பிறை கொண்டுவந்த சர்ச்சை, ஜம்இய்யா தனது கடமையை முடித்துவிடக் கூடாது.
தாரிக் ஸம்ஊன் (இர்பானி)
பெருநாள் முடிந்துவிட்டது.பெருநாள் பிறை கொண்டுவந்த சர்ச்சை மட்டும் இனி முடியாது தொடரப்போகிறது. எப்படியோ வருடாந்தம் இல்லாவிட்டாலும் இரண்டு மூன்று வருடங்களுக்கு ஒரு தடவையேனும் இந்த சர்ச்சை எழாமல் இருந்ததில்லை.
எப்படியோ இஜ்திஹாத் எனும் முறையியலை சார்ந்த இந்தப் பிறை சர்ச்சை,சமூகத்தை பலவகையில் உட்கூறாகப் பிளவுபடுத்தியுள்ளது. இஜ்திஹாத் வகைப்பட்ட எந்த ஒன்றும் சந்தேகத்துக்கிடமின்றி நிரூபிக்கப்பட முடியாதது. பிறை சர்ச்சையில் ஒவ்வொரு சாராருக்கும் ஒவ்வொரு நியாயம் உண்டு.ஒவ்வொரு நிலைப்பாட்டைக் கொண்டோருக்கும் அல்லாஹ்வே கூலி வழங்கட்டும் என பிரார்த்திப்போமாக!
இஜ்திஹாத் வகைப்பட்ட விடயங்களில் இஸ்லாத்தின் நிலைப்பாடு மிகத்தெளிவானது. "தீர்ப்பு சொல்லும் ஒருவர் ஆய்வுசெய்து அதில் சரியான நிலைப்பாட்டை அடைந்தால் அவருக்கு இரண்டு கூலிகள். அவர் ஆய்வுசெய்து தவறிழைத்துவிட்டால் அவருக்கு ஒரு கூலியும் கிடைக்கும் என்ற ஸஹீஹுல் புகாரியில் பதிவாகியுள்ள இந்த ஹதீஸ், இஜ்திஹாத் வகைப்பட்ட நிலைப்பாட்டின் இஸ்லாத்தின் பார்வையை மிகத்தெளிவாக முன்வைக்கிறது. இப்படியான ஆய்வுக்கும் பல்வேறு நிலைப்பாடுகளுக்கும் இடம்பாடான விடயமொன்றில் ஒரு நிலைப்பாடே சந்தேகத்திற்கிடமின்றி மிகச்சரியானது என்று எவரும் உரிமை கோர முடியாது.
ஷவ்வால் பிறை தொடர்பான சர்ச்சைக்கு வகை சொல்ல வேண்டிய அ.இ.ஜ.உ க்கு இனி ஒரு கடமை இருக்கிறது.பிறை தொடர்பில் எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து ஒரு பெரிய உரையாடல் சமூகத்தில் நடந்து வருகின்றது.கவனத்திற்கொள்ளத்தக்க ஆய்வுகளும் முன்மொழிவுகளும் பல தரப்பாலும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இதனை மிக இலகுவில் ஜம்இய்யா கடந்துசெல்ல முடியாது.முஸ்லிம் சமூகத்தின் பெரும்பான்மையை பிரதிநிதித்துவப்படுத்தும் சிவில் அமைப்பு என்ற வகையில் சமூகத்தின் விமர்சனங்கள், அபிலாசைகள், ஆலோசனைகளை உள்வாங்கும் பொறுப்பு ஜம்இய்யாவுக்கு உள்ளது.
ஷவ்வால் பிறை தொடர்பில் ஜம்இய்யாவின் நிலைப்பாட்டை நியாயப்படுத்துவதோடு ஜம்இய்யா தனது கடமையை முடித்துவிடக் கூடாது. தனது இஜ்திஹாத் நிலைப்பாட்டை நியாயப்படுத்துவது எந்த வகையிலும் பிழையாகாது. ஆனால் குறித்த இஜ்திஹாத் தொடர்பில் இயல்பாக எழுந்துள்ள புதிய உரையாடல், எதனை சொல்ல வருகின்றது என்பதையும் கவனத்திற்கொள்ள வேண்டும். இது ஜம்இய்யா சரிகண்ட இஜ்திஹாத் நிலைப்பாட்டை இன்னும் மிகச் சரியான நிலைப்பாட்டை எடுக்கும் புதிய நியாயங்களை தேடுவதற்கான வழியாக அமையலாம்.
ஜம்இய்யா இந்த விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்கு இங்கு இன்னுமொரு விடயமும் இருக்கிறது. இஜ்திஹாத் அடிப்படையில் சர்வதேச பிறையை சரிகாணும் சாராரின் நிலைப்பாடு ஜம்இய்யாவின் நிலைப்பாட்டுக்கு முரணாவது இயல்பானதே.ஆனால் அ.இ.ஜ.உ. பிறை முடிவுக்கு கட்டுப்பட்டு வரும் சாராரும் இது போன்ற நிலைகளில் ஜம்இய்யாவின் நிலைப்பாட்டுக்கு வெளியில் வேறொரு இஜ்திஹாதை நோக்கி செல்வதை அது பிழையான இஜ்திஹாத் எனும் ஒற்றை வார்த்தையால் மாத்திரம் எதிர்கொள்ளக்கூடாது.ஏனெனில், குறித்த உரையாடலானது இதுவரை ஜம்இய்யாவின் தலைமைக்கு கட்டுப்பட்டு வரும் சமூகத்திற்குள் இடம்பெற்று வரும் விடயம் என்பதை மனங்கொள்ள வேண்டும். அதனால் மாறுபட்ட நிலைப்பாட்டைக் கொண்டுள்ள உள்நாட்டுப் பிறைக்காரர்களில் அபிப்பிராயங்கள் கண்டிப்பாகக் கவனத்தில் கொள்ளப்படவே வேண்டும்.
சமூகத்தில் எழுந்துள்ள இந்த உரையாடலை வளர்த்துக்கொண்டு செல்வதும் அதனை முறைப்படுத்தி தீர்வுக்காக ஆவன செய்வதும் ஜம்இய்யா மீது தற்போதுள்ள மிகப்பெரிய பொறுப்பாகும். இதற்காகத் தனியான உப குழுவொன்றை அமைப்பதோ அல்லது வேறு பொறிமுறையை கையாள்வதோ அவசியமாகிறது.
இங்கு பிறை பார்த்தல், அது தொடர்பாக ஏலவே அ.இ.ஜ.உ. பின்பற்றிவரும் நியமங்கள், இதனை விடப் பின்பற்ற முடியுமான வேறு அணுகுமுறைகள் தொடர்பில் எந்தக் கருத்தையும் நாம் இங்கு முன்வைக்க விரும்பவில்லை. இது தொடர்பில் சமூக வலைத்தளங்களில் ஆழமான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இந்த உரையாடலை,விமர்சனங்களை ஆக்கபூர்வமான ஒன்றாக மாற்றி பிறை தொடர்பான இஜ்திஹாதை இன்னும் சிறப்பாக மேற்கொள்ள வழியமைக்க வேண்டும் என்பதே எமது அபிப்பிராயம்.
பிறை தொடர்பான விடயம் மட்டுமன்றி, பல்வேறு அபிப்பிராயங்களை கொண்டுள்ள எல்லா விடயங்கள் தொடர்பாகவும் இந்த நிலைப்பாடே ஆரோக்கியமானது. சந்தேகத்துக்கிடமின்றி நிரூபிக்கப்பட முடியுமான இஜ்திஹாத் ஒன்றில்லை என்றாலும் மிகச் சரியான இஜ்திஹாத் முடிவொன்றைக் கண்டடைய முடியுமான முயற்சியொன்றை கைக்கொள்வது தவறில்லை. அதற்கான மாறுபட்ட உரையாடல்கள் இருப்பதும் தவறில்லை.
Post a Comment