Header Ads



யாழ்ப்பாண முஸ்லிம் பகுதியில், ஹோட்டல் அமைக்க தடை - நிர்மாணிப்பவர் ஓட்டம்பிடிப்பு

யாழ்  முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் பகுதியில்  நட்சத்திர ஹோட்டல் ஒன்று அமைக்கப்படுவதைக் கண்டித்து முஸ்லிம் மக்கள் நேற்று(12) சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.

நடந்தது என்ன?

யாழ்ப்பாணம் புதிய சோனகத்தெரு  கிராம சேவகர் பிரிவு ஜே87 முஸ்லிம் கல்லுரி வீதி ஜின்னா வீதி மற்றும்  ஹலீமா ஒழுங்கை  ஆகியவற்றை இணைக்கும்  பிரதேசத்தில் நட்சத்திர ஹோட்டல் ஒன்று அமைக்க முன்னாயத்தங்கள் செய்யப்பட்டு வருவதை அறிந்த மக்கள் அதை  எதிர்த்து போராட்டம் ஒன்றை நடாத்தினர்.

 இதன் போது ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்த மக்கள்   யாழ் மாநகரசபையின் அனுமதியின்றி நகர அபிவிருத்தி அதிகாசபையின் நேரடி அனுமதிபெற்றே  கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் மேற்படி இந்த பிரதேசத்தில் இத்தகைய ஒரு வர்த்தக நோக்கம் கொண்ட ஹோட்டலோ அல்லது மதுபான நிலையமோ நிறுவப்படுவதை நாம் அனுமதிக்கப்போவதில்லை  என கூறினர்.

அத்துடன்   காணிகள் இல்லாத நிலையில்  தாம்   வாழ்வதுடன் இவ்வாறான குடியிருப்பு  பிரதேசத்தில் இப்படியான பாரிய நோக்கிலான வியாபார கட்டிடங்களுக்கு அனுமதி அளிப்பதனை இது சம்மந்தப்பட்ட  அதிகாரிகள் நிரந்தரமாக தடை செய்வதற்க்கான சட்ட ரீதியான நடவடிக்கை  எடுக்க வேண்டும் எனவும் கேட்டனர்.

மக்கள் பிரதிநிதிகள் வருகை

மக்களின் குறித்த ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்திற்கு வருகை தந்த   வடக்கு மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மீன் யாழ் மாநகரசபையின் உறுப்பினர்களான கே.எம்.நிலாம்  எம்.எம்.எம்.நிபாஹிர்  ஆகியொர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து கொண்டதுடன் உரிய அதிகாரிகளை சம்பவ இடத்திற்கு அழைத்து தமது ஆட்சேபனைகளை தெரிவித்தனர்.

போராட்டத்திற்கு அரசியல் சாயம் பூச முயற்சி

குறித்த ஹோட்டல் நிர்மாணத்திற்கு எதிராக குறித்த பகுதி மக்களே ஒன்று திரண்டு போராடினர்.போராட்டம் முடிந்ததன் பின்னர் பல முகவரி அற்ற  அமைப்புகள்  போராட்டத்திற்கு தாமே காரணம் என உரிமை கோரி நின்றமை இதிலும் அரசியலை புகுத்த போட்ட திட்டமாக மக்கள் விசனம் தெரிவித்தனர்.

உலமா கிளை சபை மௌனம்

யாழ். மாநகரசபையின் அனுமதியின்றி நகர அபிவிருத்தி அதிகாரசபையின் நேரடி அனுமதிபெற்று நட்சத்திர விடுதிக்கான கட்டுமானப் பணிகள் நிர்மாணிப்பிற்கு  மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ள நிலையில் யாழ் கிளிநொச்சி உலமா சபை கிளை மௌனமாக இருந்தமை பலருக்கும் சந்தேகத்தை தோற்றுவித்தது. ஏனெனில் குறித்த ஹோட்டலை சுற்றி 4 பள்ளிவால்கள் இரு கோவில்கள் இரு பாடசாலைகள் உள்ளன.ஆனால் மக்களின் போராட்டத்தை குறித்த கிளை கவனத்தில் கொள்ளவே இல்லை.

தடுத்து நிறுத்தியது மாநகர சபை

 யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக் கல்லூரிக்கு அண்மையாக ஹலீமா வீதியில் சகல அனுமதிகளும் பெறப்பட்டு கட்டடம் அமைக்கும் பணி இடம்பெற்று வந்த நிலையில் முஸ்லிம் அரசியல்வாதிகள் மற்றும் பொது மக்கள் சிலர் முன்னெடுத்த எதிர்ப்பு நடவடிக்கையால் அதனை இடைநிறுத்துமாறு யாழ்ப்பாண மாநகர சபை பணித்துள்ளது.
தமிழர் ஒருவரால் அந்த இடத்தில் ஹோட்டல் கட்டப்படுவதாகத் தெரிவித்தே முஸ்லிம் அரசியல்வாதிகளும் அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் என குறிப்பிடப்பட்ட மனு ஒன்றும் யாழ்ப்பாண மாநகர சபை முதல்வருக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
மக்களின் மனுவில் தெரிவிக்கப்பட்டவை 

யாழ்ப்பாணம் ஹலிமா வீதியில் அமைக்கப்படும் ஹோட்டலால் நெருக்கமாக வாழும் மக்கள் குடியிருப்புகளுக்கு பாதிப்பு ஏற்படும். பிற்காலத்தில் அநாச்சாரமான பழக்கவழக்கங்கள், மதுபோதைப் பாவனைகள் என்பன ஏற்பட்டு எமது சிறார்கள், இளைஞர்கள் வழிதவறிச் செல்ல வாய்ப்புக்கள் உண்டு. அடிக்கடி நடைபெறும் களியாட்டங்களால் எழுப்பப்படும் ஒலிபெருக்கிச் சத்தத்தால் மாணவர்களின் கல்வி குறிப்பாக பரீட்சைக்குத் தயாராகுவோர் சிறார்கள் குழந்தைகள் முதியோர் நோயார்களுக்கு இடைஞ்சல் ஏற்படும். பாடசாலைகள் வணக்கஸ்தலங்கள் (பள்ளிவாசல்) மிக அருகாமையில் இருப்பதால் நற்கருமங்களுக்கு இடைஞ்சல் ஏற்பட்டு பிரச்சினைகள் உருவாகுவதற்கும் சந்தர்ப்பங்கள் அதிகம் உள்ளன. அந்தப் பகுதி வீதி சிறு வீதியாக இருப்பதனால் வாகன நெரிசல் ஏற்பட்டு போக்குவரத்து தடை ஏற்பட்டு அதனால் பிரச்சினைகள் ஏற்படலாம். எனவே பிள்ளைகளையும் விபரீதங்களையும் கருத்திற்கொண்டு மேற்படி ஹொட்டல் அமைப்பதை நிறுத்தி உதவுமாறு கோருகின்றோம்- என்றுள்ளது.

ஹோட்டல் நிர்மாணிக்கும் நிறுவனம் பற்றி

சம்பந்தப்பட்ட பெயரை உடைய நிறுவனம் எங்கு பதியப்பட்டதோ அவ்வாறான ஒரு நிறுவனம் இருக்கின்றதா என்பது கூட தமது விசாரணையில் அடையாளம் காண முடியாது பொலிஸார் திணருகின்றனர்.மேற்படி நிறுவன தலைவர் என்று சொல்லப்படும் நபர் கூட தற்போது  தலைமறைவாகவே இருந்து வருகின்றார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.யாழ்ப்பா ணத்தில் உள்ள பல பொலிஸ் நிலையங்களில் இவருக்கு எதிராக  சட்டவிரோத காணி அபகரிப்பு காசோலை மோசடி வட்டிக்கு பணம் கொடுத்து ஏமாற்றுதல் போன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு  உள்ளமை  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது தவிர கிளிநொச்சி பளை பகுதியில் உள்ள தென்னம் மர தோட்டங்களை சட்டவிரோதமாக  வடக்கு மாகாண அரசியல் வாதியின் மருமகன் என கூறி அபரித்துள்ளதாகவும் இது தொடர்பாக பளை பொலிஸில் முறைப்பாடும் பதியப்பட்டள்ளது. மேலும் இந்தபருக்கு ஆதரவாக இருவர் செயறற்பட்டு அவரது சட்டவிரோத வியாபாரத்துக்கு துணை நிற்பதாக மற்றுமொரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.(இருவரி ன் படங்கள் இணைப்பு)

மாணவர்கள் போராட்டத்திற்கு முஸ்தீபு

யாழ் ஒஸ்மானியா கல்லூரி மாணவர்கள் இந்த ஹோட்டல் நிர்மாணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை(14) திங்கட்கிழமை போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளனர்.

No comments

Powered by Blogger.