முஸ்லிம்களுக்கெதிரான வன்முறைகளில் ஈடுபட்ட 2 அரசியல்வாதிகளின் விளக்கமறியல் நீடிப்பு
கடந்த மார்ச் மாதம் கண்டி, தெல்தெனிய, திகன பிரதேசங்களில் முஸ்லிம்களுக்கெதிரான வன்முறைகளில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் இருந்துவரும் குண்டசாலை பிரதேச சபையின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர் இருவர் உள்ளிட்ட 28 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க தெல்தெனிய மஜிஸ்ட்ரேட் என்.எம்.பரீக்தீன் உத்தரவிட்டுள்ளார்.
மேற்படி சந்தேக நபர்கள் 28 பேரும் கடந்த 2 ஆம் திகதி தெல்தெனிய நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோதே நீதிவான் மேற்படி விளக்கமறியல் நீடிப்பு உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
இந்நிலையில் சமந்த பெரேரா என்ற குண்டசாலை பிரதேச சபை உறுப்பினருக்காக மன்றில் ஆஜரான அவரது சிரேஷ்ட சட்டத்தரணி சரத் பிரேமகுமார, தமது தரப்பைச் சேர்ந்தவர் இம்மாதம் 9 ஆம் திகதி குண்டசாலை பிரதேச சபை அமர்வில் கலந்துகொள்ள வேண்டியுள்ளதால் அதற்கான அனுமதியை வழங்குமாறு நீதிவானிடம் கேட்டுக்கொண்டார்.
சந்தேகநபரின் சட்டத்தரணியின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட நீதிவான் குறித்த பிரதேச சபை உறுப்பினரை சிறைச்சாலை மேலதிகாரியின் கண்காணிப்பில் மேற்படி பிரதேச சபைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு உத்தரவிட்டார்.
ஏ.எல்.எம்.சத்தார்
Post a Comment