கோத்தபாயவுக்கு அஞ்சுகிறாரா மகிந்த..?
ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக்ச வரும் பட்சத்தில் தான் அதிகாரத்திற்கு வருவது பாதிக்கும் என மகிந்த ராஜபக்ச கடும் யோசனையில் இருப்பதாக கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பு அரசியல் தொடர்பாக செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் பொழுதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடரப்பாக கருத்து வெளியிட்டுள்ள அவர்,
பெரும்பான்மை சமூகத்தின் வாக்குகளை கவரக்கூடிய கோத்தபாய ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தவேண்டும் என்ற நிலைப்பாடும் மகிந்த அணிக்குள் காணப்படுகின்றது.
ஆனால், கோத்தபாய ராஜபக்ச தேர்தலில் போட்டியிட முயற்சி செய்தால் அது மீண்டும் அதிகாரத்திற்கு வரும் மகிந்த ராஜபக்சவின் எதிர்பார்ப்பை பாதிக்கும் என்பதால் மகிந்த ராஜபக்சவும் அவரது நண்பர்களும் கோத்தபாய ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவதை எதிர்க்கின்றனர்.
மீண்டும் மகிந்த ராஜபக்ச அதிகாரத்திற்கு வருவதற்கு அவசியமான அரசமைப்பு மாற்றங்களை மேற்கொள்ள கூடிய ஒருவரையே அவர் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த விரும்புகின்றார்.
இந்நிலையில் அதிகார ஆசை இல்லாதவராகவும், மகிந்த ராஜபக்சவினால் இலகுவாக கையாளப்படக்கூடியவராக உள்ள அவரது மூத்த சகோதரர் சமல் ராஜபக்சவை நிறுத்தவேண்டும் என மகிந்த அணியை சேர்ந்த சிலர் விரும்புகின்றனர்.
இதேவேளை, ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக கோத்தபாய ராஜபக்சவை சித்தரிக்கும் முயற்சிகள் இடம்பெற்றாலும் தான் அதிகாரத்திற்கு வருவதை இது பாதிக்கும் என்பதால் மகிந்த ராஜபக்ச இதனை எதிர்க்கின்றார், இதன் காரணமாக மகிந்த அணிக்குள் பாரிய குழப்பநிலை காணப்படுகின்றது என்றும் விக்கிரமபாகு கருணாரட்ன குறிப்பிட்டுள்ளார்.
இதுவொருபுறமிருக்க, ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட பின்னர் தனக்கு வழிவிடக்கூடிய ஒருவரை நிறுத்தவேண்டிய தேவை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு ஏற்பட்டிருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Post a Comment