முஸ்லிம்களும் காணாமல் ஆக்கப்பட்டிருக்கிறார்கள்.
கடந்த யுத்த கால சூழ்நிலையில் தமிழர்கள் மாத்திர மன்றி, சிங்கள, முஸ்லிம் மக்களும் காணாமல் ஆக்கப்பட்டிருக்கிறார்கள். அதே போன்று வடக்கு, கிழக்கில் மாத்திரமன்றி, தென் இலங்கையிலும் காணாமல் ஆக்கப்பட்டிருக்கிறார்கள் என காணாமல் போனோர் அலுவலகத்தின் ஆணையாளர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்தார்.
காணாமற் போனோருக்கான அலுவலகம், தனது பிராந்தியச் சந்திப்பை நேற்று, திருகோணமலையில் நடத்தியது. இதன்போது, நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர், மேலும் அங்கு கருத்துத் தெரிவிக்கையில்,
உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை வெளிக் கொண்டு வர வேண்டும். பாதிக்கப்பட்டவர்களின் சாட்சிகள் பாதுகாக்கப்படும். தேடுவது என்பது மிகவும் சிரமமான காரியமாகும். பொய்யான உறுதி மொழிகளை எங்களால் வழங்க முடியாது. ஒரு மாதத்திலோ அல்லது இரு மாதத்திலோ இதற்கு நிவாரணம் பெற்றுத் தர முடியும் என பொய் கூற முடியாது.
பாதிக்கப்பட்டவர்கள் எதனை எதிர்பார்க்கிறார்கள் என்று சொன்னால் தான் தீர்வு காண முடியும்.
30 வருடங்களாக நடைபெற்ற இந்த துரதிஷ்டவசமான நிகழ்வு இனிமேல் இந்த நாட்டில் நிகழக் கூடாது என்பதற்காகத்தான் இந்த அலுவலகம் அமைக்கப்பட்டிருக்கிறது
இந்த அலுவலகம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்களின் மனப்பாங்கு என்ன என்பதை நாங்கள் அறிய வேண்டும்.
வடகிழக்கில் 8 அலுவலகங்களும் வெளியில் 4 அலுவலகங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இதில் திருகோணமலையிலும் ஒரு அலுவலகம் அமையவுள்ளது. தலைமை காரியாலயம் கொழும்பில் அமைந்துள்ளது.
800 க்கும் மேற்பட்ட மக்கள் இங்கு வந்து அலுவலகம் தொடர்பான விளக்கத்தைப் பெற்றிருக்கிறார்கள்.
400க்கும் மேற்பட்ட மக்கள் இங்கு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்கள். அவர்களை நாங்கள் அழைத்து அலுவலகம் தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் கொடுத்தோம்.
பாதிக்கப்பட்ட தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள் பல்வேறு எதிர்பார்ப்போடு இதில் கலந்து கொண்டனர். மக்கள் தொடர்ந்து ஏமாற்றப்பட்டு வருவதை அவதானிக்க முடிகிறது.
இராணுவத்தாலும் பாதிக்கப் பட்டிரு க்கிறார்கள். புலிகளாலும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இது நான்காவது சந்திப்பு ஆகும். இதற்கு முன்னர் மன்னார், மாத்தறை, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் நடைபெற்றிருக்கின்றது.
இதற்கு முன்னர் அமைக்கப்பட்ட ஆணைக்குழுக்களுக்கு முன்பாக பாதிக்கப்பட்டவர்கள் சாட்சியங்கள் வழங்கியிருக்கிறார்கள். அதில் இருந்தும் நாங்கள் சாட்சியங்களைப் பெற்றிருக்கிறோம் என்று தெரிவித்தார். அலுவலகத்தின் ஆணையாளர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தலைமையில் நடைபெற்ற இந்த மக்கள் சந்திப்பில் ஆணையாளர்களான மேஜர் ஜெனரல் முகாந்தி பீரிஸ், எஸ்.கே. லியனகே, மிராக் றஹீம், ஜெயதீப புண்ணியமூர்த்தி, கணபதிப்பிள்ளை வேந்தன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
-Vidivelliகியாஸ் ஷாபி
Post a Comment