Header Ads



யானைக்குள் மீண்டும் குழப்பம் – பாராளுமன்றக் கூட்டங்களைப் புறக்கணிக்க முடிவு

ஐதேகவின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் கட்சித் தலைமைக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் நடைபெறும் கூட்டங்களைப் புறக்கணிக்கப் போவதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.

ஐதேகவில் எழுந்த உள்முரண்பாடுகளை அடுத்து, கட்சியில் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படும் என்று ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்தார்.

அதற்கமைய, ருவான் விஜேவர்த்தன தலைமையிலான குழு ஒன்று அமைக்கப்பட்டு ஆராயப்பட்டது. அதையடுத்து, அண்மையில் ஐதேகவின் தலைமைப் பதவிகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன.

எனினும், இந்த மாற்றங்களினால் ஐதேகவின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருப்தியடையவில்லை.

நேற்று பிற்பகல் நடந்த ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில்  சுமார் 35 வரையான உறுப்பினர்கள் மாத்திரமே பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தை, பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களும்,  பிரதி மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் பலரும் புறக்கணித்துள்ளனர்.

இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர,

“நாடாளுமன்றக் குழுக் கூட்டங்களைப் புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம்.

ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்பட்ட போது, நாம் அவரை ஆதரித்தோம்.

ஏனென்றால், அவர் கட்சிக்குள் மறுசீரமைப்புகளை மேற்கொள்வார் என்று நம்பினோம். ஆனால் நாம் இப்போது ஏமாற்றமடைந்துள்ளோம்.

2020 தேர்தலில் ஐதேக தோல்வியடைந்தால், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்க்கட்சித் தலைவராகி விடுவார். சாதாரண நாடாளுமன்ற உறுப்பினர்கள் தான் மோசமான சூழ்நிலைக்கு முகம் கொடுக்க நேரிடும்.

நாங்கள் மக்களுக்கு என்ன செய்தோம்? மக்களுக்கு சேவையாற்றுவதற்காக கட்சியில் உண்மையான மறுசீரமைப்புகளை செய்ய வேண்டும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.