Header Ads



தாஜுதீன் படுகொலை, மஹிந்த குடும்பத்தினருக்கு பாதுகாப்புக் வழங்கியவர்களிடமும் விசாரணை

ரக்பி வீரர் வசிம் தாஜுடீனின் படுகொலை தொடர்பில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் குடும்பத்தினருக்கு, சுமார் மூன்றரை ஆண்டுகள் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபட்ட கடற்படையினர் பாவித்த, தகவல் பதிவு புத்தகங்கள் மற்றும் விடுமுறை சம்பபந்தப்பட்ட தகவல்களைக் கொண்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக விசாரணைகளை முன்னெடுக்கும் இரகசிய பொலிஸார், இன்று நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.

வசிம் தாஜுதீனின் படுகொலை தொடர்பிலான வழக்கு, இன்று கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த லியனகே முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, இந்த படுகொலைத் தொடர்பிலான விசாரணைகள் குறித்த முன்னேற்ற அறிக்கையை சமர்ப்பித்த இரகசிய பொலிஸார் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளனர்.

இன்றைய வழக்கு விசாரணையின் போது, சந்தேகநபர்களாக அடையாளம் காணப்பட்டுள்ள,  முன்னாள் சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் அநுர சேனாநாயக்க, நாரஹேன்பிட்டி போக்குவரத்து பிரிவின் முன்னாள் நிலைய பொறுப்பதுகாரி சுமத் குமார மற்றும் கொழும்பு முன்னாள் பிரதம சட்டமன்ற வைத்திய அதிகாரி, பேராசிரியர் ஆனந்த சமரசேகர ஆகியோர் முன்னிலையாகியிருந்தனர்.

இதன்போது, வசிம் தாஜுடீன் படுகொலை செய்யப்பட்ட தினமான கடந்த 2012ஆம் ஆண்டு மே 17ஆம் திகதி நள்ளிரவு, 12.32க்கு சந்தேகத்துக்குரிய குறுந்தகவல் ஒன்று பாதிக்கப்பட்ட வசிமின் கையடக்கத் தொலைபேசிக்கு வந்துள்ளதாகவும், அந்த குறுந்தகவலானது ரஷ்மி த சில்வா என்பவரால் அனுப்பப்பட்டமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் இரகசிய பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

இதுத் தொடர்பில் மேலும் சிலரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டியிருப்பதாகவும், கடந்த 2012ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதியிலிருந்து 2015 மே 30ஆம் திகதி வரை முன்னாள் ஜனாதிபதியின் குடும்பத்துக்கு பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபட்ட கடற்படையினர் பாவித்த, தகவல் பதிவு புத்தகங்கள் மற்றும் விடுமுறை சம்பபந்தப்பட்ட தகவல்களை ஆராய்ந்து வருவதாகவும் இரகசிய பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.