முதல் ஹஜ் குழு 24 ஆம் திகதி புறப்படுகிறது - இலவச சிம் வழங்கப்படும்,
இவ்வருடம் ஹஜ் கடமையை மேற்கொள்ளவுள்ள 3000 யாத்திரிகர்களில் முதலாவது குழுவினர் எதிர்வரும் 24 ஆம் திகதி சவூதி அரேபியாவுக்குப் பயணிக்கவுள்ளனர். இக் குழுவில் 58 பேர் அடங்கியுள்ளனர்.
இரண்டாவது தொகுதி ஹஜ் யாத்திரிகர்கள் எதிர்வரும் 26 ஆம் திகதி சவூதி அரேபியாவுக்குப் பயணிக்கவுள்ளனர். இக் குழுவில் 300 பயணிகள் அடங்கியுள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.ஆர்.எம். மலிக் தெரிவித்தார்.
எதிர்வரும் 26 ஆம் திகதி கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஹஜ் யாத்திரிகர்களை அஞ்சல், அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.ஆர்.எம். மலிக், அரச ஹஜ் குழுவின் தலைவர் கலாநிதி எம்.ரி. சியாத் உட்பட குழுவினர் வழியனுப்பி வைக்கவுள்ளனர்.
இதேவேளை ஜித்தாவிலுள்ள இலங்கை கவுன்சியுலர் ஜெனரல் ஏ.டபிள்யூ.ஏ. சலாம் இலங்கை ஹஜ் யாத்திரிகர்கள் சவூதி அரேபியாவில் பயன்படுத்துவதற்காக 3000 சிம் அட்டைகளை அனுப்பி வைத்துள்ளார். இச் சிம் அட்டைகள் ஹஜ் முகவர்கள் ஊடாக ஹஜ் யாத்திரிகர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படவுள்ளன.
சவூதி அரேபியாவில் தடை செய்யப்பட்டுள்ள மருந்து வகைகளை ஹஜ் யாத்திரிகர்கள் தம்முடன் எடுத்துச்செல்ல வேண்டாமென முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
Post a Comment