Header Ads



ஆர்ப்பாட்டக்காரர்களின் கட்டுப்பாட்டில், கட்டுநாயக்க விமானநிலையம்

ஊழியர்கள் முன்னெடுத்துள்ள எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை அண்டிய பகுதியில் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானநிலையத்தின் அனைத்து நுழைவாயில்களையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் மூடியுள்ளதால், விமானநிலையத்திற்கு உள்ளேயும், வெளியேயும் நூற்றுக்கணக்கான பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் விமானநிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விமான போக்குவரத்து சேவைகள் நிறுவனம் மற்றும் விமானநிலைய ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி தொழிற்சங்கத்திற்கும் இடையில் இன்று காலை இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்த இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

விமானநிலையத்திற்கு உள்நுழையக்கூடிய மூன்று வாயில்களும் ஆர்ப்பாட்டக்காரர்களின் கட்டுப்பாட்டில் உள்ளதோடு, பெக்கோ இயந்திரங்கள் மற்றும் வாகனங்களைக் கொண்டு நுழைவாயில்கள் மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் விமானநிலையத்தின் பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் விசேட அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஊழியர்களுக்கான சம்பளத்தை 10 ஆயிரத்தால் அதிகரிப்பது தொடர்பில் கடிதம் மூலம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு உரிய பதில் கிடைக்காத நிலையில், இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனம் ஆகியன கடந்த ஆண்டில் 11 பில்லியன் ரூபா இலாபம் ஈட்டியுள்ளதாகவும், இந்த சம்பள அதிகரிப்பினால் அதில் 0.98 வீத அளவு மேலதிக செலவினமே ஏற்பட போவதாகவும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள ஊழியர்களின் பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர்.

இன்று (03) காலை விமான நிலைய ஊழியர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடல் தோல்வியில் முடிவடைந்தமையினால், ஊழியர்கள் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.