Header Ads



கல்முனை மாநகர சபைக்கான புதிய, கட்டட நிர்மாணப் பணி ஆகஸ்டில் ஆரம்பம்.


அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் ஹரீசின் முயற்சியினால் கல்முனை மாநகர சபைக்கான புதிய கட்டடத்திற்கான பட வரைபுப் பணி பூர்த்தியடைந்துள்ளது. அப்பட வரைபானது  தேசிய திட்டமிடல் திணைக்களத்தின் அனுமதியினை பெறுவதற்கு சமர்ப்பிக்கப்படவுள்ளதாக பிரதி அமைச்சர் ஹரீஸ் தெரிவித்தார். 

கல்முனை நகர அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் கூட்டம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தலைமையில் இன்று (28) திங்கட்கிழமை கல்முனை மாநகர சபை முதல்வர் அலுவலகத்தில் நடைபெற்றபோது மேற்கண்டவாறு தெரிவித்தார். 

இக்கலந்துரையாடல் கூட்டத்தில் கல்முனை மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி ஏ.எம். றகீப், கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சரின் இணைப்புச் செயலாளர் றஹ்மத் மன்சூர், அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர் எம்.எஸ்.எம். சத்தார், ஏ.ஆர். அமீர், எம்.எஸ். உமர் அலி, சட்டத்தரணி அன்புமுகைதீன் றோஷன், ஏ.எம். பைறூஸ், எம்.எஸ்.எம். நிசார் அத்தோடு அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர் கே.எம். தௌபீக், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நற்பிட்டிமுனை அமைப்பாளர் எம். தௌபீக் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

கல்முனை மாநகர சபை புதிய கட்டடமானது தற்போதைய அமைவிடத்திலே அமையப் பெறவுள்ளதோடு இவ்வருடம் ஆகஸ்ட் மாதம் நடுப்பகுதியளவில் குறித்த கட்டட நிர்மாணப் பணியின் ஆரம்ப நிகழ்வு வைபரீதியாக நடைபெறவுள்ளது.

மேற்படி கட்டட நிர்மாணப் பணி நடைபெறுவதற்கு ஏதுவாக கல்முனை மாநகர சபையானது தற்காலிகமாக கல்முனை பொது நூலக கட்டடத்திற்கும், கல்முனை பொது நூலகமானது கல்முனை நகர மண்டபத்திற்கு மாற்றப்படவுள்ளது.

அந்தவகையில் கல்முனை நகர மண்டபமானது ஒரு மாத காலப்பகுதிக்குள் ஜுலை மாத்திற்கு முன்னதாக புணர்நிர்மாணம் செய்யப்படவுள்ளது.  

மேலும் கல்முனை மாநகர பிரதேசங்களில் பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. அந்தவகையில் நவீன வகையிலான வீதியோர மின் கம்பம் மற்றும் மின் விளக்கு பொருத்துதல், கல்முனை நகரை அழகுபடுத்தல், சிறுவர் பூங்காக்களை அமைத்தல் போன்ற பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதோடு இப்பிரதேசத்திலுள்ள உள்ளக வீதிகள் பலவும் புணரமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். 

No comments

Powered by Blogger.