Header Ads



இலங்கையை பாராட்டுகிறார் ஹுசைன்

ஐக்கிய நாடுகள் அமைப்பின் நடைமுறைகளுக்கு இலங்கை வழங்கும் ஒத்துழைப்பானது வரவேற்கத்தக்க விடயம் என, ஓய்வு பெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செய்ட் ராட் அல் ஹுசைன் தெரிவித்துள்ளார். 

ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 38 வது கூட்டத் தொடரில் நேற்று (18) தனது இறுதி உரையினை ஆற்றும் போதே, செய்ட் ராட் அல் ஹுசைன் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

மேலும், ஐக்கிய நாடுகள் மனித உரிமை அதிகாரிகளை கடந்த 5 ஆண்டுகளில், 5 தடவைகள் இலங்கைக்கு வருகை தர அரசாங்கம் அனுமதி அளித்தமை மிகவும் பாராட்டத்தக்க விடயம் எனவும் செய்ட் ராட் அல் ஹுசைன் சுட்டிக்காட்டினார். 

இதேவேளை, கடந்த 5ஆண்டுகளில் குறைந்த பட்சம் 5 தடவைகள் அர்ஜன்டினா, அவுஸ்திரேலியா, அசர்பைஜான், பிரேசில், சிலி, ஜோர்ஜியா, கானா, கிரீஸ், ஹோண்டுராஸ், இத்தாலி, கசகஸ்தான், மெக்சிகோ, கொரியா, செர்பியா, இலங்கை, துனிசியா, உக்ரைன், இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை அதிகாரிகளை தமது நாட்டுக்குள் செல்ல அனுமதி அளித்தமையை செய்ட் ராட் அல் ஹுசைன் நினைவு கூர்ந்தார். 

இவ்வாறன ஒரு அணுகு முறையால் சிறந்த முன்னேற்றங்களை அடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 

இந்நிலையில், ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தால் வரும் வாரங்களில், இலங்கைக்கான புதிய ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நியமிக்கப்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செய்ட் ராட் அல் ஹுசைனின் பதவிக்காலத்தில் இலங்கை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு அதிக ஒத்துழைப்பு வழங்கியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

No comments

Powered by Blogger.