கண்டி வன்முறை, நஷ்டஈடு வழங்க தாமதிப்பது ஏன்..?
அண்மையில் கண்டி மாவட்டத்தில் இடம்பெற்ற வன்செயல்கள் காரணமாக பாதிக்கப்பட்ட சொத்துகளுக்கு நஷ்டஈடு பெற்றுக்கொள்வதற்காக புனர்வாழ்வு அமைச்சுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள விண்ணப்பங்கள் பல பூரணத்துவம் பெறாது குறைகள் காணப்படுகின்றமையே நஷ்டஈடு வழங்குவதை தாமதப்படுத்தியுள்ளது என புனர்வாழ்வு, இந்து மத அலுவல்கள், மீள்குடியேற்றம் அமைச்சின் மேலதிக பணிப்பாளர் எஸ்.எம்.பதூர்தீன் தெரிவித்தார்.
கண்டி மாவட்டத்தில் இடம்பெற்ற வன்செயல்களால் பாதிக்கப்பட்ட சொத்துகளுக்கு நஷ்டஈடு வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், கண்டி மாவட்டத்தில் வன்செயல்களினால் பாதிக்கப்பட்ட 636 சொத்துகளுக்கான நஷ்டஈடுகள் கோரப்பட்டு விண்ணப்பங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் பல விண்ணப்பங்கள் தேவையான தகவல்கள் இன்றி காணப்படுகின்றன. வங்கி கணக்கிலக்கம், உரிமையாளரின் பதிவு விபரங்கள் என்பன போன்ற விபரங்கள் உள்ளடக்கப்படாத விண்ணப்பங்கள் உரிய பிரதேச செயலகங்களுக்கு திருப்பியனுப்பப்பட்டுள்ளன.
நஷ்டஈடு கோரப்பட்டுள்ள 636 விண்ணப்பங்களும் பூரணப்படுத்தப்பட்டதன் பின்பே இதற்கான அமைச்சரவைப் பத்திரமொன்றினை அமைச்சரால் சமர்ப்பிக்க முடியும். அதனால் விண்ணப்பங்களின் தகவல்களை பூரணப்படுத்திக் கொள்வதற்கான நடவடிக்கையில் புனர்வாழ்வு அமைச்சு ஈடுபட்டுள்ளது.
636 பாதிக்கப்பட்ட சொத்துகளில் 20 பள்ளிவாசல்கள், 9 வாகனங்கள், 271 வீடுகள், 331கடைகள் மற்றும் அறநெறிப் பாடசாலைகள் அடங்குகின்றன. பாதிக்கப்பட்டுள்ள 20 பள்ளிவாசல்களில் சில பள்ளிவாசல்களின் விண்ணப்பங்கள் பூரணத்துவம் பெறாதுள்ளன. அதாவது பள்ளிவாசலின் பதிவு இலக்கம் இன்மை, வங்கிக் கணக்கின்மை என்பன குறைபாடாகவுள்ளன.
5 இலட்சத்துக்கும் மேற்பட்ட சேதங்களுக்குள்ளான சொத்துகளின் மதிப்பீட்டு பணிகள் இன்னும் பூரணப்படுத்தப்படாமையும் தாமதத்திற்குக் காரணமாகும். 5 இலட்சத்துக்கும் மேற்பட்ட சேதங்களுக்குள்ளாகியுள்ள சுமார் 120 சொத்துகளில் 75 வீதமானவையே மதிப்பீடு செய்யப்பட்டுள்ளன. 25 வீதமானவையின் மதிப்பீடுகள் பூரணப்படுத்தப்படவில்லை. மதிப்பீட்டு பணிகள் இவ்வாரம் பூர்த்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு இலட்சம் ரூபாவுக்கும் குறைவான சேதம் ஏற்பட்டுள்ள சுமார் 500 சொத்துகளின் சேத மதிப்பீடு பூர்த்தி செய்யப்பட்டு சுமார் 125 சொத்துகளுக்கு ஏற்கனவே நஷ்டஈடு வழங்கப்பட்டுள்ளது.
மொத்தம் 636 சொத்துகளுக்கு நஷ்டஈடு வழங்குவதற்கு அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பித்து அங்கீகாரம் பெற்றுக்கொள்ளப்பட வேண்டியுள்ளது. விண்ணப்பங்களின் குறைபாடுகள் பூர்த்தி செய்யப்பட்டு ஒரு மாத காலத்துக்குள் அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்படும் என்றார்.
-Vidivelli
கண்டி முஸ்லீம் களே நீங்கள் ஓட்டு போட்டு அனுப்பிய அந்த அமைச்சரை ,,,,,,,, கேளுங்கள் ,
ReplyDelete