Header Ads



சைலன்சரை அதிக ஒலி எழுப்பும் வகையில் மாற்றியவருக்கு 50 ஆயிரம் ரூபா தண்டம்

-பாறுக் ஷிஹான்-

மோட்டார் சைக்கிள் சைலன்சரை அதிக ஒலி எழுப்பும் வகையில் மாற்றியமைத்து வீதியில் செலுத்திச் சென்ற நபருக்கு 50 ஆயிரம் ரூபா தண்டம் விதித்து யாழ்ப்பாணம் நீதிமன்றம் மேலதிக நீதிவான் வி.இராமகமலன் இன்று(31) உத்தரவிட்டார்.

யாழ்ப்பாணம் நகரில் ஒரு மோட்டார் சைக்கிளில் தலைக்கவசமின்றி பயணித்த இருவரை பின் தொடர்ந்த பொலிஸார், அவர்களது வீடுவரை சென்று வீதி விதிமீறல் குற்றச்சாட்டின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

வீதியில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற போது, சாரதி அனுமதிப் பத்திரமில்லை, வரி அனுமதிப் பத்திரமில்லை, காப்புறுதிப் பத்திரமில்லை, செலுத்திச் சென்றவரும் பின்னால் அமர்ந்திருந்து பயணித்தவரும் தலைக்கவசம் அணிந்திருக்கவில்லை மற்றும் மோட்டார் சைக்கிளுக்கு உரிய சைலன்சரை அதிக ஒலியை எழுப்பும் வகையில் மாற்றியமைத்திருந்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களை அடுக்ககாக முன்வைத்து மோட்டார் சைக்கிள் உரிமையாளருக்கு எதிராக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் பொலிஸார் வழக்குத் தாக்கல் செய்தனர்.

யாழ்ப்பாணம் நீதிமன்றில் மாவட்ட நீதிபதியும் மேலதிக நீதிவானுமான வி.இராமகமலன் முன்னிலையில் வழக்கு இன்று கூப்பிடப்பட்டது. குற்றஞ்சாட்டப்பட்டவர் மன்றில் தோன்றினார்.

குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு குற்றச்சாட்டுப்பத்திரம் வாசித்துக் காண்பிக்கப்பட்டது. அவர் அத்தனை குற்றங்களையும் ஏற்றுக்கொண்டார்.

மோட்டார் சைக்கிளுக்குரிய சைலன்சரை அதிக ஒலியை எழுப்பும் வகையில் மாற்றியமைத்த குற்றத்துக்கு 50 ஆயிரம் ரூபா தண்டம் மன்றால் விதிக்கப்பட்டது.
சாரதி அனுமதிப்பத்திரமின்றி மோட்டார் சைக்கிளைச் செலுத்தியமைக்கு 6 ஆயிரம் தண்டம் உள்பட ஏனைய குற்றங்களுக்காக 23 ஆயிரம் ரூபா தண்டம் விதிக்கப்பட்டது.

மொத்தமாக விதிக்கப்பட்ட 73 ஆயிரம் தண்டப் பணத்தையும் செலுத்த கால அவகாசம் வழங்குமாறு தண்டனை பெற்றவர் மன்றில் விண்ணப்பம் செய்தார்.
அதனை பரிசீலித்த மேலதிக நீதிவான், தண்டப் பணம் செலுத்த தவணை வழங்கியதுடன், தண்டை பெற்றவரை பிணையில் செல்ல அனுமதி வழங்கினார்.

1 comment:

Powered by Blogger.