இவை வெறும் கதையல்ல, சமூகத்தில் நடக்கும் நிஜங்களே...!
-ஸெய்னா பின்த் முஹம்மது ஹாரிஸ்-
அல்லாஹுத்தஆலா பூமியில் எத்தனையோ கோடிப் படைப்புகளை படைத்திருக்கின்றான். ஒவ்வொரு படைப்பிலும் தனிச் சிறப்பையும் கொட்டிக்கிடக்கும் அழகையும் அள்ளிச் சொறிந்திருக்கிறான். அத்தகைய அற்புதப்படைப்புகளில் ஒன்றுதான் மனித இனம். உலகிலே ஆறறிவுடன் படைக்கப்பட்ட ஒரே இனம் மனித இனம். ஆணாலும் பெண்ணாலும் உருவான மனித இனத்தில் ஆண், பெண்ணுக்கு ஆடையாகவும் பெண், ஆணுக்கு ஆடையாகவும் இருப்பதுதான் இறைநியதி.
“அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும் நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள்” (2: 187)
ஒரு கணவனுக்கு அவன் மனைவி ஆடையாக இருப்பதனை இஸ்லாம் வலியுறுத்துகின்ற அதேவேளை, தனக்கு மஹ்றம் அல்லாத ஆண்களிடத்தில் ஒரு போதும் ஒரு பெண் சாதாரணமாக நடந்துகொள்ள முடியாது எனவும் எச்சரிக்கை செய்துள்ளது. அவர்களோடு பேசும் போதோ, பழகும்போதோ ‘ஹிஜாப்’ எனும் ஆயுதத்தைப் பேண இஸ்லாம் வலியுறுத்துகின்றது.
‘ஹிஜாப்’ என்ற சொல் ‘ஹஜப’ என்ற மூலச் சொல்லிலிருந்து உருவானதாகும். ‘ஹஜப’ என்றால் ஒன்றை மறைத்தான் எனப்பொருள்படுகிறது. அதேவேளை ‘ஹிஜாப்’ என்ற சொல்லிற்கு எதனைக் கொண்டு ஒரு பொருள் முற்று முழுதாக மறைக்கப்படுமோ அந்த ஒன்றிற்குச் சொல்லப்படும். இஸ்லாமிய வழக்கில் ஒரு பெண் அவளது உடலில் அவள் மறைக்க வேண்டிய பகுதிகள் என வலியுறுத்தப்பட்ட இடங்களை மறைக்கக்கூடிய ஆடையையே நாம் ஹிஜாப் என்கிறோம்.
அல்குர்ஆன் வசனங்கள் மற்றும் ஹதீஸ்களின் அடிப்படையில் ஹிஜாபானது எவ்வாறானதாக இருக்க வேண்டும் என்பது தொடர்பாக அறிஞர்கள் சில வரையறைகளை வகுத்துள்ளார்கள்.
1. ஹிஜாபானது உடலை முழுமையாக மறைப்பதாக இருத்தல் வேண்டும். அதுவானது பெண்களது இயல்பான அழகையும் அலங்காரத்தையும் வெளிக்காட்டுவதாக இருத்தல் கூடாது. ஆனால் முகம் மற்றும் இரு முன்னம்கைகள் ஆகிய உடலில் இருந்து தானாக வெளியில் தெரியும்படியாக உள்ள உறுப்புகள் வெளிக்காட்டப்படுவதில் குற்றமில்லை.
“அதினின்று வெளியில் தெரியக் கூடியவைகளைத் தவிர தங்கள் அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம். தங்கள் முந்தானைகளை தம் மேல் சட்டைகளின் மீது போட்டு (தலை, கழுத்து, நெஞ்சு ஆகியவற்றை மறைத்து)க் கொள்ள வேண்டும்……… ” (சூறா அந்நூர்: 31)
இப்னு அப்பாஸ் (ரழி) மற்றும் இப்னு மஸ்ஊத் (ரழி) போன்றோர் இவ்வசனத்தில் வந்துள்ள “இல்லா மா ழஹர மின்ஹா” அதினின்று வெளியில் தெரியக்கூடியவைகளைத் தவிர என்ற அல்லாஹ்வின் கூற்றிற்கு விளக்கமளிக்கையில் அது முகம், இரண்டு முன்னம் கைகளும் என்றே விளக்கம் தருகிறார்கள். மேலும் சில இடங்களில் இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்கள் ஒரு பெண்ணின் மேலாடையைத்தான் வெளியில் தெரியும் அழகு என அல்லாஹ் குறிப்பிடுவதாகவும் தெரிவிக்கிறார்கள். அல்லாஹ்வே மிக அறிந்தவன்.
2. ஹிஜாபானது மெல்லியதாக அன்றி தடிப்பானதாக இருத்தல் வேண்டும்.
தனது உடலின் நிறத்தைக்கூட காட்டும் அளவு ஆடை அணிந்து பிறர் பார்க்கும்படியாகச் செல்வது என்பது நிர்வாணமாகச் செல்வதற்கு சமமே.
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
“இரண்டு கூட்டத்தினர் நரகவாசிகளாவர். அவர்களை நான் பார்க்கவில்லை. (பிற்காலத்தில் வருவார்கள்)
(1) ஒரு கூட்டத்தினரிடம் பசு மாட்டின் வால்கள் போல் சாட்டைகள் இருக்கும். அதன் மூலம் மக்களை அடித்து துன்புறுத்துவார்கள்.
(2) ஆடைகள் திறந்து (அரைகுறை) நிர்வாணமாக உள்ள பெண்கள். இவர்கள் பிறரைக் கவர்ந்திழுப்பர். பிறரிடம் சாய்வர். அவர்களின் கூந்தல் ஒட்டகத்தின் சாய்ந்த திமில்கள் போல இருக்கும்.
இவர்கள் சுவர்க்கத்தில் நுழைய மாட்டார்கள். அதன் வாடையைக்கூட நுகரமாட்டார்கள். அதன் வாடை இன்ன தூரத்திலிருந்தும் பெற்றுக்கொள்ளப்படும். (ஆனால் அவர்கள் அந்த வாடையை நுகரமாட்டார்கள்)” ஆதாரம்: முஸ்லிம்
3. ஹிஜாபானது தன்னிலே அலங்காரமானதாக இருத்தல் கூடாது.
சூறா நூர்: 31 இல் அல்லாஹ் கையாளக்கூடிய ‘ஹிமார்’ என்ற சொல்லின் கருத்தை தப்ஸீர் ஆசிரியர்கள் விளக்கும்போது அவர்களில் பெரும்பாலானோர் பின்வரும் கருத்தையே கொண்டுள்ளனர். ‘ஹிமார்’ என்பது ஒரு பெண் தன் தலையையும் தன் கழுத்தையும் மறைக்க பயன்படுத்தும் ஆடை. மேலும் ‘ஜைப்’ என்பது கழுத்து மற்றும் நெஞ்சை மறைத்தல் என்ற கருத்தில் ஆளப்பட்டுள்ளது.
மேலும், எவள் ஒருவள் தனது தலையை சிறிதளவாக மறைத்து கழுத்தையோ நெஞ்சையோ மறைக்கவில்லையோ அல்லது அழகிற்காக வேண்டி தனது காதுகளைத் தெரியவிடுகின்றாளோ அவள் அல்லாஹ்வுடைய வசனத்திற்கு மாறு செய்துவிட்டாள்.
“நபியே, உம்முடைய மனைவியருக்கும், உம்முடைய புதல்வியருக்கும் விசுவாசிகளான பெண்களுக்கும், அவர்கள் தங்கள் தலை முந்தானைகளை தாழ்த்திக் கொள்ளுமாறு நீர் கூறுவீராக” (அல் அஹ்ஸாப்: 59)
இந்த வசனத்தில் கையாளப்பட்டுள்ள “ஜலாபிப்” என்ற சொல்லானது “ஜில்பாப்” என்ற சொல்லின் பன்மை வடிவமாகும். ஜில்பாப் என்பது “உடலில் தலையின் உச்சியிலிருந்து பாதம்வரை மறைக்கக்கூடிய விசாலமான உடலோடு ஒட்டாத ஆடையாகும்.”
4. மணம் பூசப்பட்டதாக ஹிஜாப் இருத்தல் கூடாது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் “ எந்தவொரு பெண் மணம் பூசி அதன் வாசனையை ஏனையோர் நுகர வேண்டுமென்ற நோக்கத்துடன் ஒரு கூட்டத்தை கடந்து செல்கிறாளோ அவள் ஒரு விபசாரி ஆவாள்” ஆதாரம்: அபூதாவுத்
5. ஒடுக்கமானதாக அல்லாமல் விரிவானதாக இருத்தல் வேண்டும்.
உடலின் அளவை பூரணமாக அளவெடுத்துக் காட்டக்கூடிய தனது உள்ளாடைகள்கூட வெளியில் தெரியும் அளவிற்கு ஒரு பெண் ஆடை அணிவதானது ஏனைய அன்னிய ஆண்களை அவள்பால் திசை திருப்பவும், ஆசைகொள்ள வைக்கவும், மோகம் கொள்ளவும் வைக்கிறது. இவர்கள்தான் ஆடையணிந்தும் நிர்வாணிகளான “காஸியாதுன் ஆரியாத்” என நபியவர்கள் குறிப்பிட்ட பெண்களாவார். இத்தகையோருக்கு நரகத்தைத் தவிர வேறு புகலிடம் கிடைக்கப்போவது இல்லை.
6. ஆண்களின் ஆடைக்கு ஒப்பானதாக ஹிஜாப் இருத்தல் கூடாது.
நபி (ஸல்) அவர்கள் பெண்களின் ஆடைகளை அணியும் ஆண்களையும், ஆண்களின் ஆடைகளை அணியும் பெண்களையும் சபித்தார்கள். ஆதாரம்: ஸஹீஹ் ஜாமிஉல் அல்பானி
7. ஹிஜாபானது காபிரான பெண்ணின் ஆடைக்கு ஒப்பானதாக இருத்தல் கூடாது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் “யார் ஒருவர் ஒரு சமூகத்திற்கு ஒப்பாகின்றாரோ, அவர் அவர்களை சார்ந்தவரே”
8. கவர்ச்சியானதாக இருத்தல் கூடாது.
ஏனைய ஆண்கள் தன்னைப் பார்க்க வேண்டும் என்பதற்காக பெருமைத்தனமான கவர்ச்சியான ஆடைகளை அணிந்து கொண்டு உலா வரக்கூடாது.
இவ்வாறாக ஒரு பெண்ணின் ஹிஜாப் வரையறை செய்யப்பட்டிருக்கும் வேளை, தற்காலத்து முஸ்லிம் பெண்களின் ஹிஜாபானது எந்தளவு தூரம் மேற்கூறப்பட்ட நிபந்தனைகளைப் பேணி இருக்கின்றது என்பதனை கருத்தில் கொள்வது முஸ்லிமான இந்த உம்மத்தை நரகை விட்டும் காப்பாற்றவேண்டும் என நேசிக்கக்கூடிய ஒவ்வொரு பொறுப்புள்ள நபரின் மீதும் கட்டாயக் கடமையாகும்.
உடலை மறைத்து, அலங்காரத்தை வெளிக்காட்டாது, ஒடுக்கமானதாக அன்றி விசாலமானதாக இருக்கத்தகு நிலையில் ஏனையோரின் பார்வையில் கண்ணியத்திற் குரிய ஆடையாக அப்போது (?) பார்க்கப்பட்ட ஒரு முஸ்லிம் பெண்ணின் தனித்துவமான ஆடைதான் அபாயாவாகும். என் அழகை யாரும் பார்த்து விடக்கூடாது என்பதற்காக உருவாக்கப்பட்ட அபாயா இன்றோ “என்னைப்பார் என் அழகைப்பார்” என்று விளம்பரப்படுத்தும் அளவிற்கு பெஷனாகிப் போய்விட்டது. ‘ஜில்பாப்’ என்ற அபாயா வகையில் இருந்து ‘அல்பாப்’ என்ற கருத்தே இல்லாத ஒரு ஆடை வகைக்கு இக்காலத்து பெஷன் அபாயாக்கள் தள்ளப்பட்டுவிட்டன. Coat Abaya, Half – Flared Abaya, Full–Flared Abaya, Butterfly Abaya, Sari Abaya, Wedding Abaya, Dubai Abaya ,Box Model Abaya, Turkey Abaya என அபாயாக்கள் பலவிதமாக இன்று சமூகத்தில் வைரலாக பரவிவருகின்றன.
தான் வாங்குகின்ற அல்லது அணிகின்ற அபாயா தன் அழகை பிறர் பார்வையிலிருந்து மறைக்க வேண்டும். இஸ்லாத்தின் வரையறைக்குள் அது பேணப்படவேண்டும். மற்றையவர்கள் என்னை கண்ணியமாகப் பார்க்க வேண்டும் என்ற நிலை தற்காலத்துப் பெண்களின் மனங்களிலிருந்து வெகுதூரம் சென்று விட்டது. மாறாக நான் போடுகின்ற அபாயா இன்னவரது அபாயாவை விட பெறுமதியானதாக இருக்கிறதா? அசத்தலாக இருக்கிறதா? கவர்ச்சியாக இருக்கிறதா? High fi ஆக இருக்கிறதா? என்பதனைக் கவனத்தில் கொள்வதில்தான் எமது நவீன முஸ்லிம் பெண்கள் அதிகம் சிரத்தை எடுக்கின்றனர். உடலை மறைக்க வேண்டிய ஹிஜாபே இன்று உடலின் மொத்தப்பகுதியையும் படம் எடுத்துக்காட்டுகின்ற ஏனைய பெண்களே தங்களது கண்களை மூடிக் கொள்கின்ற அளவிற்கு மிகவும் பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது, எங்கே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறிய அந்த சுவனத்தின் வாடையைக் கூட நுகர முடியாத அளவிற்கு எமது முஸ்லிம் பெண்கள் தள்ளப்பட்டு விட்டனரோ? என எண்ணத்தோன்றுகின்றது.
அபாயாக்களின் நிலைதான் இவ்வாறு பரிதாபத்திற்கு உரியதாக மாறிவிட்டது என்றால் இன்று தலையை மாத்திரம் மறைத்தால் போதும் என்று வாதிடும் ஹிஜாப் வாதிகளின் ஹிஜாபோ பெஷனின் உச்சத்தில் கொடிகட்டிப் பறக்கிறது. கைக்குட்டை அளவு, பலவாறான அலங்காரங்களால் அலங்கரிக்கப்பட்ட ஒரு துண்டு துண்டினால் நெஞ்சினையோ கழுத்தினையோ முதுகின் பெரும் பகுதியையோ மறைக்காமல் வெறுமனே தலையை மாத்திரம் மறைத்துச் செல்வதுதான் தற்காலத்து Fashion ஹிஜாபா? இத்தகைய ஆடைகளை அணிவோர் நிச்சயம் அல்லாஹ்வைப் பயந்துகொள்ளவேண்டும்.
தற்காலத்திற்கு ஏற்ப உலகின் ஒவ்வொரு விடயமும் மாறுகின்றபோது இஸ்லாத்தின் கூறுகளும் மாறவேண்டும் என புகார் கூறும் நவீன இஸ்லாமிய வாதிகள் ஹிஜாபையும் விட்டுவிடவில்லை. முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் Fashion இல்லை எனக்கூறி சதி வலைக்குள் சிக்கவைத்து, ஆடைக்குறைப்பு கலாசாரத்தினுள் முஸ்லிம் பெண்களை மூழ்கவைத்து அப்பெண்களை கண்ணியமிழக்கச் செய்துவிட்டனர். கணவ மட்டுமே ரசிக்க வேண்டிய தன் அழகை, ஏனைய ஆண்கள் விலை பேசாமலேயே ரசிக்க அனுமதி கொடுத்து விட்டாள் தற்காலத்து முஸ்லிம் பெண். இத்தகைய பெண் அல்லாஹ்வின் கோபத்தையும், ரஸூல் (ஸல்) அவர்களின் சாபத்தையும் நிச்சயம் எதிர்கொள்ள வேண்டி வரும்.
ஆடையின்றி இருந்த மனிதன் படிப்படியாக தன் உடல் முழுவதனையும் மறைக்கின்ற ஆடையை இறுதியில் பெறுவதுதான் நாகரிக வளர்ச்சி. ஆனால் இன்று பெஷன் என்ற பெயரில், முழுமை பெற்ற இஸ்லாமிய ஹிஜாப் இன்று பெஷன் ஹிஜாபாக உருவெடுத்து கிட்டத்தட்ட பாதியளவு அல்லது அதைவிட அதிகமாக ஏனைய அன்னியப் பெண்களது ஆடைகளுக்கு ஒப்பாகி கண்ணியம் இழந்து போய்விட்டது.
“உனக்கு இன்ன ஆடை அழகாக இருக்கும்” என ஒரு கணவன் மனைவியைப் பார்த்துக் கூறினால் அது ஸுன்னா. அது அன்பு. ஆனால், “Madam, இந்த model Abaya உங்களுக்கு பசுந்தா, அழகா இருக்கும்” என ஒரு Sales boy கூறினால் இதனை என்னவென்று சொல்வது? இதனை அன்பின் மற்றொரு வடிவம் என்பதா? கடைகளுக்கு செல்லும் முஸ்லிம் பெண்கள் கூட தற்போது பெஷனில் இருக்கும் ஹிஜாபின் பெயரைக்கூறி வாங்கி வருகின்றனரே தவிர, அது எந்தளவு மார்க்கத்தின் வரையறைகளுக்குள் உட்பட்டு இருக்கின்றது என்பதனை துளியளவும் கவனிக்காமல் இருப்பது வேதனைக்குரியது. இவை வெறும் கதையல்ல. எமது முஸ்லிம் சமூகத்தில் நடக்கும் நிஜங்களே. அல்லாஹ் எம் அனைவரையும் காத்தருள வேண்டும்.
இவ்வாறான போக்கினால் நாம் எம்மை உத்தம நபியின் உன்னத சமூகம் என அழைத்துக் கொள்ளும் பாக்கியத்தை என்றோ இழந்து விட்டோம். சாதாரணமாக ஏனைய மதப் பெண்களைப் போல் பெஷனிற்கு ஆடையணியும் நாம் எவ்வாறு கண்கள் பார்த்திராத, காதுகள் கேட்டிராத, உள்ளங்களின் கற்பனைகளுக்கே எட்டிராத அந்த தெவிட்டாத, இன்பமயமான சுவர்க்கத்தினை அடைய முடியும்? அல்லாஹ்வின் அருள்வாக்கையும் உத்தம நபியின் நேரிய வழியையும் பின்பற்றாமல் எப்படி எமது சுவர்க்கப் பயணத்தினை நிச்சயித்துக் கொள்ளப் போகிறோம்? எமது முஸ்லிம் பெண்கள் எப்போது சிந்திப்பார்களோ...?
Post a Comment