சல்மாவைப் பெற்றெடுத்த 21 மணிநேரத்தில், பட்டமளிப்பில் கலந்துகொண்ட ஸெய்னப்
தனது இரண்டாவது பெண் குழந்தையைப் பிரசவித்திருந்த 26 வயது ஸெய்னப் அப்துல்லாஹ் என்ற அமெரிக்காவின் மின்னஸ் பொலிஸ் பிரதேசத்தைச் சேர்ந்த இளம் தாயொருவர் 21 மணிநேரத்தில் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டுள்ளார்.
இரவு 8.00மணிக்கு தனது இரண்டாவது பெண் குழந்தையான சல்மாவைப் பெற்றெடுத்த அவர் மறுநாள் மாலை விசேட கல்வித்துறையில் முதுமானி டிப்ளோமா பட்டத்தினை பெற்றுக்கொண்டார்.
எனது குடும்பத்தில் மூன்றாம் நிலை கல்வி மட்டத்தை எட்டிய முதலாவது அங்கத்தவர் நான் என்பதால் தனக்கு பட்டத்தினை பெற்றுக்கொள்வது முக்கியமாக இருந்தது என ஸெய்னப் அப்துல்லாஹ் தெரிவித்தார்.
சென் தோமஸ் பல்கலைக்கழகத்தில் இரண்டு வருடங்கள் தனது பட்டப்படிப்பைத் தொடர்ந்தார். 2006 ஆம் ஆண்டு சிரியாவிலிருந்து இடம்பெயர்ந்து அமெரிக்காவில் குடியேறிய அவர் தற்போது தனது சொந்த பகல்நேர பராமரிப்பு நிலையத்தினை நடத்தி வருகின்றார். இந்த இலக்கை அடைவதற்காக இரவு நேரத்திலேயே தான் பாடங்களைப் படித்ததாக ஸெய்னப் தெரிவித்தார்.
குழந்தையைப் பிரசவித்த மறுநாளே பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வது பைத்தியக்காரத்தனமான செயல் என தான் கருதியபோதிலும் ஸெய்னபிற்கு பட்டத்தினை நேரடியாகப் பெற்றுக்கொள்வதிலேயே ஆர்வம் இருந்தது என ஸெய்னபின் தாயார் 50 வயதான அனாப் யுகுப் தெரிவித்தார்.
பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளும் தனது திட்டத்தைத் தெரிவித்ததும் தனது நண்பிகள், குடும்பத்தினர் மற்றும் வைத்தியர்கள் கூட அதிர்ச்சியடைந்ததாக ஸெய்னப் தெரிவித்தார்.
இந் நிகழ்வில் நான் நேரடியாகக் கலந்துகொள்ள வேண்டும் என விரும்பியதற்கான காரணம் எனது குடும்பத்தில் மூன்றாம் நிலை கல்வி மட்டத்தை எட்டிய முதலாவது அங்கத்தவர் நான் என்பதனாலாகும். அதுதான் நான் செல்ல வேண்டும் என தீர்மானித்ததற்கான காரணம் என அவர் தெரிவித்தார்.
என்னை நானே பாராட்டிக் கொள்ள விரும்பினேன், ஏனென்றால், இந்த இலக்கை அடைவதற்கு கடுமையாக உழைத்துள்ளேன். உரிய நேரத்தில் எனது ஒப்படைகளைக் கையளிக்க வேண்டும் என்பதற்காக நள்ளிரவு தாண்டியும் அந்த வேலைகளைச் செய்துள்ளேன். இரவு நேரக் குளிரிலும் கல்லூரியிலிருந்து பயணித்திருக்கிறேன். அதற்காக என்னை நானே பாராட்டிக்கொள்ள விரும்பினேன்.
எனது வகுப்பு நண்பர்கள் விழாவில் என்னுடன் கலந்துகொண்ட எனது மகள் சல்மாவைப் பார்த்து மிகவும் மகிழ்ச்சியடைந்தனர். எனது மகளைப் பார்த்த எனது வகுப்புத் தோழர்கள் குழந்தை அழகாக இருப்பதாகக் கூறியதோடு எனது சாயலிலே சல்மா இருப்பதாகவும் தெரிவித்ததாக மகிழ்ச்சி பொங்க தெரிவித்தார் ஸெய்னப்.
என்னை நினைத்தும், எனது அடைவு குறித்தும் நான் பெருமைப்படுகின்றேன், சென் தோமஸ் பல்கலைக்கழகத்தின் ஆதரவின்றி என்னால் இதனைச் செய்திருக்க முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.
தனது மகளுடன் நேரத்தைச் செலவிட சில மாதங்கள் ஓய்வெடுத்துக்கொள்ள உத்தேசித்துள்ள ஸெய்னப் தனது கலாநிதிப் பட்டத்திற்கான கற்கைநெயினை தொடரத் திட்டமிட்டுள்ளார்.
-Vidivelli
Post a Comment