Header Ads



சுய முயற்சிகளால் மீண்டெழும் கத்தார் - வீழ்ந்துவிடாமல் சாதித்துக்காட்டியது

அடர்ந்த பாலைவனத்தில் அமைக்கப்பட்டிருக்கும் குளிர்சாதன வசதி செய்யப்பட்ட கொட்டகையில் இருந்து வெளியே செல்லும் மாடுகள் தங்கள் மடியிலிருந்து பால் கறப்பதற்காக அமைக்கப்பட்டிருக்கும் நவீன இயந்திரங்களை நோக்கி செல்கின்றன.

கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு வரை கத்தாரில் ஒரு பால் பண்ணைகூட கிடையாது; அது முற்றிலும் சௌதி அரேபியாவையே சார்ந்திருந்தது.

ஆனால், தற்போது கத்தாரிலுள்ள பாலட்னா பண்ணையில் 10 ஆயிரம் கால்நடைகள் உள்ளன. அதில், பெரும்பாலானவை அமெரிக்காவிலிருந்து வரவழைக்கப்பட்டவை.

வளைகுடா நெருக்கடியின் காரணமாக மிகச் சிறிய நாடான கத்தார் தனது அண்டை நாடுகளின் தடை விதிக்கப்பட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு, கத்தார் ஏர்வேஸ் விமானங்கள் மூலம் பசுக்கள் இங்கு வந்தன.

கத்தார் நாட்டின் புதிய உந்துதலில் அவை ஒரு சின்னமாக மாறிவிட்டன.

"இதை கண்டிப்பாக செய்ய முடியாதென்று அனைவரும் கூறினார்கள்; ஆனால், நாங்கள் செய்துகாட்டியுள்ளோம்" என்று அந்த பண்ணையை நிர்வகிக்கும் பீட்டர் என்பவர் கூறுகிறார்.

"ஒரு வருடத்தில் நமக்கான தூய பாலை உற்பத்தி செய்வதில் நாம் தன்னிறைவு பெறுவோம் என்ற வாக்குறுதியை நாங்கள் அளித்திருந்தோம்" என்று அவர் கூறுகிறார்.

கடந்தாண்டு ஜூன் 5ஆம் தேதி, சௌதி அரேபியா, ஐக்கிய அரபு நாடுகள், பஹ்ரைன் மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் காத்தாருடனான தங்களது அனைத்து விதமான ராஜாந்திர, வர்த்தக மற்றும் போக்குவரத்து தொடர்புகளை நிறுத்தி கொண்டன.

கத்தார் தீவிரவாதத்திற்கு ஆதரவளிப்பதாகவும், பிராந்திய ஸ்திரமற்ற தன்மையை தூண்டிவிட்டு, தங்களின் எதிரியான இரானுடன் நெருக்கமான உறவை கொண்டிருப்பதாகவும் கத்தாரை அந்நாடுகள் குற்றஞ்சாட்டின.

கத்தார் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்ததோடு மட்டுமல்லாமல், அல்-ஜசீரா தொலைக்காட்சியை மூட வேண்டும்என அந்த நாடுகள் முன்வைத்த நிபந்தனைகளை ஏற்பதற்கும் மறுப்புத் தெரிவித்தது.

செல்வந்த நாடான கத்தார் அதன் தனித்துவமான செல்வமான இயற்கை எரிவாயு முதல் பலவற்றை பயன்படுத்தி தனிப்படுத்தப்பட்ட தனது நாட்டை மீட்டெடுப்பதற்கான வழிகளை தேடியதோடு, அண்டை நாடுகளின் இந்த செயலை இறையாண்மைக்கு எதிராக விடுக்கப்பட்ட சவாலாக பார்த்தது.
"தங்களை விட வேறுபட்ட செயல்பாடுகளை கொண்ட நாடுகளை தீவிரவாதத்தை ஆதரிப்பவர்கள் என்ற பிம்பத்தை உருவாக்குவதற்கு அவர்கள் தொடங்கினர்" என்று கத்தாரின் வெளியுறத்துறை அமைச்சரான ஷேக் முகமது கூறுகிறார்.

காத்தார் அரசு தான் நடத்தி வரும் செய்தித் தொலைக்காட்சியான அல் ஜசீரா மீது தொடுக்கப்பட்ட இணையத் தாக்குதலே கடந்தாண்டு ஏற்பட்ட வளைகுடா நெருக்கடிக்கு அடிப்படை காரணமென்று கூறுகிறது.

லெபனானின் ஹெஸ்புல்லா போராளிகளுக்கும், காசாவில் உள்ள ஹமாஸுக்கும் கத்தாரின் அரசர் அனுதாபத்தை தெரிவித்ததையும், அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் நீடிக்கமாட்டார் என்று கூறியதையும் அத்தொலைக்காட்சி செய்தியாக வெளியிட்டதே இதற்கு காரணமென்று கூறப்படுகிறது.

ஆனால், கத்தாரின் அண்டை நாடுகள் உருவாக்கிய நெருக்கடிக்கான காரணத்தை அறிவதற்கு இன்னும் பின்னோக்கி செல்லவேண்டுமென்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

"இந்த விவகாரம் கடந்த 20 வருடங்களாக நீடித்து வந்தாலும், கடந்தாண்டுதான் வெளிப்பட்டது" என்று அரேபியா பௌண்டேஷன் அமைப்பின் நிறுவனரான அலி ஷெஹாபி கூறுகிறார்.

லிபிய முன்னாள் தலைவர் மம்மர் கடாபி கடந்த 2011ஆம் ஆண்டு கொல்லப்பட்டபோது வெளியான ஒலிநாடாவில் கத்தாரின் அரசர் சௌதி அரசர்களுக்கெதிராக சதித்திட்டத்தை தீட்டியது வெளிப்பட்டது என்று அவர் கூறுகிறார்.

"மூன்று லட்சம் மக்கள்தொகையை கொண்ட கத்தார் 22 மில்லியன் மக்கள் தொகையை கொண்ட சௌதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்டுகள், பஹ்ரைன் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளை எதிர்த்து செயல்பட்டது" என்று மேலும் கூறினார்.

"கத்தார் தன்னைவிட பெரிய நாடுகளை எதிர்த்து செயல்பட்டதால் அதற்கேற்ற எதிர்வினையை சந்திக்க நேரிட்டது" என்கிறார் அவர்.

தனது நாட்டின் எல்லைப்பகுதிகள் முற்றுகையிடப்பட்டுள்ள கத்தார், தற்போது இரானின் வழியாக அதற்காக வழிகளை ஏற்படுத்துவதற்கு முயற்சித்து வருகிறது.

தனது அண்டை நாடுகளினால் விதிக்கப்பட்டுள்ள தடைகளை மீறி பொருளாதாரத்தை காக்கும் வகையில் வளைகுடா கடற்பகுதியில் சுமார் ஏழு பில்லியன் டாலர் செலவில் அமைப்பதற்கு திட்டமிடப்பட்ட துறைமுகத்தின் வேலை முன்னதாகவே முடிக்கப்பட்டுள்ளது.

வரும் 2022ஆம் ஆண்டு கத்தாரின் தலைநகர் தோகாவில் நடைபெறவுள்ள கால்பந்து உலகக் கோப்பைக்கான கட்டுமான பொருட்களை இறக்குமதி செய்வதற்கு இந்த துறைமுகம் பெருமளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

தனது கடல் எல்லையையும், மிகப் பெரிய எண்ணெய் வயல்களையும் பகிர்ந்து வரும் இரானுடன் நெருக்கம் காட்டும் நிலைக்கு கத்தார் தள்ளப்பட்டு வருகிறது. மேலும், தற்போது இரானிய வான்பரப்பை நம்பித்தான் கத்தாரின் சேவைகள் உள்ளன.

"இரான் எங்களது அண்டை நாடாகும். எனவே, நாங்கள் அவர்களுடன் ஒத்துழைப்பையும், தகவல் தொடர்பையும் கொண்டிருக்க வேண்டும்" என்று அல்-தானி கூறுகிறார். "இந்தப் பிராந்தியம் சார்ந்த கொள்கைகளில் நாங்கள் அவர்களிடம் கருத்து வேறுபாடு கொண்டுள்ளோம், ஆனால் இது மோதலால் தீர்க்கப்பட முடியாது."

இந்த விவகாரத்தின் துவக்கத்தில் சௌதி தலைமையிலான தரப்புக்கு ஆதரவளித்த அமெரிக்கா, தற்போது தான் இரானுக்கு எதிரான புதிய தடைகளை விதிக்கவுள்ளதால் வளைகுடா பிராந்தியத்தில் ஒற்றுமையை உருவாக்குவதற்கு அழைப்பு விடுத்துள்ளது.

வளைகுடா நாடுகளுக்கிடையே நிலவும் இந்தப் பிரச்சனையின் காரணமாக பிராந்தியத்தின் மற்ற பகுதிகளிலுள்ள தங்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கிடையேயான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக கூறும் தோகா நகரவாசிகள், இந்த நிலைமை விரைவில் சீரடையும் என்று நம்புகின்றனர்.

"வளைகுடா நாடுகள் திருமணத்தின் வழியாக பிணைக்கப்பட்டுள்ளன" என்று கூறுகிறார் சௌதியை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்ட ஒருவர். ஆனால், தற்போது நிலவும் சூழ்நிலையின் காரணமாக ரியாத் நகரத்தில் வசிக்கும் தனது தாயை பார்க்க முடியவில்லை என்று அவர் மேலும் கூறுகிறார்.

"இதற்கு முன்னர் இருந்ததைவிட தற்போது சிறந்த நிலையை அடைந்துள்ளோம். மேலும், முன்பு பிற நாடுகளிடமிருந்து பெற்ற பொருட்களை நாங்களே உற்பத்தி செய்து வருகிறோம்" என்று 84 வயதாகும் சாத் அல்-ஜெஸ்ஸிம் கூறுகிறார்.

2 comments:

  1. கடந்த ஒரு வருடத்திட்கு முன் கட்டாரில் ஒரு பால் பண்ணைக்கூட இல்லையென்பது பிழையான
    தகவல்,நான்கு (diary) கம்பெனி இருந்தது இரண்டு பால் பண்ணை இருந்தது 1 al rawdha dairy&juce co (6500)cows,al kadeer co

    ReplyDelete
  2. நல்ல கட்டுரை. கத்தாருக்கு எமது வாழ்த்துக்கள். அது சரி, எகிப்து எந்த வகையில் கட்டாருடன் முருகல்? ஏனெனில், எகிப்தியர்கள் இந்தியர்களைப்போல மில்லியன் கணக்கில் புழைப்புக்கு உலகமெல்லாம் பறந்து காணப்படுகிறார்கள். பிச்சைக்கரணாக இருந்துகொண்டு திமிரும் காட்டுவதா?

    ReplyDelete

Powered by Blogger.