சவூதிக்கு, கட்டார் கொடுத்த அடி
2017 ஜூன் மாதம் தொடக்கம் கட்டார் மீது தடைகளை விதித்துள்ள சவூதி தலைமையிலான நான்கு அரபு நாடுகளினதும் தயாரிப்புக்களை விற்பனை செய்வதற்கு கட்டாரின் பொருளாதார மற்றும் வர்த்தக அமைச்சு தடை விதித்துள்ளது.
குறித்த நான்கு நாடுகளினாலும் தயாரிக்கப்பட்ட அனைத்துப் பொருட்களையும் கடைகளிலிருந்து நீக்குமாறு நாடுமுழுவதிலுமுள்ள அனைத்துக் கடைகளுக்கும் கடந்த சனிக்கிழமை அமைச்சு வேண்டுகோள் விடுத்தது.
கடந்த 2017 ஜுன் மாதம் சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளினால், ரியாதினால் சோடிக்கப்பட்டதாக பரவலாக நம்பப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில் கட்டாருடனான இராஜதந்திரத் தொடர்புகள் துண்டிக்கப்பட்டன. கட்டார் பயங்கரவாதத்திற்கு ஆதரவளிப்பதாகவும், பிராந்தியத்தை ஸ்திரத்தன்மையற்றதாக மாற்றுவதாகவும் குறித்த நான்கு நாடுகளினாலும் கட்டார் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. இக் குற்றச்சாட்டுக்களை தோஹா உறுதியாக மறுத்துள்ளது.
சவூதி தலைமையிலான நான்கு அரபு நாடுகளுக்கும் ஆதரவளிக்கும் வகையில் பல ஆபிரிக்க நாடுகள் கட்டாருடனான தொடர்புகளைத் துண்டித்துக் கொண்டன.
குறித்த சவூதி தலைமையிலான நான்கு அரபு நாடுகளும் கட்டாருக்கு நிபந்தனைகள் அடங்கிய பட்டியலொன்றை வழங்கியதோடு அதற்கமைவாக செயற்பட வேண்டும் எனவும் இல்லாவிட்டால் அதன் விளைவுகளை எதிர்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்திருந்தன. இந்த நிபந்தனைகளுள் தோஹாவைத் தளமாகக் கொண்டுள்ள அல்-ஜெஸீரா ஊடக நிறுவனத்தை மூட வேண்டும், கட்டார் மண்ணிலிருந்து துருக்கியத் துருப்புக்களை அகற்ற வேண்டும், ஈரானுடனான தொடர்புளைக் கைவிட வேண்டும் எகிப்தின் முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்துடனான தொடர்புகளை முடிவுக்குக் கொண்டுவரவேண்டும் போன்ற நிபந்தனைகளும் உள்ளடக்கப்பட்டிருந்தன.
நான்கு நாடுகளினதும் வான் பரப்பை பயன்படுத்த முடியாதவாறு கட்டார் விமானங்களுக்கு தடை உள்ளடங்கலான பல தடைகள் கட்டார் மீது நான்கு நாடுகளினாலும் விதிக்கப்பட்டன. கட்டாருக்கு மேலும் அழுத்தம் கொடுக்கும் வகையில் சவூதி அரேபியா தனது சிறிய அண்டை நாடுடனான தரைவழிப் பாதையை முற்றாக மூடியது. இந்த வழியூடாகவே கட்டாரின் பெரும்பாலான உணவுப் பொருட்களின் விநியோகங்கள் இடம்பெற்று வந்தன.
எனினும் நிபந்தனைகளுக்கு அடிபணிய மறுத்த கட்டார், நியாயமற்ற இந் நிபந்தனைகள் தனது நாட்டின் இறைமை மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் எனத் தெரிவித்து அவற்றை நிராகரித்தது. இதற்குப் பதிலாக அந்த நான்கு நாடுகளும் மேலும் தடைகளை விதிக்கவுள்ளதாகத் தெரிவித்தன.
கட்டார் மீதான தடைகளைத் தொடர்ந்து ஈரானும் துருக்கியும் தமது வான் பரப்புக்களையும் வர்த்தக வழிகளையும் கட்டாருக்காக திறந்து விட்டதோடு, அந்த அரபு நாட்டுக்கு அவசியமான உணவுகளையும் ஏனைய அவசியமான பொருட்களையும் வழங்கின. சவூதி தலைமையிலான நாடுகளால் கட்டார் மீது விதிக்கப்பட்ட தடைகளால் ஏற்பட்ட பாதிப்புக்கள் மறைந்து வருவதாக கடந்த மார்ச் மாதம் சர்வதேச நாணய நிதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டுக் கொள்கையின் அடிப்படையில் டோஹாவினை அடிபணியச் செய்வதற்கு காத்திருந்த சவூதியின் எதிர்பார்ப்புகளுக்கு விழுந்த அடியாகவும் இது பார்க்கப்படுகின்றது.
Post a Comment