சஜீதா பானு மீதான நடவடிக்கைக்கு, விஜயதாஸா திட்டம்..!
அநுராதபுரம், இபலோகம, பெலும்கல பிரதேசத்தில் தொல்பொருள் பிரதேசம் வீடமைப்புக்காக அழிக்கப்பட்டமையுடன் தொடர்புபட்ட அனைவருக்கும் தராதரம் நோக்காது தொல்பொருள் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கும், தொல்பொருள் திணைக்களத்துக்கும் ஆலோசனை வழங்கியுள்ளதாக தொல்பொருளுக்குப் பொறுப்பான அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அமைச்சர் விஜேதாச ராஜபக் ஷ கடந்த வெள்ளிக்கிழமை அமைச்சின் அதிகாரிகள் குழுவொன்றுடன் பெலும்கல தொல்பொருள் பிரதேசத்துக்கு நேரடி விஜயமொன்றினை மேற்கொண்டு- களநிலைமைகளை ஆராய்ந்தார். பின்பு ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், “நாடெங்கும் சிலரால் மேற்கொள்ளப்படும் தொல்பொருள் பிரதேசங்களின் அழிவுகள் தொடர்பில் உடன் அமைச்சுக்குத் தகவல் வழங்குவதற்காக பொதுமக்களுக்கு புதிய தொலைபேசி இலக்கமொன்று விரைவில் வழங்கப்படவுள்ளது. இந்த ஏற்பாட்டினால் நாட்டின் எந்தப் பகுதியில் தொல்பொருள் பிரதேசம் அழிக்கப்பட்டாலும் உடன் அறிந்துகொள்ள முடிவதுடன் உடன் நடவடிக்கைகளையும் மேற்கொள்ளமுடியும்.
வீடமைப்பு அதிகார சபையின் அதிகாரிகளும் இபலோகம பிரதேச செயலாளரும் (சஜீதா பானு) காணியை வீடமைப்புத் திட்டத்துக்கு தீர ஆராயாது வழங்கியுள்ளமை, அமைச்சு மட்டத்தில் நடத்திய விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கு வழங்கப்பட்ட காணி எல்லையையும் மீறி அதற்கும் அப்பால் தொல்பொருள் பிரதேசம் பெகோ இயந்திரத்தினால் டோசர் பண்ணப்பட்டதனால் தொல்பொருட்கள் அழிவுக்குள்ளாகியுள்ளன.
தொல்பொருள் சட்டத்தின்கீழ் சுயாதீன விசாரணையொன்றினை நடத்தி பொறுப்புக்கூற வேண்டிய அனைவருக்கும் எதிராக சட்டத்தை அமுல்படுத்துமாறு பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தொல்பொருள் எமது நாட்டின் அனைத்து பிரஜைகளுக்கும் சொந்தமானதாகும். அதனைப் பாதுகாப்பது எமது அனைவரினதும் கடமையாகும். தொல்பொருட்களை சேதப்படுத்துபவர்கள் யாரென்றாலும் இனம், மதம், மொழி, கட்சி என்று பாராது சட்டத்தை சரியான முறையில் அமுல்படுத்தி உரிய தண்டனை வழங்கப்படவேண்டும். அவர்கள் மீது எவ்வித அனுதாபமும் செலுத்தக்கூடாது என்றார்.
அமைச்சரின் நேரடி விஜயத்தின்போது அநுராதபுரம் மாவட்டச் செயலாளரும் கலந்துகொண்டிருந்தார். மாவட்டச் செயலாளர் ஆர்.எம்.வன்னிநாயக்கவிடம் அமைச்சர் இது தொடர்பில் வினவியபோது சம்பந்தப்பட்ட பிரதேச செயலாளர் மற்றும் கிராம சேவையாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் விசாரணைகள் நடைபெறுவதாகவும் தெரிவித்தார்.
-ARA.Fareel-
Post a Comment