Header Ads



தாருன் நுஸ்ரா சிறுமிகளுக்கு மீண்டும் ஆபத்து - நாளை பாரிய ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு


ஆதரவற்ற சிறுமிகளுக்கு தாருன் நுஸ்ரா சிறுவர் காப்பகத்தில் நடைபெற்ற பாலியல் துஷ்பிரயோகங்கள் தொடர்பாக கடந்த வருடம் (2017) ஜூன் மதம் பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, போலீசார் வழக்கை தாக்கல் செய்த உடனேயே வெளி உலகிற்கு இவ்விடயத்தை மூடி மறைக்க பெரும் பிரயத்தனங்களை சந்தேகநபர்களுக்கு சார்பான தரப்புகள் முன்னெடுத்ததால் பாதிக்கப்பட்ட சிறுமிகள் மீண்டும் தாருன் நுஸ்ராவிற்கே நீதிமன்றத்தால் அனுப்பப்பட்டனர். (இதற்கு தாருன் நுஸ்ரா நிர்வாகத்தினரின் சுயலாபங்களும் சிறுவர் நன்னடத்தைப் பிரிவு – Probation Department - இன் பொறுப்பற்ற மற்றும் தெளிவான பக்கச்சார்பான  செயற்பாடுகளும் காரணமாக இருந்தன)

இரண்டு மாதங்களின் பின்னர் சமூக ஊடகங்களில் இது குறித்து பேசப்பட்டதன் பயனாக தொடராக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு தன்னார்வ சட்டத்தரணிகள் நியமிக்கப்பட்டு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் (NCPA) யின் உதவியும் பெறப்பட்டு சுமார் மூன்று மாதங்களுக்கு முன்னர் நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் சிறுமிகள் தாருன் நுஸ்ராவில் இருந்து மீட்கப்பட்டு வேறு மூன்று சிறுவர் காப்பகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

சிறுமிகளின் எதிர்கால கல்வி நடவடிக்கைகளுக்காக சிறுமிகளை பாடசாலைகளில் அனுமதிக்கும் பொறுப்பு Probation Department, NCPA ஆகியவற்றிடம் நீதிமன்றத்தால் ஒப்படைக்கப்பட்டது. சிறுமிகள் மீட்கப்பட்ட சில வாரங்களில் NCPA யின் பணிப்பாளராக பணியாற்றிய மரினி டி லிவேரா நீக்கப்பட்டு வேறொருவர் பணிப்பாளராக நியமிக்கப்பட்ட துர்ப்பாக்கிய சம்பவமும் இடம்பெற்றது. அத்துடன் இதுவரை காலமும் வழக்கை விசாரித்து வந்த நீதிபதியும் இடமாற்றம் பெற்றுச் செல்ல, வழக்கு வேறொரு நீதிபதியின் கீழ் தற்பொழுது வந்துள்ளது.

மூன்று மாதங்களுக்கு முன்னர் சிறுமிகளின் நலன் சார்பாக ஆஜராகி இருந்த NCPA, அதன் நிர்வாக மாற்றத்தின் பின்னர் தற்பொழுது பொடுபோக்காக செயற்பட்டு வருவதுடன், ஏற்கனவே பொடுபோக்காக செயற்பட்டுக் கொண்டிருக்கும் Probation Department உடன் இணைந்து சிறுமிகளை மீண்டும் தாருன் நுஸ்ராவிற்குள் தள்ளிவிட கடும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது.

சிறுமிகளுக்கு பாடசாலைகள் எதனையும் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்காத Probation Department, NCPA ஆகிய இரண்டும், சிறுமிகளுக்கு உரிய பாடசாலைகள் இல்லை, ஆகவே அவர்களை மீண்டும் தாருன் நுஸ்ராவிற்கே அனுப்ப வேண்டும் என்று நீதிமன்றத்தில் தெரிவித்து உள்ளனர். சிறுமிகளுக்கு உரிய பாடசாலைகளை பெற்றுக்கொடுப்பதில் அசமந்தமாக செயற்பட்டு கடந்த மூன்று மாதங்களாக எதுவுமே செய்யாத Probation Department, NCPA ஆகியன யாரின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக சிறுமிகளின் கல்வியை சாட்டாக வைத்து சிறுமிகளை மீண்டும் தாருன் நுஸ்ராவினுள் தள்ள முயல்கின்றன என்பதை ஓரளவு ஊகிக்க முடியுமாக உள்ளது. 

மேல்மாகாண கல்வித் திணைக்களத்தின் திட்டமிடல் துணை ஆணையாளர் பிரபாத் விதானகே அவர்களை சிலோன் டுடே பத்திரிக்கை தொடர்புகொண்டு இந்த விடயம் தொடர்பில் வினவிய பொழுது, குறித்த சிறுமிகளுக்கு பொருத்தமான 40க்கும் மேற்பட்ட பாடசாலைகள் மேல்மாகாணத்தில் இருப்பதாக அவர் தெரிவித்து இருக்கின்றார். (http://www.ceylontoday.lk/print-edition/2/print-more/8045 ) இந்நிலையின் குறித்த சிறுமிகளுக்கு பொருத்தமான எந்தப் பாடசாலைகளும் இல்லை என்று கூறி அவர்களை மீண்டும் தாருன் நுஸ்ராவிற்குள்ளே தள்ளி விடுவதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சிகள் கடும் சந்தேகத்தை ஏற்படுத்துன்றன.

அடுத்த வழக்கு விசாரணை நாளை வியாழக்கிழமை 05 ஆம் திகதி (05.07.2017) நுகேகொட மஜிஸ்ரேட் (கங்கொடவில) நீதிமன்றில் இடம்பெறவுள்ளது.

சிறுமிகளை பாதுகாக்கவும், அவர்களுக்கு உரிய பாடசாலைகளை வழங்க வலியுறுத்தியும், சிறுமிகள் தாருன் நுஸ்ராவினுள் மீண்டும் தள்ளப்படும் அவலத்தை தடுக்கவும் வியாழக்கிழமை 05 ஆம் திகதி காலை 8.00 மணிக்கு நுகேகொட நிதிமன்றத்திற்கு முன்னால் கவன ஈர்ப்பு அமைதிப் போராட்டம் ஒன்றை நடத்த சமூக ஆர்வலர்கள் தீர்மானித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.