ஜனாதிபதிக்கு கபீர் பதிலடி
- MM.Minhaj-
ராஜபக்ஷ ஆட்சிக்கு எதிராக வெளியேறி வந்த அனைவருடனும் சேர்ந்தே 100 நாள் திட்டத்தை தயாரித்தோம்.தற்போது இல்லை என்று கூறுவதனை ஏற்க முடியாது. இது தொடர்பாக கேள்வி கேட்பதாயின் ஜனாதிபதியிடம் கேட்க வேண்டும். இந்த திட்டத்தில் மக்கள் நலன் சார்ந்த விடயங்கள் பல உள்ளன. ஆகவே இந்த திட்டத்தை தயாரித்தமைக்கான பொறுப்பை ஐக்கிய தேசியக் கட்சி ஏற்றுக்கொள்வதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் அமைச்சருமான கபீர் ஹாஷிம் தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டம் நேற்று சிறிகொத்தா கட்சி தலைமையகத்தில் கூடியது. இந்த கூட்டம் நிறைவடைந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது அமைச்சர்களும் இராஜாங்க அமைச்சர்களும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தனர்.
இங்கு அமைச்சர் கபீர் ஹாஷிம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
கட்சி மறுசீரமைப்புக்கான மாதாந்த செயற்குழு கூடியது. எதிர்வரும் காலங்களில் எமது வேலைத்திட்டங்களை உரிய முறையில் முன்னெடுக்க உள்ளோம். நாம் நியமித்த குழுக்களின் பிரதிபலன்கள் எத்தகையது என்பது தொடர்பில் செயற்குழுவில் அதிக அவதானம் செலுத்தப்பட்டது. தொகுதி அமைப்பாளர்கள், புதிய பதவிகளுக்கான ஆட்சி எதிர்வரும் காலங்களில் நியமிக்கவுள்ளோம்.
அத்துடன் தற்போது கட்சியின் பொதுச்செயலாளர் தொகுதிகளின் நிலை மட்டத்தை மீளாய்வு செய்து வருகின்றார். அதற்கான அறிக்கை பூர்த்தியான பின்னர் புதிய தொகுதி அமைப்பாளர்கள் நியமிக்கப்படுவர்.
மாகாண சபைகளுக்கான புதிய தேர்தல் முறைமை தொடர்பில் குழப்பம் உள்ளது. இது தொடர்பாக அனைத்து கட்சி தலைவர்களுடன் பேசுவோம். அதன்பின்னர் என்ன தேர்தல் முறை என்பதனை தீர்மானிப்போம். ஆகவே அதனை பிரதமர் அறிவிப்பார்.
இதன்போது ஊடகவியலாளர்களின் கேள்விக்கு அமைச்சர் பதிலளிக்கும் போது,
கேள்வி: -100 நாள் வேலைத்திட்டம் தயாரித்தமை தனக்கு தெரியாதென்றும் அந்த வேலைத்திட்டம் தொடர்பாக ஜனாதிபதி அதிருப்தி வெளியிட்டுள்ளாரே?
பதில்:- 100 நாள் வேலைத்திட்டத்தை அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்தே தயாரித்தனர். அப்போது ஜனநாயத்தை நிலைநாட்டுவதற்காக எம்முடன் ஒன்றிணைந்த கட்சிகளின் உதவியுடன் இந்த திட்டத்தை தயாரித்தோம். 100 நாள் வேலைத்திட்டத்தின் ஊடாக பொது மக்களுக்கு சிறந்த நலன் கிட்டியது. சமுர்த்தி கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டது. அரச மற்றும் தனியார் ஊழியர்களுக்கான சம்பளம் அதிகரிக்கப்பட்டது. அத்தியாவசிய பொருட்களின் விலை குறைக்கப்பட்டது. சமையல் எரிவாயு விலை குறைக்கப்பட்டது. அத்துடன் எமது நாட்டு சட்டத்தில் பாரதூரமானவற்றை திருத்தி சாதகமான சட்டங்களை நிறைவேற்றினோம். ஆகவே நூறு நாள் திட்டத்தை அனைத்து கட்சிகளுடன் சேர்ந்து தயாரித்தோம். 100 நாள் திட்டத்தை தயாரித்தமைக்கான பொறுப்பை ஐக்கிய தேசியக் கட்சி ஏற்றுக்கொள்ளும்.
கேள்வி ஜனாதிபதி தனக்கு தெரியாது என்று கூறுகின்றாரே?
பதில்: -அதுதான் அதற்கான பதிலைதான் நான் கூறினேன். நாம் அனைவரும் ஒன்று சேர்ந்தே தயாரித்தோம். தற்போது இல்லை என்று கூறுவதனை ஏற்க முடியாது. இந்த கேள்வியை நீங்கள் ஜனாதிபதியிடம் கேட்க வேண்டும். ராஜபக் ஷ ஆட்சிக்கு எதிராக வெளியேறி வந்த அனைவருடனும் சேர்ந்தே 100 நாள் திட்டத்தை தயாரித்தோம் எனறார்.
திலிப் வெதஆராச்சி
இதன்போது இராஜாங்க அமைச்சர் திலிப் வெதஆராச்சி ஊடகங்களுக்கு குறிப்பிடுகையில்,
100 நாள் வேலைத்திட்டம் தொடர்பாக என்னால் எதுவும் கூற முடியாது. 100 நாள் வேலைத்திட்டத்தை ஜனாதிபதியும் பிரதமரும் சேர்ந்தே தயாரித்தனர். இந்நிலையில் தற்போது எனக்கு தெரியாது என்று கூறும் கருத்தை நான் வன்மையாக எதிர்க்கின்றேன். நாங்களே தெரிவு செய்துவிட்டு நாமே திட்டும் வாங்குகின்றோம். ஆகவே இந்தப் பிரச்சினைக்கு தலைவர்கள் இருவருமே தீர்வு காணவேண்டும் என்றார்.
ரஞ்ஜித் மத்தும பண்டார
இதன்போது அமைச்சர் ரஞ்ஜித் மத்தும பண்டார குறிப்பிடுகையில், ஜனாதிபதி விமர்சனங்களுக்கு நான் பதிலளிக்க விரும்பவில்லை. ஜனாதிபதியின் கூற்று அவரது கருத்தாகும். அது தொடர்பில் ஆராய வேண்டியதில்லை. இதற்கு பதில் கூற வேண்டியதில்லை என்றே பிரதமரும் கூறினார் என்றார்.
எரான் விக்கிரமரத்ன
இதன்போது நிதி இராஜாங்க அமைச்சர் எரான் விக்கிரமரத்ன கூறும் போது, 100 நாள் வேலைத்திட்டத்தை நாம் அனைவரும் ஒன்று சேர்ந்தே தயாரித்தோம். தனியாக இந்த திட்டம் தயாரிக்கப்படவில்லை. இந்த திட்டத்தின் ஊடாக பல நன்மையான விடயங்கள் நடந்துள்ளன என்றார்.
Post a Comment