வியாபாரிகள் மத்தியிலும், வியாபாரத்திலும் விரிந்த உள்ளம் அவசியம் - தொழில் அதிபர் முபாரக்
வியாபாரிகள் மத்தியிலும் வியாபாரத்திலும் விரிந்த உள்ளம் இன்று அவசியமாகவுள்ளதுடன் இஸ்லாமிய வியாபார முறைமையினை அமுல்படுத்துவதன் அவசியத்தையும் நாம் உணர்ந்துள்ளோம் என சாய்ந்தமருது – மாளிகைக்காடு வர்த்தகர் சங்கத்தின் தலைவரும், முபாறக் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளருமான எம்.எஸ்.எம்.முபாறக் தெரிவித்தார்.
சாய்ந்தமருது – மாளிகைக்காடு வர்த்தகர் சங்கத்தின் 'வர்த்தகர் ஒன்றுகூடல்' இன்று திங்கட்கிழமை (07) சாய்ந்தமருது லீ மெரீடியன் வரவேற்பு மண்டபத்தில் சாய்ந்தமருது – மாளிகைக்காடு வர்த்தகர் சங்கத்தின் தலைவரும், முபாறக் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளருமான எம்.எஸ்.எம்.முபாறக் தலைமையில் இடம்பெற்றது. இதில் தலைமை உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
நாம் வர்த்தகத்தில் ஈடுபடுகின்றோம், ஆனால் அது பற்றி பூரண அறிவு எம்மிடம் இருக்கின்றதா என்பதை உணர்ந்துள்ளோமா. இன்று வர்த்தகத்தில் தொழில்நுட்பத்தின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. இதற்கேற்றாப்போல் எமது வர்த்தகத்தை முன்கொண்டு செல்லவேண்டும். நாம் இது பற்றி எதிர்காலத்தில் கற்றுக்கொள்வதற்கு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
வியாபாரிகள் மத்தியிலும் வியாபாரத்திலும் விரிந்த உள்ளம் அவசியமாகின்றது. வர்த்தகர்களுக்கு வர்ததகர் உதவி ஒத்தாசையாகவும் புரிந்துணர்வுடனும் இருக்கவேண்டும்.
எமது நிறுவனங்களை வாடிக்கையாளர்களை கவரக்கூடியவாறு அழகுபடுத்தல் மிக முக்கியமென கருதுகின்றேன். இதனை நாம் செலவாக கருதாமல் வியாபாரத்திற்கான மூலதமாக கருதவேண்டும். மேலும் எம்மை நாடிவரும் வாடிக்கையாளர்களுக்கு தரமான பொருட்களை நியாயமான விலைகளில் விற்பனை செய்வதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
எமது வர்த்தக நிறுவனங்கள் அமைந்துள்ள பஸாரை சுத்தமான வைத்திருப்பதற்கான திட்டமொன்றினை நாம் வகுத்துள்ளோம். அதனை நடைமுறைப்படுத்த ஒத்துழைப்பு வழங்கும் உறுப்பினர்களை அடுத்துவரும் ஒன்றுகூடலில் கௌரவிக்கவுள்ளோம் எனவும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜூம்ஆப் பள்ளிவாசல் தலைவர் வை.எம்.ஹனீபா, கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான ஏ.ஆர்.எம்.அசீம், ஏ.அஸீம், எம்.எஸ்.ஏ.றபீக், எம்.பஸ்மீர், காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் எம்.ஆர்.எம்.பஸ்மீர், ஓய்வுபெற்ற முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி எம்.மைமுனா, சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜூம்ஆப் பள்ளிவாசல் முன்னாள் தலைவர் சட்டத்தரணி ஏ.அஸீஸ், கல்முனை பிராந்திய மின் பொறியியலாளர் எம்.ஆர்.எம்.பர்ஹான், கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் எம்.வை.சலீம், சட்டம் ஒழுங்கு அமைச்சின் மேலதிக செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனீபா, சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலை வைத்திய அதிகாரி எம்.எம்.எஸ்.ஜெசீலுல் இலாஹி, சாய்ந்தமருது வைத்திய அதிகாரி ஏ.எல்.எம்.அஜ்வத், கல்முனை பிராந்திய தொற்றா நோய் பிரிவு வைத்திய அதிகாரி என்.ஆரிப், சாய்ந்தமருது – மாளிகைக்காடு வர்த்தகர் சங்கத்தின் செயலாளர் எம்.எப்.ஏ.வாஸித் உள்ளிட்ட உயரதிகாரிகள், வர்த்தகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
(றியாத் ஏ.மஜீத்)
Post a Comment