பள்ளிவாசல்களுக்கு தாமதமின்றி நஷ்டஈடு வழங்குங்கள் - ரிஸ்வி முப்தி
கண்டி வன்செயல்களின்போது இனவாதிகளின் தாக்குதல்களினால் பாதிக்கப்பட்டுள்ள பள்ளிவாசல்களுக்கு தாமதமின்றி நஷ்டஈடுகளை வழங்குமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம்.ரிஸ்வி முப்தி புனர்வாழ்வு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதேவேளை, பாதிக்கப்பட்டுள்ள பள்ளிவாசல்களுக்கான நஷ்டஈடுகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு ஒத்துழைப்பு நல்குமாறும் அவர் முஸ்லிம் அமைச்சர்களைக் கோரியுள்ளார்.
வன்செயல்களின்போது சேதமாக்கப்பட்டுள்ள பள்ளிவாசல்களுக்கான நஷ்டஈடுகள் தொடர்பில் விடிவெள்ளிக்குக் கருத்து தெரிவிக்கையிலே உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம்.ரிஸ்வி இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்;
நோன்பு காலத்துக்குள் பாதிக்கப்பட்ட பள்ளிவாசல்களுக்கான நஷ்டஈடுகள் வழங்கப்பட்டுவிடும் என புனர்வாழ்வு அமைச்சர் தெரிவித்திருந்தாலும் இதுவரை 3 பள்ளிவாசல்களுக்கே தலா ஒரு இலட்சம் ரூபாவுக்கும் குறைவான நஷ்டஈடு வழங்கப்பட்டுள்ளது. நாளை புனித நோன்பு ஆரம்பமாகவுள்ளதால் சேதமாக்கப்பட்டுள்ள பள்ளிவாசல்கள் நோன்பு கால மத நிகழ்வுகளையும், விசேட தொழுகைகளையும் மேற்கொள்வதில் பல அசௌகரியங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது.
சில பள்ளிவாசல்கள் நஷ்டஈடு பெற்றுக்கொள்வதற்கு தேவையான தகவல்களை இதுவரை புனர்வாழ்வு அமைச்சுக்கு அனுப்பிவைக்கவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. எனவே பாதிக்கப்பட்ட பள்ளிவாசல்களின் நிர்வாகங்கள் இது தொடர்பில் கவனம் செலுத்தி தாமதமின்றி நஷ்டஈடுகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.
நஷ்டயீடு விண்ணப்பங்களின் குறைகளே தாமதத்திற்கு காரணம்
கண்டி வன்செயல்களினால் பாதிக்கப்பட்டுள்ள பள்ளிவாசல்களுக்கான நஷ்டஈடுகளை வழங்குவதற்கு புனர்வாழ்வு அமைச்சு தயார் நிலையில் இருக்கிறது. ஆனால் பள்ளிவாசல் நிர்வாகங்கள் நஷ்டஈடு வழங்குவதற்கான தேவையான விபரங்களை இதுவரை வழங்கவில்லை. நஷ்டஈடு கோரும் விண்ணப்பத்தில் பல குறைபாடுகள் காணப்படுகின்றன என புனர்வாழ்வு வடக்கு அபிவிருத்தி மீள்குடியேற்றம் மற்றும் இந்து சமய விவகார அமைச்சின் மேலதிகப் பணிப்பாளர் எஸ்.எம்.பதுர்தீன் தெரிவித்தார்.
பள்ளிவாசல்களுக்கான நஷ்டஈடுகள் தொடர்பில் வினவியபோதே அவர் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், கண்டி வன்செயல்களின்போது 20 பள்ளிவாசல்கள் சேதங்களுக்குள்ளாகின. இவற்றில் 3 பள்ளிவாசல்களுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை நஷ்டஈடு வழங்கப்பட்டுவிட்டது. எஞ்சியுள்ள 17 பள்ளிவாசல்களில் 3 பள்ளிவாசல்களின் நஷ்டஈடு விண்ணப்பப்பத்திரமே அனைத்து தகவல்களுடன் பூரணப்படுத்தப்பட்டுள்ளது. அந்த மூன்று பள்ளிவாசல்களுக்கும் தாமதமின்றி நஷ்டஈடு வழங்கலாம்.
14 பள்ளிவாசல்களின் விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன. பள்ளிவாசல்களின் பதிவிலக்கம், வங்கி கணக்கிலக்கம் குறிப்பிடப்படாமை, தேவையான அறிக்கைகள் இணைக்கப்படாமை காரணமாக இவற்றுக்கு நஷ்டஈடு வழங்குவதில் தாமதம் ஏற்படுகிறது.
பள்ளேகலையிலுள்ள லாபீர் ஜும்ஆ பள்ளிவாசலே முழுமையாக சேதமடைந்துள்ளது. இச்சேதம் 5 இலட்சத்துக்கு மேற்பட்ட சேதங்களுக்குள்ளான சொத்துகளின் கீழே வகைப்படுத்தப்பட்டுள்ளது. 5 இலட்சத்துக்கு மேற்பட்ட நஷ்டஈடுகள் வழங்குவதற்கான சிபார்சுகளைச் செய்வதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. அக்குழு சேத விபரங்களை மதிப்பீடு செய்ததன் பின்பு நஷ்டஈடு வழங்கப்படும்.
பாதிக்கப்பட்ட பள்ளிவாசல்கள் தமது நஷ்டஈடு விண்ணப்பங்களிலுள்ள குறைகளை பூர்த்திசெய்வதன் மூலம் தாமதமின்றி நஷ்டஈடுகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றார்.
-Vidivelli
Post a Comment