மருமகனை கத்தியால், குத்திய மாமனார் - காதியார் முன் கொடூரம்
முஸ்லிம் பெண்களின் தனித்துவத்தை பேணுவதற்காக நாட்டில் அமையப்பெற்றுள்ளதே காதி நீதிமன்றக் கட்டமைப்பாகும். இம்முறை முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டுள்ள கௌரவமாகும்.
காதி நீதிமன்றுக்குள் காதி நீதிவான் முன்னிலையில் தலாக் வழக்கொன்றின் கவுன்சிலிங் நடைபெற்றுக் கொண்டிருக்கையில் கத்திக்குத்து சம்பவம் ஒன்று களுத்துறையில் இடம்பெற்றுள்ளது. இதிலிருந்து எமது சமூகம் நாட்டின் சட்டத்தை எந்தளவுக்கு மதிக்கிறது என்பது நிரூபணமாகியுள்ளது.
முஸ்லிம் சமூகம் எமது நாட்டிலுள்ள ஏனைய நீதிமன்றங்களுக்கு வழங்கும் கௌரவமும், மரியாதையும் காதி நீதிமன்றங்களுக்கு வழங்குவதில்லை. காதி நீதிமன்ற அழைப்பாணைகளைக்கூட சிலர் கவனத்தில் கொள்வதில்லை. எத்தனையோ காதி நீதிமன்றங்களின் அமர்வுகளின்போது வாதி, பிரதிவாதிகள் மற்றும் அவர்கள் சார்ந்தோர் தூஷண வார்த்தைகளைப் பிரயோகிப்பது இடம் பெறுகிறது.
காதி நீதிமன்றங்கள் பலரால் அவமதிப்புச் செய்யப்படுகின்றன. இவற்றையெல்லாம் மீறி களுத்துறை காதி நீதிமன்றில் கத்திக்குத்துச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதென்றால் இவ்விவகாரம் தொடர்பில் கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்பது அவசியமாகும்.
கடந்த 2 ஆம் திகதி களுத்துறை காதி நீதிமன்றில் விசாரணையின் கீழ் இருக்கும் தலாக் வழக்கொன்று தொடர்பான கவுன்சிலிங் இடம்பெற்றது. கவுன்சிலிங்கிற்கு வாதியான கணவரும் பிரதிவாதியான மனைவியும் அழைக்கப்பட்டிருந்தார்கள். கவுன்சிலிங் காலை 10.30 மணி முதல் 11.30 மணிவரை நடைபெற்றது.
கவுன்சிலிங் களுத்துறை பிரதேச காதி நீதிபதியின் தலைமையில் நடைபெற்றது. இக்குழுவில் அப்பிரதேச பள்ளிவாசலின் பேஷ் இமாம், பாடசாலையொன்றின் பெண் அதிபர், டாக்டர் ஒருவரும் அடங்கியிருந்தனர். கவுன்சிலிங் களுத்துறை காதி நீதிமன்றில் நடந்து கொண்டிருந்தபோது வாதி, பிரதிவாதிகள் தரப்பினர் வெளியில் இருந்தனர்.
கவுன்சிலிங் நடந்து கொண்டிருந்தபோது திடீரென பிரதிவாதியான பெண்ணின் தந்தை உட்பிரவேசித்து வாதியான கணவரை கத்தியினால், குத்தியுள்ளார். இச்சம்பவம் காதிநீதிவான் மற்றும் மூவரடங்கிய கவன்சிலிங் குழுவினரின் முன்னிலையிலே இடம்பெற்றுள்ளது. மாமனாரின் கத்திக்குத்தினால் மருமகனான கணவர் படுகாயமுற்ற நிலையில் அம்புலன்ஸ் வண்டியில் நாகொடை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அவர் நாகொட வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு பின்பு வைத்தியசாலையின் சாதாரண விடுதிக்கு மாற்றப்பட்டு தற்போது சிகிச்சையின் பின்பு வெளியேறியுள்ளார். கத்திக்குத்து மேற்கொண்ட மாமனாரை களுத்துறை தெற்கு பொலிஸார் கைது செய்து களுத்துறை நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்தனர். களுத்துறை நீதிவான் நீதிமன்ற பதில் நீதிவான் பந்துல வீரசிங்க சந்தேகநபரை எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
குறிப்பிட்ட தலாக் வழக்கு பேருவளை காதி நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டதாகும். இவ்வழக்கு சுமார் மூன்று தடவைகள் பேருவளை காதிநீதிமன்றில் விசாரணை நடந்த பின்பு வாதியினால் இவ்வழக்கினைத் தொடர விஷேட காதி நீதிபதியொருவரை நியமிக்கும்படி நீதிச்சேவை ஆணைக்குழுவிடம் கோரியிருந்ததையடுத்தே களுத்துறை பிரதேச காதி நீதிவான் நீதிச்சேவை ஆணைக்குழுவினால் விஷேட காதி நீதிபதியாக நியமிக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது.
இவ்வழக்கு 2017 ஆம் ஆண்டு பேருவளை காதி நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டதாகும். 2018 பெப்ரவரியிலே களுத்துறை காதி நீதிவான் இவ்வழக்கிற்கான விஷேட காதி நீதிபதியாக நியமிக்கப்பட்டு வழக்கு கோவை பேருவளை காதி நீதிமன்றிலிருந்து களுத்துறை காதி நீதிமன்றுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
களுத்துறை காதி நீதிமன்றம் இவ்வழக்கினை விசாரணை செய்துகொண்டிருந்த நிலையில் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து வைப்பதற்காக கவுன்சிலிங்கை ஏற்பாடு செய்திருந்தது. கடந்த ஏப்ரல் மாதமும் கவுன்சிலிங் இடம்பெற்றது. அதனையடுத்து இரண்டாவது கவுன்சிலிங்கே கடந்த 2 ஆம் திகதி இடம்பெற்றதாகும். இச்சந்தர்ப்பத்திலே கத்திக்குத்துச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.
இவ்வழக்கின் வாதி, பிரதிவாதிகள் திருமணம் செய்து 5 வருடங்கள் கடந்து விட்ட நிலையில் 4 வயதில் ஓர் குழந்தையும் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
தலாக் வழக்கின் வாதியான (விண்ணப்பதாரி) கணவன் தனியார் துறையிலும் பிரதிவாதியான மனைவி அரசாங்கதுறையிலும் பணிபுரிபவர்களாகும்.
எம் சமூகத்தில் படித்தவர்கள் தரப்பினர் நீதிவழங்கும் நீதிமன்றங்களில் அத்துமீறிப் பிரவேசித்து இவ்வாறான அடாவடித்தனங்களில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கதாகும்.
காதி நீதிமன்றங்களில் இவ்வாறான உயிராபத்துமிக்க சம்பவங்கள் இடம்பெறாதிருப்பதற்காக பொலிஸ் பாதுகாப்பினைப் பெற்றுக்கொள்வது அவசியமாகும். காதி நீதிமன்றங்களுக்கு விசாரணைகளின் போது பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமென நீதிச்சேவை ஆணைக்குழு பொலிஸ்மா அதிபரை வேண்டியுள்ளதை யடுத்து பொலிஸ் பாதுகாப்பு ஏற்கனவே வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
-Vidivelli
இந்த கத்திகுத்தால் முஸ்லிம்களுக்கான தனியார் சட்டங்களில் ஒன்றான காதி நீதிமன்றம் பௌத்த சிங்கள அரசால் காரணம் காட்டி இன்யும் தடைசெய்யப்படலாம்.
ReplyDeleteவிவாகரத்திற்கான காரணம் சொல்லப்படவில்லை இருப்பினும் பொம்புள (அரச) உத்தியோகத்தர் என்பதால் குடும்ப நிருவாகத்தை ஒழுக்கத்தை நோக்கி நகர்த்துவதில் சிரமங்கள் வந்திருக்கலாம்.
Qazhi judges always speak in a very bad manner. There are many unqualified judges in Qazhi courts.
ReplyDeleteமூன்றாம் நபர்களின் குறிப்பாக பெற்றோரின் அனாவசிய தலையீடுகள் அனேக விவாகரத்துகளுக்கு காரணமாக அமைவதை காணக்கூடியதாகவுள்ளது.
ReplyDelete