"எம்மை இனச்சுத்திகரிப்பு செய்வதே, இவர்களின் திட்டமாகும்" - கே.எம் நிலாம்
-பாறுக் ஷிஹான்-
தமிழ் தேசிய கூட்டமைப்பு யாழ் முஸ்லீம்களை மீள் குடியேற்றுவதைப்போன்றும் வீட்டுத்திட்டம் வழங்குவதைப்போன்றும் பாசாங்கு காட்டிக்கொண்டிருக்கின்றது என யாழ் மாநகரசபை உறுப்பினர் கே.எம் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர் யாழ் முஸ்லீம்கள் சிலரை அழைத்து வீட்டுத்திட்டம் ஒன்றை பெற கிளிநொச்சியில் காணிகள் வாங்க வேண்டும் என கூறி வருவது குறித்த செய்திக்கு பதிலளிக்கும் போது மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தனது கருத்தில்
வீட்டுத்திட்டம் வடக்கு மாகாண செயலணி ஊடாக செயற்படத்தப்பட உள்ள நிலையில் அத்திட்டம் மத்திய அரசால் வழங்கமுடியாது எனவும் ஆனால் குறித்த வீட்டுத்திட்டங்களை தமிழ் தேசிய கூட்டமைப்பினால் மாத்திரம் தான் வழங்க முடியும் என்றும் வடமாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மீன் என்பவர் குறிப்பிட்டுள்ளார்.
இவர் யாழ் முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் வீட்டுத்திட்டம் உள்ளிட்ட அதிகாரங்கள் தங்களுக்குத்தான் இருப்பதுபோன்றும் எமது பிரதேசத்தில் நடைபெற்ற அபிவிருத்திகள் தங்களால்தான் நடைபெற்றது போன்றும் உண்மைகளை திரிவுபடுத்தி கூறி வருகின்றார்.
அப்படியாயின் இந்திய வீட்டுத்திட்டம் பின்னர் வந்த 8 இலட்சம் ரூபா வீட்டுத்திட்டம் மற்றும் வடக்குச்செயலணி ஊடாக யாழ் முஸ்லிம்களிற்கு வந்த 200 வீட்டுத்திட்டம் யாரால் எம்மக்களிற்கு கொண்டு வரப்பட்டது என்பதை இவரிடம் கேட்க விரும்புகிறேன்.
இது தவிர இவர்களுடைய நீண்ட நாள் திட்டம் எமது மக்களை மீள் குடியேற்றுவதைப்போன்றும் வீட்டுத்திட்டம் வழங்குவதைப்போன்றும் பாசாங்கு காட்டி எம் மக்களை அலைக்கழிப்பதுடன் அதனால் நமது மக்கள் காணிகளை விற்றுவிட்டு விரக்தியினால் வாழவைத்த பிரதேசத்தை நோக்கி சென்று விடுவார்கள் என நினைக்கின்றனர்.
அத்துடன் இறுதியில் எம்மை வைத்தே எம்மை இனச்சுத்திகரிப்பு செய்வதே இவர்களின் திட்டமாகும் என தெரிவித்துக்கொள்கின்றேன் என குறிப்பிட விரும்புகின்றேன்
Post a Comment