சவூதியில் ஹஜ் சேவைக்கு வரி - கட்டணம் அதிகரிக்க வாய்ப்பு
சவூதி அரேபிய அரசு இவ்வருடம் ஹஜ் சேவைகளுக்கு 5 வீத வரி அறவிடத் தீர்மானித்துள்ளதால் ஹஜ் கட்டணங்கள் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாக ஹஜ் முகவர் நிலையங்கள் தெரிவித்துள்ளன.
அத்தோடு மினாவில் ஹஜ்ஜாஜிகள் தங்குவதற்காக இதுவரை காலம் வழங்கப்பட்டு வந்த கூடாரங்களில் அடுக்குப் படுக்கைள் (Bunk Set) அமைப்பதற்கும் சவூதி ஹஜ் அமைச்சு தீர்மானித்துள்ளது. எனவே மினாவில் கூடாரங்களுக்கான கட்டணங்களும் அதிகரிக்கும் எனவும் ஹஜ் முகவர் நிலையங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
இது தொடர்பில் அரச ஹஜ் குழுவின் தலைவர் கலாநிதி எம்.ரி.சியாத்தை தொடர்புகொண்டு வினவியபோது சவூதி அரேபியா ஹஜ் சேவைகளுக்கு 5 வீத வரி அறவிடப்படவுள்ளதை உறுதிப்படுத்தினார். அத்தோடு மினா கூடாரங்களில் அடுக்கு படுக்கைகள், கட்டில்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.
புதிய முறை கோட்டா பகிர்வினால் உப முகவர்களின் ஆதிக்கம் மேலோங்கியுள்ளதாகவும், உப முகவர்கள் ஹஜ் யாத்திரிகளிடமிருந்து கடவுச் சீட்டுகளைச் சேகரித்துக்கொண்டு இவ்வருடம் அனுமதிப்பத்திரம் பெற்றுக் கொண்டுள்ள ஹஜ் முகவர்களிடம் பேரம் பேசுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கரீம் லங்கா ஹஜ் முகவர் நிலையத்தின் உரிமையாளர் ஏ.சி.பி.எம்.கரீம், இது தொடர்பில் விடிவெள்ளிக்குக் கருத்து தெரிவிக்கையில்; “புதிய கோட்டா பகிர்வு முறையினால் உப முகவர்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. ஏறாவூர் மற்றும் திருகோணமலையைச் சேர்ந்த உப முகவர்கள் தலா 20 கடவுச்சீட்டுகளை ஹஜ் யாத்திரிகளிடமிருந்து சேகரித்துக் கொண்டு ஒரு கடவுச்சீட்டுக்கு 50 ஆயிரம் ரூபா வழங்கும்படி பேரம் பேசுகிறார்கள். இவ்வாறான நிலையினாலும் ஹஜ் கட்டணம் அதிகரிக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது” என்றார்.
இதேவேளை ஹஜ் பயணத்துக்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ள யாத்திரிகர்கள் எக்காரணத்தைக் கொண்டும் தமது கடவுச்சீட்டுகளை உப முகவர்களிடம் கையளிக்க வேண்டாம் என அரச ஹஜ் குழுவின் தலைவர் கலாநிதி எம்.ரி. சியாத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திணைக்களத்தினால் இவ்வருடம் நியமனம் பெற்றுள்ள ஹஜ் முகவர்களிடம் மாத்திரமே கடவுச்சீட்டுகளை ஒப்படைக்கும்படியும் திணைக்களத்தின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றாத ஹஜ் யாத்திரிகர்கள் தொடர்பில் திணைக்களம் எவ்வித பொறுப்பினையும் ஏற்காது எனவும் கூறியுள்ளார்.
-ARA.Fareel-
May be they need to buy more weapons and they need more money ...
ReplyDelete