Header Ads



அரச பணியாளர்களில் 17 வீதமானோர் O/L சித்தியடையவில்லை

அரசாங்கப் பணியாளர்களாக உள்ளவர்களில் 17 வீதமானோர், க.பொ.த.சாதாரண தேர்வில் சித்தியடையவில்லை என்று, சிறிலங்கா அரசாங்க சனத்தொகை மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

அரச பணியாளர்களில் ஆண்களில் 27.2 வீதமானோரும், பெண்களில், 4.8 வீதமானோரும், க.பொ.த.சாதாரண தேர்வில் சித்தியடையவில்லை.

பொதுச்சேரைவயினர் என்ற வகைக்குள் பொதுவாக, அரசாங்கத்தினால் நிர்வகிக்கப்படும், கல்வி, சுகாதாரம், தேசிய பாதுகாப்பு, இராணுவம், காவல்துறை, உட்கட்டமைப்பு (வீதிகள், பாலங்கள், சுரங்கங்கள், நீர்விநியோகம், நில அளவை, மின் விநியோகம், தொலைத்தொடர்பு உள்ளிட்ட) துறைகளில் பணியாற்றுவோர் உள்ளடக்கப்படுவார்கள்.

2016 நெவம்பர் 17ஆம் நாள் நிலவரப்படி, மேற்படி அரச துறைகளில் 1,109,475 பணியாளர்கள் பணியாற்றுகின்றனர்.இவர்களில் 55.1 வீதமானோர் ஆண்கள். 44.9 வீதமானோர் பெண்கள்.

இராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள் இந்த எண்ணிக்கையில் உள்ளடக்கப்படவில்லை.

இந்த ஆய்வுகளின்படி, 35 வீதமானோர் கபொத. உயர்தரத்தில் தேர்ச்சி பெற்றுள்ளனர். 26.1 வீதமானோர் பட்டம் பெற்றவர்களாக அல்லது உயர் கல்வி பெற்றவர்களாக உள்ளனர்.

பட்டம் அல்லது உயர்கல்வி பெற்றவர்களில் பெண்களே அதிகமாக உள்ளனர். பெண்களில் 36.7 வீதமானோரும், ஆண்களில், 17.6 வீதமானோருமே,  பட்டம் அல்லது உயர்கல்வி பெற்றுள்ளனர்.

அரச மற்றும் அரை அரச துறைகளில் 290,378 பட்டதாரிகள் பணியாற்றுகின்றனர். இவர்களில், 2,014 பேர், இளநிலைப் பட்டத்துக்கு மேல் கல்வி கற்றவர்களாக உள்ளனர்.

அரச பணியில் உள்ள பட்டதாரிகளில் 54 வீதமானோர் கலைப் பட்டதாரிகளாவர் முகாமைத்துவ மற்றும் வணிக பட்டதாரிகள் 14.3 வீதத்தினராகவும், விஞ்ஞான மாணி பட்டதாரிகள் 10.4 வீதத்தினராகவும் உள்ளனர்.

நாட்டின் மொத்த சனத்தொகையில் 5 வீதத்தினர் அரச மற்றும் அரை அரச பணியாளர்களாக உள்ளனர். மொத்த வேலைப்படையில்  இது 14 சதவீதம் என்றும் அரச சனத்தொகை மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

No comments

Powered by Blogger.