூன்றாம் பெரும்­பான்­மை­யி­ன­ராக வாழ்­கின்­றார்கள். இவர்­களும் நீண்ட வர­லாற்றைக் கொண்­ட­வர்கள். அவர்கள் இந்­நாட்டின் பூர்­வீகக் குடிகள். ஆரம்­ப­காலம் தொட்டு அர­சியல் செல்­வாக்­கு­மிக்­க­வர்கள். பல்­லின சமூகம் வாழும் இலங்­கையில் முஸ்­லிம்கள் அர­சியல், பொரு­ளா­தாரம், கலை, பாது­காப்பு, போராட்டம், இறைமை போன்ற பல்­வேறு விட­யங்­களில் நாட்­டுக்கு அளப்­ப­ரிய பங்­க­ளிப்­புக்­களை வழங்கி வரு­கின்­றார்கள்.

அரே­பிய வர்த்­த­கர்கள் சென்ற இடங்­க­ளி­லெல்லாம் தமது குடி­யி­ருப்­புக்­க­ளையும், வர்த்­தக கேந்­திர நிலை­யங்­க­ளையும் விஷே­ட­மாக துறை­மு­கங்­களை அண்­மித்த பிர­தே­சங்­களில் அமைத்­துக்­கொள்ளப் பின்­வாங்­க­வில்லை. துறை­மு­கங்­களை அண்­மித்த பிர­தே­சங்கள் வியா­பா­ரிகள் தமது கப்­பல்­களை நிறுத்தி வைக்­கவும் அவற்றை திருத்­திக்­கொள்­ளவும் ஏது­வாக அமைந்­தது.

காலப்­போக்கில் முஸ்­லிம்கள், மன்­னர்­க­ளுடன் மிக நெருக்கம் கொண்டு அவர்கள் அரச சபையில் அங்­கத்­த­வர்­க­ளாக நிய­மிக்­கப்­பட்­டார்கள்.  சிங்­கள மன்­னர்­களின் நன்­ம­திப்பைப் பெற்று அம்­மன்னர்;களின் ஆட்­சிக்கு பக்­க­ப­ல­மா­கவும், படை வீரர்­க­ளா­கவும், வைத்­தி­யர்­க­ளா­கவும், சமையல் செய்­ப­வர்­க­ளா­கவும், பொரு­ளா­தார உத­வி­களை வழங்­கு­ப­வர்­க­ளா­கவும் வாழ்ந்து வந்த முஸ்­லிம்­க­ளுக்கு சிங்­கள உயர் குலப் பெண்­களை மணம் முடித்துக் கொடுத்து முஸ்­லிம்­க­ளாக வாழ அனு­ம­தியும் நில­பு­லங்­களும் வழங்கி கௌர­வித்த வர­லா­றுகள் ஏராளம் இருக்­கின்­றன.

மேலும், முஸ்­லிம்கள் நாடு­க­ளுக்­கி­டையில் சமா­தானம் பேணும் சமா­தானம் விரும்­பி­க­ளா­கவும் செயற்­பட்­டார்கள். அதனால் வெளி­நா­டு­களில் முஸ்­லிம்கள் இலங்­கைக்­கான பிர­தி­நி­தி­க­ளாக கலந்­து­கொள்ளும் சந்­தர்ப்­பங்கள் வழங்­கப்­பட்­டன.

இவ்­வா­றாக உயர்­ப­த­வி­களை முஸ்­லிம்கள் பெற்­றுக்­கொள்ள அவர்­க­ளிடம் நாடு­பி­டிக்கும் எண்ணம் கொண்­டி­ரா­மையும் மற்­று­மொரு கார­ண­மாக இருந்­தது எனலாம்.

நாம் அறி­யப்­ப­டாத முஸ்­லிம்கள் பற்­றிய பல தக­வல்கள் பதி­யப்­ப­டாமை கார­ண­மாக அவை அழிந்­தொ­ழிந்து போய் விடு­கின்­றன. இன்று எமது சமூகம் தொடர்­பான எத்­த­னையோ தக­வல்கள் பெற்­றுக்­கொள்ள முடி­யா­த­வாறு இருக்­கின்­றன. இவற்றை ஒழுங்­க­மைத்து பதிவு செய்­வது யார் பொறுப்பு என்ற கேள்வி அக்­க­றை­கொண்ட ஒவ்­வொ­ரு­வ­ருக்­குள்ளும் எழுந்­துள்­ளது.

இலங்கை முஸ்­லிம்­களின் வர­லாறு குறித்து பல்­வேறு அபிப்­பி­ராயங்கள் நில­வி­வரும் காலம் இது. முஸ்­லிம்­களை நிந்­தித்­து­வரும் பொது­ப­ல­சேனா, ராவணா பலய, மக­சேன பல­காய போன்ற அமைப்­பினர் முஸ்­லிம்­க­ளுக்கு நீண்ட வர­லாறு இந்­நாட்டில் இல்லை. அவர்கள் கள்ளத் தோணிகள், முஸ்­லிம்கள் இந்­நாட்டின் பூர்­வீகக் குடி­க­ளல்ல என்ற கருத்­துக்­களை சிங்­கள மக்கள் மத்­தியில் விதைத்து வரு­கின்­றமை கவ­னிக்­கத்­தக்­கவையாகும்.

ஒரு சமூ­கத்தின் அர­சியல் உரி­மை­களை தகர்த்­தெ­றி­வ­தற்­காக அச்­ச­மூ­கத்தின் வாழ்­வா­தா­ரங்­களை அழித்து, பொரு­ளா­தா­ரத்தை முடக்கி உள­வியல் தாக்­கங்­களை ஏற்­ப­டுத்தி இந்­நாட்டில் அவர்­களின் எதிர்­கா­லத்தை அச்­சம்­கொண்டு சிறைப்­பி­டிக்க பேரி­ன­வாத குழுக்கள் மேற்­கொள்ளும் செயற்­பா­டா­கவே முஸ்­லிம்கள் மீது அண்­மையில் அளுத்­கமை முதல் திகன வரை­யாக அவர்­க­ளினால் கட்­ட­விழ்த்­து­வி­டப்­பட்ட கல­வ­ரங்­களின் மூலம் பெற்­றுக்­கொண்ட அனு­ப­வங்­களை கொள்­ளலாம்.

இலங்­கையில் கொதி­நிலை இன­வாதப் போக்­கு­களால் முஸ்­லிம்கள் வர­லாறு நெடு­கிலும் இரை­யாகி வரு­கின்­றார்கள். இச்­சம்­பவங்­களின் போது தமது வர­லாற்றை திரும்பிப் பார்க்கும் அசை­வுகள் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன.

முஸ்­லிம்­களில் வர­லாற்­றுத்­துறை ஆய்­வா­ளர்கள் ஓரி­ரு­வர்­களை கொண்­டுள்­ளமை, தொல்­லியல் ஆய்­வாளர் எவ­ரையும் கொண்­டி­ராமை இச்­ச­மூ­கத்தின் துர­திஷ்டம் எனலாம். இந்­நிலை உலக அளவில் ஏற்றுக் கொள்­ளப்­பட்ட வர­லாற்­றா­சி­ரி­யர்­களின் நூல்­களை அடிப்­படை மூலா­தா­ரமாகக் கொண்டு முஸ்லிம் தேசத்தை விஞ்­ஞான ரீதியில் நிறு­விய வர­லாறு ஆவ­ணப்­ப­டுத்­தப்­ப­டா­மைக்கு பிர­தான கார­ணி­யெ­னலாம்.

முதலில், வர­லாறு தொடர்­பான அவ­சி­யத்தை இலங்கை முஸ்­லிம்கள் உணர்ந்­து­கொள்ள வேண்டும். வர­லாறு பேசு­வ­தையோ, எழு­து­வ­தையோ, படிப்­ப­தையோ அதி­க­மானோர் விரும்­பு­வ­தில்லை. இவர்கள் அர­சி­யலில் ஆர்வம், ஆத்­மீக அதீத பற்று போன்­றவை மீது கூடுதல் கவனம் செலுத்தி வரு­கின்­றனர்.

வர­லாறு நெடு­கிலும் தமது சமூ­கத்தின் அதி­கார இருப்­புக்கு அர­சியல் ரீதி­யா­கவும், ஆத்­மீக ரீதி­யா­கவும் முரண்­பட்டு விவா­தித்­துக்­கொள்ள விரய­மாக்கும் சக்­தி­களும், வளங்­களும் எமது பாரம்­ப­ரி­யங்­களை பாது­காப்­ப­தற்­கான குழுக்­களோ, குரல்­களோ வெளியில் தோன்­ற­வில்லை.

இலங்கை முஸ்­லிம்கள் தொன்­மை­வாய்ந்த பள்­ளி­வா­சல்கள் பல இடித்து நொருக்­கப்­பட்­டு­விட்ட பின்­னரும் ஆயிரம் வரு­ட­கால வர­லாற்று சான்­று­கூறும் சில பள்­ளி­வா­சல்கள் காணப்­ப­டு­கின்­றமை ஓர் அதிஷ்டம் எனலாம். அவற்றின் பெறு­மா­னங்கள் உணர்த்­தப்­பட்டு பாது­காக்­கப்­ப­டு­வது மிக முக்­கி­ய­மா­ன­தாகும்.

அந்­த­வ­கையில் இலங்­கையின் நிரு­வாக மாவட்­டங்­களில் மொன­ரா­கல மாவட்டம் கூடிய நிலப்­ப­ரப்­பையும் குறைந்த சனத்­தொ­கை­யையும் கொண்­ட­தா­கவும் காணப்­ப­டு­கின்­றது. கடந்த 2012ஆம் ஆண்­டின் குடி­சன மதிப்­பீட்டின் பிர­காரம் இம்­மா­வட்­டத்தில் 448,142 மக்கள் வாழ்ந்து வரு­கின்­றார்கள்.

இச்­ச­னத்­தொ­கையில் பெரும்­பான்­மை­யி­ன­ராக 423,972 பேர் சிங்­க­ள­வர்­களும், இலங்கைத் தமி­ழர்கள் 9783பேரும், இந்­தியத் தமி­ழர்கள் 4590 பேரும், இலங்கை முஸ்­லிம்கள் 9552 பேரும், பேகர் 109 பேரும், மலே 46 பேரும் ஏனையேர் 90 பேரும் வாழ்­கின்­றார்கள்.

இலங்­கையை பிரித்­தா­னிய ஏகா­தி­பத்­தி­ய­வா­திகள் கைப்­பற்றும் போது அவர்­களை எதிர்த்து நாட்டின் இறை­மையை பாது­காக்கப் போரா­டிய எஹ­ல­பொல, வீர­புரன் அப்பு, ரட்­டே­நாள போன்ற தியா­கிகள் வாழ்ந்த பிர­தேசம் இம்­மா­வட்­ட­மாகும்.

அதேபோல் உண­வுற்­பத்­தியை அதி­க­ரிக்கும் நோக்கில் இரண்டு இலட்சம் ஏக்கர் நிலத்தில் நெற்­பயிர் செய்­யப்­பட்டு வர­லாற்று சாத­னை­பு­ரிந்த பெருமை இம்­மா­வட்­டத்­துக்­கு­ரி­யதே. இக்­கா­ர­ணத்­தி­னா­லேயே இம்­மா­வட்டம் வெல்­லஸ்ஸ என்­ற­ழைக்­கப்­பட்­டது.

மொன­ரா­கல மாவட்­டத்தில் வாழும் 9552 முஸ்­லிம்­களில் 60 வீத­மான 4950 முஸ்­லிம்கள் வாழும் பிர­தேச செய­லக பிரி­வாக மெத­கம திகழ்­கின்­றது.

மெத­கம பிர­தேச செய­லக பிரி­வினுள் முஸ்­லிம்கள் அதிகம் வாழும் பெரிய கிரா­ம­மாக பகி­னி­க­ஹ­வெல விளங்­கு­கின்­றது. இக்­கி­ராமம் மொன­ரா­கல - பிபிலை பிர­தான வீதியில் சுமார் 20 கிலோ­மீற்றர் தூரத்தில் அமைந்­துள்­ளது.

இக்­கி­ரா­மத்தின் எல்­லை­க­ளாக வடக்கே மெத­க­மவும், தெற்கே மெற­க­ஹ­மட, கிழக்கே புப்­ப­ரயும், மேற்கே பொல்­க­ஹ­பி­டி­யையும் கொண்­ட­தாக அமைந்­துள்­ளது. இங்கு சுமார் 720 குடும்­பங்கள் வாழ்ந்து வரு­கின்­றன.

இக்­கி­ரா­மத்தின் தொன்­மை­யையும் இலங்கை முஸ்­லிம்­களின் வர­லாற்­றி­னையும் எடுத்­துக்­கூறும் சான்­றா­தா­ர­மாக இங்­குள்ள பழைய ஜும்ஆ பள்­ளி­வாசல் திகழ்­கின்­றது.

சுமார் 800 வரு­டங்கள் பழைமை வாய்ந்த இப்­பள்­ளி­வாசல் சவூதி அரே­பி­யா­வைச்­சேர்ந்த அலி மௌலானா என்­ப­வரால் கட்­டப்­பட்­ட­தாக அக்­கி­ரா­ம­வா­சி­களின் வாய்­வ­ழி­வந்த சான்­று­க­ளாகும்.

இப்­பள்­ளி­வாசல் நிர்­மா­ணத்­தின்­போது கற்கள், சீமெந்­துகள் பயன்­ப­டுத்­து­வ­தற்குப் பதி­லாக முட்டை, பாணி, சுண்­ணாம்பு போன்ற கலவை பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாகத் தெரி­ய­வ­ரு­கின்­றது. இக்­க­ல­வையின் உறு­தித்­தன்­மை­யினால் இன்­று­வரை இப்­பள்­ளி­வாசல் சிதை­வு­றாமல் காணப்­ப­டு­கின்­றது.

இப்­பள்­ளி­வா­சலை மெரு­கூட்­டு­வ­தற்­காக சுமார் ஒரு அடியில் அமைக்­கப்­பட்­டுள்ள கொங்றீட் அற்ற வளை­வு­க­ளுடன் கூடிய புரா­தன கட்­டிடக் கலை பார்ப்­போரை அதிர்ச்­சிக்­குள்­ளாக்கும் வகையில் காணப்­ப­டு­கின்­றது.

மேலும் இப்­பள்­ளி­வா­சலின் முன்னால் காணப்­படும் திண்ணை, இரு­ம­ருங்­கி­லு­முள்ள விறாந்­தைகள், உள்­பள்­ளி­வாசல், மிம்பர், கத­வுகள், நிலைகள் போன்­றன எமது புரா­தன கட்­டடக் கலையின் எச்­சங்­க­ளாக மிளிர்­கின்­றன.

கடந்த சில வரு­டங்­க­ளுக்கு முன்னர் இப்­பள்­ளி­வா­சலை இலங்கை தொல்­பொருட் திணைக்­க­ளத்­தினர் பார்­வை­யிட்டு இதன் காலத்தை உறு­திப்­ப­டுத்­தி­யுள்­ளனர். இதன்­போது இப்­பள்­ளி­வா­சலை தொல்­பொருள் திணைக்­க­ளத்தின் பரா­ம­ரிப்­புப்­புக்கு அவர்கள் கேட்­ட­போது  அதனை கிரா­மத்­த­வர்கள் மறுத்­து­விட்­டனர்.

இப்­பள்­ளி­வாசல் இன்­று­வரை உடைக்­காமல் பாது­காக்­கப்­பட்டு வரு­கின்­றது. தற்­கால சனத்­தொகைப் பெருக்­கத்தை ஈடு­செய்ய ஊரில் புதிய ஜும்ஆ பள்­ளி­வாசல் நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்­ளது.

மெத­கம கொட்­டப்­பேவ கிரா­மத்தில் இப்­பள்­ளி­வா­சலின் வய­தை­யொத்த           பள்­ளி­வா­சல் சில திருத்­தங்கள் செய்­யப்­பட்டு பாது­காக்­கப்­ப­டு­கின்­றன. அத்­தோடு புரா­தன காலத்தில் வுளூ செய்­வ­தற்­கென மழை­நீரை தேக்கி வைப்­ப­தற்­காக கற்­பா­றையை குடைந்து நீர் தேக்கி வைக்கும் வகையில் செய்­யப்­பட்ட 'ஹெளளு' ஒன்றும் காணப்­ப­டு­கின்­றது.

இவ்­விரு பள்­ளி­வா­சலின் வய­துடன் ஒத்­த­தான மொன­றா­கல மாவட்­டத்தின் அழுப்­பொத்தே என்னும் கிரா­மத்தில் இன்­னு­மொரு பள்­ளி­வாசல் காணப்­பட்­டது. அப்­ப­ள­்ளி­வாசல் புனர்­நிர்­மாணம் என்ற பெயரில் நிர்­மூ­ல­மாக்­கப்­பட்­டு­விட்­டது.

உலகில் இஸ்லாம் பரவ ஆரம்பமான நாள் முதல் முஸ்லிம்கள் தமது வணக்க வழிபாடுகளை மேற்கொள்வதற்கான ஒரு பள்ளிவாசலை அமைக்கத் தவறியிருக்க மாட்டார்கள். இவ்வாறாக இலங்கையில் பரந்து வாழும் முஸ்லிம்களும் தமக்கென ஒரு பள்ளிவாசலை நிச்சயமாக அமைத்திருப்பர். இவ்வாறு அமைக்கப்பட்ட பள்ளிவாசல்கள் காலத்தின் நவீனத்திற்கேற்ப புனரமைப்பு, விஸ்தரிப்பு என்ற அடிப்படையில் அவை இருந்த தடயம் அற்றுவிட்டன. இவற்றை நாம் பாதுகாக்க முனைந்திருப்போமேயானால் இன்று எமது தொன்மையும், வரலாறுகளும் உறுதிசெய்யப்பட்டிருக்கும்.


இன்றைய சூழலில் முஸ்லிம்கள் பள்ளிவாசலை சனத்தொகையை மிஞ்சி பிரமாண்டமாக விஸ்தரிப்பதும் அவற்றை; அலங்கரிக்கும் செயற்பாட்டினை அவதானிக்க முடிகின்றது. இதனால் தோற்றத்தில் அவை அழகாக காட்சியளிக்கின்றதே தவிர மனித உள்ளங்களின் செல்வாக்கிழந்து வருகின்றன.

எனவே, முஸ்லிம் சமூகத்தின் எதிர்கால இருப்பை இந்நாட்டில் நிரூபிப்பதற்கான மிக முக்கியமான ஆதாரம் இதுபோன்ற பள்ளிவாசல்களாகும். இதுவரையில் அழிக்கப்பட்டமை போக மீதமுள்ள தொன்மைவாய்ந்த பள்ளிவாசல்களையாவது பாதுகாக்க முன்வரவேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும்.

ஏ.எம். பறக்­கத்­துல்லாஹ்

No comments

Powered by Blogger.