முஸ்லிம் என்பதால் சாஜித்தா மீது, பாயும் பௌத்த இனவாதம் - பிணை கிடைக்க முடியாத சூழல்
இபலோகம பிரதேச சபையின் பிரதேச செயலாளர் சஜீதா பானு மீதான இனவாதச் செயற்பாடுகள் அதிகரித்து வருகின்றன. வரலாற்றுப் புகழ்மிக்க விஜிதபுர தொல்பொருட்களுக்கு சேதம் விளைவித்ததாக பொய்க் குற்றம் சாட்டியே இந்த இனவாத செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
அனுராதபுரம் இபலோகம பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் வீடமைப்புத் திட்டம் ஒன்றை அமைப்பதற்காக பிரதேச செயலாளர் சாஜிதா பானு அனுமதியளித்த 10 ஏக்கர் நிலப்பரப்புக்கு அப்பாலுள்ள பிரதேசத்தில், தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் மேற்கொள்ளப்பட்ட துப்பரவாக்கல் வேலைகளின் போதே தொல்பொருட்கள் சேதமடைந்துள்ளதாகத் தெரியவருகிறது. இருந்த போதிலும், பிரதேச செயலாளர் ஒரு முஸ்லிம் என்ற காரணத்தினால் இந்தத் தவறை சாஜிதா பானுவின் மீது திணிப்பதற்கு இனவாத பௌத்த அமைப்புக்களும், அவர்களின் ஊதுகுழல்களான ஊடகங்களும் பெரும் முயற்சி செய்து வருகின்றன.
புராதனச் சின்னங்களை சேதமாக்கிய குற்றத்துக்கு உரியவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஓமல்பே சோபித தேரர் தொல்பொருள் திணைக்களப் பணிப்பாளருக்கு வேண்டுகோள் ஒன்றைச் சமர்ப்பித்துள்ளார். அது போல பல பௌத்த அமைப்புக்கள் இதற்கெதிராக உயர்மட்ட அழுத்தங்களையும் பிரயோகித்து வருகின்றன.
இந்நிலையில் பிரதேச செயலாளர் இபலோகம் பிரதேச செயலாளர் பிரிவிலிருந்து பலுகஸ்வெவ பிரதேச செயலாளர் பிரிவுக்கு இடமாற்றப்பட்டுள்ளார். பின்னர் அவர் அங்கிருந்து அனுராதபுர கச்சேரிக்கு மாற்றப்பட்டுள்ளார். தொல்பொருட்களை சேதமாக்கியதாக இவர் குற்றஞ்சாட்டப்படுவாரானால் இவருக்கு பிணை கிடைக்க முடியாத சூழல் உருவாகி வருகிறது. இதற்கெதிராக உயர்நீதி மன்றத்தில் தாம் நடவடிக்கை எடுத்து வருவதாக சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் தெரிவித்தார்.
இதற்கு முன்னரும் முஸ்லிம்களுக்குச் சார்பாகத் தீர்ப்பு வழங்கினார் என்று குற்றஞ்சாட்டி பொத்துவில் நீதிபதி அப்துல் வாஹிதுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. திருகோணமலை சண்முக இந்து மகளிர் கல்லூரி விவகாரத்திலும் பாதிக்கப்பட்ட முஸ்லிம் ஆசிரியர்களே இடமாற்றப்பட்டனர்.
நீதிபதியின் பெயர் அப்துல் வஹாப்.
ReplyDelete