தேர்தலில் போட்டியிடுமாறு மஹிந்த இன்னும் கூறவில்லை, போட்டியிட கிடைத்தால் அமெரிக்க குடியுரிமையை இரத்துச் செய்வேன்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தன்னிடம் இன்னும் அறிவிக்கவில்லை என கோத்தபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் இன்று 25-- ஆஜராகிய கோத்தபாய மூன்று மணி நேரம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
பின்னர் விட்டு அங்கிருந்து வெளியேறும் போது ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே இதனை கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக போட்டியிட சந்தர்ப்பம் கிடைத்தால் அமெரிக்க குடியுரிமையை இரத்துச் செய்து விடுவேன்.
அதனை செய்ய இரண்டு மாதங்கள் என்ற குறுகிய காலமே செல்லும் எனவும் கோத்தபாய ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை ஹிட்லர் போன்று சர்வாதிகார ஆட்சியாளராக மாறி நாட்டை முன்னேற்றவேண்டும் என்று அஸ்கிரி பிரதி மாநாயக்கர் வெடருவே உபாலி தேரர் கூறியமை தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த கோத்தபாய,
தேரர் தனக்கு தனிப்பட்ட ரீதியில் அதனை கூறியதாகவும் பலர் அதனை பொதுவாக எடுத்துக்கொண்டு விமர்சனங்களை முன்வைத்து வருவது குறித்து ஆச்சரியமடைவதாகவும் கூறியுள்ளார்.
மேலும், தங்காலை வீரகெட்டிய பிரதேசத்தில் தனது தந்தை டி.ஏ. ராஜபக்ச நினைவு அருங்காட்சியகம் ஒன்றை நிர்மாணிக்க அரச பணத்தை தவறாக பயன்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் வழங்க கோத்தபாய நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜராகியிருந்தார்.
இந்த சம்பவம் தொடர்பில் தனக்கு எதிராக பொது சொத்துக்கள் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுவது மற்றும் கைது செய்யப்படுவதை தடுத்து நிறுத்துமாறு கோரி, கோத்தபாய ராஜபக்ச மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கொன்றை தொடர்ந்துள்ளார்.
அதனை விசாரித்த நீதிமன்றம் கோத்தபாய கைது செய்யப்படுவதை தடுத்து நிறுத்தி இடைக்கால உத்தரவு ஒன்றையும் பிறப்பித்துள்ளது.
Post a Comment