Header Ads



தமிழரசு கட்சியும், முஸ்லிம் காங்கிரசும் இணைந்து செயற்பட உடன்பட்டுள்ளோம் - ஹக்கீம்


எதிர் கட்சி தலைவர் இரா.சம்பந்தனை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ஹக்கீம் குழுவினர் திங்கட்கிழமை (9)  திருகோணமலையிலுள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்தனர். சிநேகபூர்வமாக இடம்பெற்ற இச்சந்திப்பில் நடைபெற்ற உள்ளூராட்சி சபை தேர்தல் தொடர்பிலும், முஸ்லிம் காங்கிரசுக்கும் தமிழரசு கட்சிக்கும் இடையிலான புரிந்துணர்வை வலுப்படுத்தும் வகையிலும் கலந்துரையாடல் இடம்பெற்றது. இந்த சந்திப்பில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக், முன்னாள் கிழக்கு மாகாண சபையின் தவிசாளர் சட்டத்தரணி பாயிஸ், முன்னாள் கிழக்கு மாகாண சபையின் கல்வியமைச்சர் தண்டாயுதபாணி, எதிர் கட்சி தலைவரின் திருகோணமலை மாவட்ட இணைப்பாளர் குகதாசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

சந்திப்பின் பின்னர் அமைச்சர் ஹக்கீம் ஊடகங்களுக்கு கூறியதாவது  

குச்சவெளி பிரதேச சபையில் ஆட்சியமைப்பதில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு தமிழரசு கட்சி தமது ஆதரவை வழங்காத போதும் அப்பிரதேச சபையின் ஆட்சியை முஸ்லிம் காங்கிரஸ் தனதாக்கி கொண்டது. இருந்த போதும்  இன்னும் எஞ்சியுள்ள சபைகளில் எங்கெல்லாம் இணைந்து ஆட்சியமைக்க முடியுமோ அப்பிரதேசங்களில் பரஸ்பரவிட்டுக்கொடுப்புடன் தமிழரசு கட்சியும்,முஸ்லிம் காங்கிரசும் இணைந்து செயற்பட உடன்பட்டுள்ளோம். 

இந்த தேர்தல் முறையில் உள்ளகுறைபாட்டினால்  பிரதேச சபைகளின் ஆட்சியை அமைப்பதிலும் சிக்கல்கள்  ஏற்பட்டுள்ளன. இதனால் சில இடங்களில் எமக்குள்  உடன்பாட்டுக்கு வரமுடியாத முரண்பாடுகள் தோன்றியிருந்தன. இருந்தபோதும் தலைமைத்துவ மட்டத்தில் இப்போது நாங்கள் புரிந்துணர்வுடனான உடன்பாட்டுக்கு வந்துள்ளோம்.  மீதமுள்ள உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பதில்  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும் தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஒருமித்த நிலைப்பாட்டோடு செயற்படுவது தொடர்பில் இணங்கியுள்ளோம். 

சபை நடவடிக்கைகளில் இணைந்து செயற்படுவதோடு,பதவிகளையும் நியாயமாக பகிர்ந்து பகிர்ந்து கொள்ளும் அடிப்படையிலும் பொதுவான உடன்பாட்டினை நாங்கள் கொண்டுள்ளோம். இயன்றவரை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசோடு விட்டுக்கொடுப்புடனும், உச்சகட்ட புரிந்துணர்வுடனும் இணைந்து பணியாற்ற தமிழரசு கட்சி தயாராக இருப்பதையிட்டு எங்கள் திருப்தியை நாங்கள் தெரிவித்தோம். 

மூதூர்,தம்பலகாமம்,கிண்ணியா  உட்பட பலசபைகளில் நாங்கள் இணைந்து செயற்படுவது தொடர்பில் நிலையான உடன்பாட்டுக்கு நாம் வந்துள்ளோம் என அவர் தெரிவித்தார். 

1 comment:

  1. இவ்விரு கட்சிகளும் வட கிழக்கு தமிழ் முஸ்லீம் மக்களால் மெது மெதுவாக நிராகரிக்க படும் கட்சிகள். இணைந்தவது மக்களை ஏமாற்றும் வேலைகளை முன்னெடுப்பார்கள.

    ReplyDelete

Powered by Blogger.