Header Ads



முஸ்லிம் சமூகம் அடிபணியுமா..?

-ஸய்னுல் ஆப்தீன் நிஹாஸ்-

எதிர்பாராத நிகழ்வுகள் போல் ஆனால் முன்கூட்டியே திட்டமிட்டு நடத்தப்படும் இலங்கை முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான இனவன்முறைகள் மாவனெல்லையில் தொடங்கி கண்டி, திகன வரை தொடர்கிறது. ஒவ்வொரு நிகழ்வுகளையும் ஆராய்ந்து பார்க்கும் போது சிறு சம்பவம் மற்றும் தனிப்பட்ட சிலரின் பிரச்சினையாகவுமே ஆரம்பத்தில் தென்படுகிறது. ஆனால் துல்லியமாகப் பின் நகர்ந்து நுணுகி ஆராய்கின்ற போது அந்தச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து ஏற்கனவே திட்டமிடப்பட்ட தாக்குதல் வெகு கச்சிதமாக முடிக்கப்படுகிறது.

இதில் வேடிக்கை என்னவென்றால் இவ்வாறான தாக்குதலின் போது பொலிஸ், இராணுவம் மற்றும் அரச அதிகாரிகள் தாக்குதல்தாரிகளை கவனமாக, பாதுகாப்பாக எவ்வித தண்டனை யும் பெறாமல் மீட்டெடுக்கும் நிகழ்வுகள் இதுவரை நடந்த எல்லா முஸ்லிம் எதிர்ப்புத் தாக்குதல்களின் போதும் அறியப்படுகிறது. எல்லாவற்றையும் மீறி முஸ்லிம் சமூகத்திற்குள்ள ஒரேயொரு பாதுகாப்பு, சட்டத்துறையும் நீதித்துறையுமாகும். ஆனால் இறுதியில் பொலிஸாரின் வழிநடாத்தலால் இங்கும் எமது சமூகத்திற்கு நீதி கிடைக்காமல் ஒன்றில் சமாதான முயற்சி அல்லது போதிய ஆதாரங்கள் இல்லாமல் விடுதலை என்ற போர்வையில் சூத்திரதாரி, தாக்குதல்தாரி அனைவரும் தப்பித்து விடுகின்றனர்.

இதுவரை நடைபெற்ற எல்லாச் சம்பவங்களையும் நுணுக்கமாக ஆராய்வோமானால் பல முக்கிய விடயங்களை எம்மால் அறிந்துகொள்ள முடியும். உண்மையில் ஆரம்ப காலத்தில் நடைபெற்ற தாக்குதல்கள் முஸ்லிம் சமூகத்தை அடிபணிய வைக்கும் அச்சுறுத்தும் தாக்குதல்களாகவே பார்க்கப்பட்டன. ஆனால் இன்று அவ்வாறான ஒரு மனோநிலையுடன் மாத்திரம் இதனை நோக்க முடியாது. இன்று நடைபெறும் முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான தாக்குதல்களை பின்வரும் நோக்கங்களின் அடிப்படையில் பார்க்கப்பட வேண்டும்.

முஸ்லிம் சமூகத்தின் மனோ நிலையில் அச்ச உணர்வையும் அடிமை உணர்வையும் தொடர்ந்து தோற்றுவித்தல்.
முஸ்லிம் சமூகத்தின் பொருளா தாரத்தை அடியோடு அழிப்பது.
முஸ்லிம் சமூகத்தின் மார்க்க, கலா சாரத்தை கேள்விக்குறியாக மாற்றுதல்.
முஸ்லிம் சமூகத்தின் தனித்துவ அடையாளங்களை இல்லாமல் செய்து பொதுவான அடையாளத்துடன் எல்லா கலாசாரமும் சமம் என்ற நிலைக்கு நகர்த்தல்.
முஸ்லிம் அரசியலை, தலைமைகளை கேள்விக்குறியாக மாற்றுதல்.
இது ஒன்றும் சாதாரணமாக திடீர் என தோன்றியதாக நாம் வழமைபோன்று நோக்க முடியாது. இதற்குப் பின்னால் உள்ள சக்திகளை இனங்காண வேண்டும். அந்த வகையில்,


தமிழ் சமூகத்தை அடக்கிவிட்டோம் இனி எஞ்சியிருப்பது முஸ்லிம் சமூகம் மட்டுமே என்ற பெரும்பான்மை ஆதிக்க உணர்வு.

2015 இல் ஜனாதிபதி தேர்தலின் போது முஸ்லிம் சமூகத்தின் மீதான தாக் குதல்களை அரசியல் வடிவமாக மாற்றி மேற்கொள்ளப்பட்ட அரசியலின் காரண மாக இலங்கையின் அரசியல் மாற்றத் தில் தேர்தலில் ஒரு முக்கிய கருவியாக முஸ்லிம்கள் பயன்படுத்தப்படுகிறார் கள். முஸ்லிம்களை அடக்குகின்ற கட்சி பெரும்பான்மை சமூகத்தின் பாதுகாவ லர்கள் போலவும் முஸ்லிம்களுக்கும், தமிழர்களுக்கும் உரிமைகள், பாதுகாப்பை வழங்கும் கட்சிகள் சிங்கள சமூ கத்தைக் காட்டிக்கொடுக்கும் கட்சிகளாகவும் ஒரு மாயை உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் எல்லாப் பெரும்பான்மை கட்சிகளிலும் இனவாதம் பேசுகின்ற ஒருசிலர் இருப்பதை நாம் காண்கிறோம்.
முஸ்லிம்களின் வர்த்தகத்தை குறிவைப்பதன் மூலம் பெரும்பான்மை சமூகத்தின் முக்கிய வியாபார நடவடிக் கைகளை மேம்படுத்தும் நோக்கில் தாக் குதல்தாரிகளுக்கு பின்னால் உள்ள வியா பார தலைமைகளின் உந்துதல்.
முஸ்லிம் சமூகத்தை அழித் தொழிக்க நினைக்கும் முஸ்லிம் எதிர்ப்பு சர்வதேச சக்திகள் இதற்கு ஆசியப் பிராந்தியத்தில் இந்து – முஸ்லிம், சிங்கள – முஸ்லிம், மோதல்களை (இந்தியா, மியன்மார், இலங்கை) ஏற்படுத்துதல்.
பௌத்த மதமும் சிங்கள சமூக மும் அழிக்கப்பட்டு இலங்கை பெரும் பான்மை முஸ்லிம்கள் வாழும் நாடாக மாறி விடும் என்ற இனவாத சக்திகளின் கற்பனைவாத நடவடிக்கைகள்.
இதுபோன்ற இன்னும் பல காரணிகள் இன்று முஸ்லிம் சமூகத்திற்கு எதிராகச் செயற்படுகின்றது என்பதை நாம் இங்கு கவனத்திற்கொள்ள வேண்டும். எனவே எமக்கான தீர்வுகளை தேடும் நாம் ஒரு புள்ளியில் மட்டும் நின்று சிந்திக்கக் கூடாது. பல்வேறு பரிமாணங்களில் நின்று இந்த விவகாரத்தைக் கையாள வேண்டும்.

முஸ்லிம் சமூகத்தின் மீது இவ்வாறான பாரிய சக்திகளின் பாய்ச்சல்கள் இருக்கும் போது எமது சமூகத்தில் இவற்றை எதிர்கொள்ளக் கூடிய சக்திகள் எவை எனப் பார்ப்போமானால் அவை எமது சமூகத்தை பிரதிபலிக்கும் பல்வேறு அரசியல் கட்சிகள், உலமா சபை, தேசிய ஷூறா சபை போன்ற தேசிய சமூக நிறுவனங்கள், இஸ்லாமிய இயக் கங்கள், தனிப்பட்ட செல்வாக்குள்ள தனிமனிதர்கள், ஏனைய பெரும்பான்மைக் கட்சிகளில் உள்ள எமது சமூகத் தைச் சார்ந்த அரசியல் தலைவர்கள், கலைஞர்கள், புத்திஜீவிகள், ஆசிரியர் கள், உலமாக்கள் என எல்லாத் தரப்பினரையும் குறிப்பிட முடியும்.
இந்த வகையில் ஒரு சமூகத்தின் மீது திட்டமிடப்பட்ட தாக்குதல்கள் நிகழும் போது அதை எதிர்கொள்ளும் கடமை மேற்குறிப்பிட்ட எல்லா தனிமனித, சமூக, அரசியல் நிறுவனங்கள் சார்ந்தோரின் கடமையாகின்றன. எனவேதான் இவர்கள் என்ன செய்ய வேண்டும்? என்பதை ஒரு கலந்துரையாடலுக்கு விடு வதன் மூலம் சமூகத்தை பாதுகாக்கும் ஒரு புள்ளியை நோக்கி நகர்த்துவதே இக்கட்டுரையின் நோக்கமாகும். இங்கு குறிப்பிடுப்படும் ஆலோசனைகள், கருத்துக்கள் விரிவான கலந்துரையாடலுக்கு உட்படுத்தக்கூடியவை என்பதை முன்கூட்டியே கூறிக்கொள்வதோடு, யாரையும் தனிப்பட்ட முறையில் தாக்குவதாக பொருள்கொள்ளக் கூடாது.

எனவேதான் இந்தப் பின்னணிகளோடு எமது சமூகத்திலுள்ள சக்திகள் முஸ்லிம் சமூகத்தின் மீதான இந்தத் தாக்குதல்களுக்கான பாதுகாப்பாக செயற்படும் நடவடிக்கைகளை பார்க்கும் போது எல்லோரும் அவரவர்க்கு முடியு மானதையே செய்கிறார்கள் என்றாலும் அதனை ஒழுங்குபடுத்தவும், நெறிப்படுத்துவதுமான முக்கிய தேவை அவசியமாகக் காணப்படுகிறது என்பதை முதலில் நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். இன்றைய செயற்பாடுகளை நோக்கும் போது அநேகமான சமூக நிறுவனங்களும் சரி தனிப்பட்ட செல்வாக்குள்ளவர்களும் சரி எல்லோரும் எல்லா விடயத்தையும் செய்வதற்கு முயற்சிக்கின்றதை காணக்கூடியதாக உள்ளது.

இந்த வகையில் எல்லோரும் தகவல் சேகரிப்பது, எல்லோரும் நிதி சேகரிப்பது, பொருட்கள் சேகரிப்பது, எல்லோரும் சேகரிக்கப்பட்ட நிதியையும் பொருட்களையும் அவரவர் விரும்பிய படி விநியோகிப்பது, எல்லோரும் சட்ட நடவடிக்கை எடுக்க முனைவது, இறுதியில் எவருமே அதனைச் செய்யாமல் பின்வாங்குவது, அது மாத்திரமன்றி ஒவ்வொரு சக்தியும் அவர்களுக்கு ஏற்ற நிகழ்ச்சி  நிரலில் இப்பிரச்சினையையும் அணுக நினைப்பதும், தீர்வுகளை முன் வைப்பதும், தானே எல்லாவற்றையும் செய்கிறேன் என்ற சிந்திக்கும் உணர்வு போன்ற இன்னோரன்ன குறைபாடு களை இங்கு குறிப்பிட முடியும். அதன் மூலம் உழைப்பு, சக்தி, வீண் சிரமம் மட்டுமின்றி தீர்வுகள் எட்டப்படாமல் அல்லது முரண்பாடுகளால் முஸ்லிம் சமூகத்திற்கு பாதுகாப்பாக உழைத்தவர் களும் மனச்சோர்வு அடைகின்ற அல்லது ஒதுங்கிக் கொள்கின்ற நிகழ்வுகள் காணப்படுவதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இவ்வாறான ஒரு சூழ்நிலையில் இனிநாம் என்ன செய்ய வேண்டும்.

சமூகக் களத்தில் செயற்படும் ஒவ்வொரு நிறுவனமும் தனிமனிதனும் அடிப்படையில் அடிப்படையில் அந் நிறுவனத்தின் பணி என்ன? இதற்கு மேலதிகமாக எங்களால் செயற்பட முடியுமானவை எவை என வரையறுத்து வேலை செய்ய வேண்டும். தேவையான போது வேலை செய்யும் பரப்புக்களை சரியாக இனங்கண்டு வேலை செய்தால் எமது இலக்குகளை அடைவது இலகு வாக அமையும்.

இந்த வகையில் ஒரு சம்பவம் நடை பெற்றால் அதன் பின்னணி, அதன் உண்மைக் காரணிகளை கண்டறிவதற் கும் தகவல்களை சேகரிப்பதற்கும் ஒரு நிறுவனம் பொறுப்பாக இருக்க வேண்டும். நடைமுறையில் இந்த வேலையை எல்லோரும் செய்ய முயல்வதால் வித்தியாசமான பின்னணியும் தகவல் முரண்பாடும் ஏற்படுகிறது. ஏதேனும் நிறுவனத் திற்கு இதனைச் செய்ய முடியுமாக இருந்தால் அவர்களிடம் தகவல்களை ஏனையோர் பெற்றுக்கொள்ள இலகுவாக அமையும்.

ஒரு அனர்த்தத்தின் பின் நிதியையோ, பொருட்களையோ சேகரிப்பதாக இருந்தால் தேசிய ஒருங்கிணைப்பு அவசியமும், சேகரிப்பாளர்களுக்கான அங்கீகரிக்கப்பட்ட கடிதம், நிதியை பெற்றுக்கொண்டமைக்கான பற்றுச் சீட்டு வழங்கப்பட வேண்டும். அதனை எவ்வாறு விநியோகிக்க வேண்டும் என்பதிலும் ஏற்கனவே பெற்ற சேத விபரத்தை அடிப்படையாகக் கொண்டு விநியோகிப்பதுடன் சேகரிக்கப்பட்ட நிதி, பொருட்களின் விநியோகங்கள் பற்றிய வெளிப்படைத்தன்மை அவசிய மாகின்றது. இன்று அனர்த்தங்களின் போது சேகரிக்கப்பட்ட பல நிதிகள் இன்றும் தனிப்பட்டவர்கள் கையில் உள்ளதும் அது எவ்வாறு விநியோகிக்கப்படல் வேண்டும் என்பது ஒரு முக்கியமான பிரச்சினையாகும்.

3 comments:

  1. படைத்தவனிடம் உதவி கேளுங்ள் என்று சொல்லுங்ள் நண்பரே

    ReplyDelete
  2. அடிணியும் அசியல்வாதிகளையும்.உலமாசபைகளையும்.இன்னும் பல இயக்கங்களையும்.இன்னும் சொல்லிக்கெண்டே போலாம்.நம்பினால்.அல்லாஹூவை.நம்பாமல்

    ReplyDelete
  3. தனிமனித மாற்றமே சமூக மாற்றம், போட்டுத்தள்ளுவது மாத்திரம் ஜிஹாதல்ல. வட்டி, விபச்சாரம், மது இன்னபல பெரும்பாவங்களை ஒழிப்பதே இந்நாட்டில் செய்யக்கூடிய முதன்மயான ஜிஹாத்... இதில் மற்வறரை திருத்த போகாமல் சுய விசாறணசெய்து நேர்வழிப்படுவது நிம்தியான சமூக கட்டமைப்பை தானாக உருவாக்கும்.

    ReplyDelete

Powered by Blogger.