சிறுமிகளுக்கு கத்னா, தாயாரை சிறையில் தள்ளிய சுவிட்சர்லாந்து நீதிமன்றம்
ஆப்பிரிக்க நாடுகளில் கடைப்பிடிக்கப்படும் பிறப்புறுப்பு சிதைக்கும் மரபை தமது பிள்ளைகளுக்கும் நடத்திய சுவிஸ் பெண்மணிக்கு 8 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தின் பிரெஞ்சு மொழி பேசும் நகரமான Neuchâtel பகுதியில் குடியிருந்து வருபவர் குற்றம்சாட்டப்பட்ட குறித்த பெண்மணி.
சோமாலியரான இவர் தங்களது சமுதாய மக்களின் நிர்பந்தத்திற்கு உட்பட்டு கடந்த 2013 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் தமது இரு பெண் பிள்ளைகளுக்கு பிறப்புறுப்பு சிதைக்கும் ஏற்பாடை செய்துள்ளார்.
இதனிடையே தமது பிள்ளைகளுக்கு நடந்த இச்சம்பவத்தை அவரது கணவர் சுவிஸ் அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
சுவிட்சர்லாந்தை பொறுத்தமட்டில் இங்கு குடியிருக்கும் மக்கள் உள்ளூரிலோ அல்லது வெளிநாட்டிலோ குறித்த மரபை கடைப்பிடித்தால் தண்டனைக்குரிய குற்றமென சமீபத்தில் சட்டத் திருத்தம் மேற்கொண்டது.
இந்த நிலையில் குறித்த சோமாலிய பெண்மணியின் கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட பொலிசாரிடம் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதுடன், தமக்கு ஏற்பட்ட சமூக அழுத்தத்தையும் கண்ணீருடன் விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.
குறித்த விவகாரம் தொடர்பில் விசாரணை முடிவுக்கு வந்த நிலையில் சோமாலிய பெண்மணிக்கு 8 மாதம் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
சுவிட்சர்லாந்தில் இதுபோன்ற ஒரு வழக்குக்கு சிறை தண்டனை விதிக்கப்படுவது இதுவே முதல் முறை எனவும் கூறப்படுகிறது.
Post a Comment