முஸ்லிம்களை துரத்தும் நீரிழிவு
இன்று உலகில் அதிகமானோரைப் பீடித்துள்ள நோயாக நீரிழிவு நோய் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளி விபரங்களுக்கமைய 2018 இல் உலகளாவிய ரீதியில் 429 மில்லியன் மக்கள் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2030 ஆம் ஆண்டாகும் போது உலகில் மக்களின் மரணத்திற்கான பிரதான காரணிகளில் 7 ஆவது இடத்தை நீரிழிவு பெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது. 2045 இல் 90 வீதமானோரை இந் நோய் பீடிக்கும் என்பதும் 2012 ஆம் ஆண்டில் 1.5 மில்லியன் பேர் நீரிழிவு நோயினாலேயே உயிரிழந்தனர் என்பதும் இந்த இடத்தில் கவனத்திற்குரியதாகும்.
அந்த வகையில் இலங்கையும் இந்த நோய்க்கு விதிவிலக்கல்ல. இலங்கையில் சுமார் 4 மில்லியன் பேர் நீரிழிவினால் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை நீரிழிவு சங்கத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
'' நீரிழிவு ஒரு நோயல்ல. அது ஒரு சமூகப்பிரச்சனை'' என கிழக்குப் பல்கலைக்கழக சௌக்கிய பராமரிப்பு பீட விரிவுரையாளர் வைத்திய நிபுணர் எம். அருளானந்தம் தெரிவித்துள்ள கருத்தும் இந்த இடத்தில் கவனத்திற் கொள்ளத்தக்கதாகும். '' 5 செக்கனுக்கு ஒருவர் நீரிழிவினால் பாதிக்கப்படுகின்றனர். 10 செக்கனுக்கு ஒருவர் மரணமடைகின்றனர். 30 செக்கனுக்கு ஒருவர் கால், கைகளை இழக்கின்றனர். நீரிழிவு ஒரு நோயல்ல சமூகப்பிரச்சினை. நம்முடைய உடற்பயிற்சி, உணவுப்பழக்கவழக்கங்கள், நடைமுறைகளால் அதனை கட்டுப்படுத்த முடியும்'' என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
'' நமது உணவு நடைமுறைகள் மாற்றம் பெற்றுவிட்டன. அதனை மாற்றம் செய்ய வேண்டும். கலாசாரம், அதன் நடைமுறைகள் எல்லாம் உடல் திறன் மேம்பாடுகள் சுகாதார நடைமுறைகளுடனே ஏற்படுத்தப்பட்டுள்ளன'' என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த இடத்தில் முஸ்லிம் சமூகத்தில் அதிகரித்து வரும் தொற்றா நோய்கள் குறித்தும் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது. நீரிழிவு வியாதி, உயர், தாழ் இரத்த அழுத்தங்கள், கொலஸ்ரோல், புற்றுநோய் போன்ற தொற்றா நோய்களால் பீடிக்கப்படும் முஸ்லிம்களது தொகை முஸ்லிம் அல்லாதவர்களுடன் ஒப்பிடுகையில் மூன்று மடங்கு அதிகமாகும் என அண்மைக்கால ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக முஸ்லிம் சமூகத்தில் நீரிழிவு வியாதிக்காரர்கள் அதிகமாகிக் கொண்டுவருவது அவதானிக்கப்பட்டிருக்கிறது. முஸ்லிம் சமூகத்துக்குள் 25 வீதமானவர்கள் அந்த நோயின் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.
இலங்கையின் தனியார் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெறும் நோயாளிகளில் முஸ்லிம்களது தொகை அதிகமாகும். இலங்கையில் 9.7 வீதமாக முஸ்லிம்கள் வாழ்ந்தாலும் சிகிச்சைக்காக வரும் மொத்த நோயாளிகளில் முஸ்லிம் நோயாளிகளது விகிதாசாரம் சுமார் 30 வீதத்தைத் தாண்டியதாக இருக்கலாம் என மதிப்பிடப்படுகிறது.
இப்படியான ஒருநிலை ஏற்படக் காரணங்கள் யாவை? இந்நிலையிலிருந்து ஓரளவாவது மீட்சி பெற எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் யாவை? இந்த நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டியவர்கள் யார் ? போன்ற அம்சங்கள் பற்றி ஆராயப்பட வேண்டும். இது காலத்தின் தேவையும் மார்க்க மற்றும் சமூகக் கடமையுமாகும்.
அந்த வகையில் இலங்கை முஸ்லிம் சமூகத்தில் உள்ள சுகாதாரத் துறையோடு தொடர்பான பிரச்சினைகள் பற்றி விஞ்ஞானபூர்வமான, ஆதாரபூர்வமான புள்ளிவிபரங்கள் திரட்டப்படவேண்டும். அவற்றை அடிப்படையாகக் கொண்டு நமது மக்களை பாரிய நோய்களிலிருந்து மீட்டெடுப்பதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்த விரும்புகிறோம்.
-Vidivelli
Post a Comment