Header Ads



கிரிக்கெட் வீரரின் தந்தை கொலை - நடந்தது என்ன..?


இரத்மலானை - ஞானேந்திர வீதியில், நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்
, தெஹிவளை -  கல்கிஸை மாநகர சபையின் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுண கட்சி உறுப்பினர் ரஞ்சன் சில்வா உயிரிழந்த சம்பவம் தொடர்பான உண்மை வெளியாகியுள்ளது.

இந்தப் படுகொலையாலிகள் பயணித்த வெள்ளை நிற கார் தொடர்பில், பொலிஸ் குற்றப்புலனாய்வுப் பிரிவினர், விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில், குறித்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம், இரத்மலானை அஞ்சு எனும் பாதாள உலகக் கோஷ்டித் தலைவரால் செயற்படுத்தப்பட்டதெனும் தகவல் வெளியாகியுள்ளது.

நேற்று இரவு 8.30 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், காயமடைந்த இருவரில் ஒருவர், மேற்படி மாநகர சபையின் ஊழியரெனவும் மற்றையவர், ஆமி சம்பத் (உக்குங்) என்றழைக்கப்படும் சரத் ஜயகொடி என்பவரென்றும்,

இவர்கள் இருவரும், களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனரென்றும், பொலிஸார் தெரிவித்தனர்.

இரத்மலானை லன்சியா மற்றும் இரத்மலானை ரொஹா ஆகிய இரு பாதாள உலகக் கோஷ்டியினருக்கு இடையில், நீண்ட காலமாக நிலவிவந்த பிரச்சினையே, இந்தச் துப்பாக்கிச் சூட்டுக்குக் காரணமெனச் சந்தேகிக்கப்படுவதோடு,

சம்பவத்தில் உயிரிழந்த ரஞ்சன் சில்வா, ரத்மலானை ரொஹா​ குழுவுக்கு நிதியுதவி செய்துவந்தமைக்காகவே படுகொலை செய்யப்பட்டுள்ளார் என கூறப்பட்டுள்ள போதும்  அதனை அவரது மகன் மறுத்துள்ளார்.

போதைப் பொருள் வர்த்தகத்திற்கு எதிராக செய்யப்பட்ட முறைப்பாடே என் தந்தை மீதான துப்பாக்கி பிரயோகத்திற்கு காரணம். சில நொடிகள் வித்தியாசத்தில்  அப்பா துப்பாக்கிக் குண்டுபட்டு பலியானாரென இலங்கை கிரிக்கெட் வீரர் தனஞ்சய டி சில்வாவின் சகோதரர் சாவித்திர டி சில்வா தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் கிரிக்கெட் வீரர் தனஞ்சய டி சில்வாவின் சகோதரர் மேலும் தெரிவிக்கையில்,

போதைப் பொருள் வர்த்தகத்திற்கு எதிராக செய்யப்பட்ட முறைப்பாடே இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கு காரணம்.

வீட்டிற்கு வெளியே நேற்றிரவு 8.30 அளவில் நானும் எனது தந்தையும் இன்னும் சிலரும் நின்று பேசிக் கொண்டிருந்தோம். நான் கடைக்குச் சென்றுவருவதாக கூறிவிட்டு அவ்விடத்தைவிட்டு நகர்ந்தேன். 

நான் அந்த இடத்தில் இருந்து சென்ற சில நிமிடங்களில் அங்குவந்த இனந்தெரியாத நபர்கள் அப்பா மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர்.

'இந்த மாத முற்பகுதியில் இந்தப் பிரதேசத்தில் போதைப் பொருள் விற்பனை செய்யும் பாதாள உலகக் குழுவினர் குறித்து பொலிசாருக்கு முறைப்பாடொன்று செய்திருந்தோம்.

இவர்கள் யார் என்பது எமக்கு நன்றாக தெரியும். இவர்கள் மோசமானவர்கள் என்பதால் யாரும் இவர்களுக்கு எதிராக முறைப்பாடு செய்ய முன்வரவில்லை. 

ஆனால் நாம் இதனை செய்தோம். முறைப்பாடு செய்ய சென்றபோதுகூட இவர்கள் ஆபத்தானவர்கள் என பொலிஸார் எம்மை எச்சரித்தனர். இருந்தாலும் நாம் முறையிட்டோம். இதன் பின்னர் அந்தக் கும்பல் ஒரு சந்தர்ப்பத்தில் என்னுடன் மோதலில் ஈடுபட்டது. இதன் பின்னரே நேற்றிரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

நானும் தந்தையும் தான் இவர்களுக்கு எதிராக செயற்பட்டோம். நான் தான் இவர்களுக்கு எதிராக கடுமையாக செயல்பட்டிருந்தேன். இதற்கு முன்னர் எனக்கு நேரடியாக அச்சுறுத்தல் விடுத்திருந்தனர். என்னை இலக்குவைத்தே இவர்கள் வந்திருக்க வேண்டும். 

ஆனால் சில நொடிகள் மாறிப்போக அப்பா அந்த துப்பாக்கிக் குண்டுகளுக்கு பலியாகினார் என தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.