மாகாண சபை தேர்தலில், முஸ்லிம் தரப்பின் வலியுறுத்தல்
மாகாண சபை தேர்தலை உடனடியாக நடத்துவதற்கான முஸ்தீபுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. புதிய கலப்பு தேர்தல் முறையில் தேர்தல் நடத்துவதா அல்லது பழைய முறைப்படி தேர்தலை நடத்துவதா எனும் இழுபறி நீடிக்கின்ற நிலையில், எந்த முறையில் தேர்தல் நடத்தப்பட்டாலும் முஸ்லிம்களுக்கு நியாயமான தீர்வொன்றைத் தரவேண்டும் என முஸ்லிம் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. கிழக்கு, வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களுக்கான பதவிக்காலம் நிறைவடைந்து ஒரு வருடத்திற்கும் மேலாக அச்சபைகள் இயங்காதிருக்கின்றன. அத்துடன் எதிர்வரும் செப்டெம்பர் மாதமளவில் மத்திய, வடமேல் மற்றும் வட மாகாண சபைகளுக்கான பதவிக்காலம் நிறைவடையவிருக்கிறது. இந்நிலையில் பதவிக்காலம் நிறைவடைந்த சபைகளுக்கான தேர்தலை உடனடியாக நடத்துமாறு தொடர்ந்தும் பலதரப்பினராலும் வலியுறுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, கலைந்த சபைகளுக்கான தேர்தலை தாமதப்படுத்துவது ஜனநாயகத்திற்கு விரோதமான செயற்பாடு எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் தேர்தலை உடனடியாக நடத்துவதற்கு அரசாங்க தலைமைகள் ஒத்துழைக்க வேண்டுமெனக் குறிப்பிட்டு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரால் கடந்த செவ்வாயன்று கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டது.
அத்தோடு கடந்த வாரம் சபாநாயகர் தலைமையில் இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தின்போதும் உடனடியாகத் தேர்தலை நடத்துவதற்கு கட்சித் தலைமைகளினால் வலியுறுத்தப்பட்டது. இதன்போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புதிய முறையில் மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கே விரும்புகிறார் என மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பைஸர் முஸ்தபாவினால் தெரிவிக்கப்பட்டது. எனினும் அமைச்சர்களான ஹக்கீம், மனோ கணேஷன் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் புதிய முறையில் தேர்தலை நடத்துவதற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டனர். பழைய முறையில் தேர்தல் நடத்தப்பட வேண்டுமென்றே வலியுறுத்தினர்.
இதற்கிடையில், கூட்டு எதிரணி எந்த முறையிலாவது தேர்தலை நடத்துமாறு தெரிவித்துள்ளது. அத்துடன், ஐக்கிய தேசியக் கட்சி பழைய விகிதாசார தேர்தல் முறையிலாவது உடனடியாக செயலிழந்து இருக்கும் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துமாறு கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின்போது அறிவித்தது.
இவ்வாறானதொரு குழப்பகரமான நிலையில் நேற்றைய தினம் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் மாகாண சபைத் தேர்தல் தொகுதி எல்லை நிர்ணய பிரதிநிதிகள் உள்ளிட்டோருடனான சந்திப்பொன்று நேற்றைய தினம் இடம்பெற்றது. இதன்போது உடனடியாகத் தேர்தலை நடத்துவதற்கான பொது இணக்கப்பாடு எட்டப்பட்டது. அத்துடன் இதுகுறித்து எதிர்வரும் சில தினங்களுக்குள் முக்கிய கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், புதிய மாகாண சபை தேர்தலுக்கான தொகுதி எல்லை நிர்ணயம் முஸ்லிம்களுக்குப் பாதகமானது என புத்திஜீவிகளால் கடந்த காலங்களில் சுட்டிக்காட்டப்பட்டு வந்தது. எனவே, புதிய முறையில் மாகாண சபை தேர்தலை நடத்தினால் முஸ்லிம்களுக்கு பாதகமானதாக அமையுமெனத் தெரிவிக்கப்பட்டு வருவதோடு முஸ்லிம்களுக்கு நியாயமான தீர்வொன்றை பெற்றுத்தந்துவிட்டு உடனடியாக மாகாண சபை தேர்தலை நடத்தவேண்டும் என முஸ்லிம் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
-Vidivelli
Post a Comment