Header Ads



அபாயா விவகாரம், தமிழ்த் தலைவர்கள் மௌனம்

திருமலை சண்முகா இந்து மகளிர் கல்லூரி பிரச்சினைகள் தொடர்பில் சுமூகமான தீர்வைக் காணும் வகையில் பல்வேறு முயற்சிகளை நாம் தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்ற போதும் தமிழ்த் தலைவர்கள், இந்தப் பிரச்சினையை சுமூகமாகத் தீர்ப்பதற்கான காத்திரமான பங்களிப்பை இதுவரை நல்காமல்,  மௌனம் காத்து வருவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசிய அமைப்பாளரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அப்துல்லாஹ் மஹ்ருப் தெரிவித்தார்.

குறித்த பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியைகள்  அபாயா ஆடையுடன் தமது ஆசிரியப் பணியைகளை மேற்கொள்வதற்கு பாடசாலை நிர்வாகம் அனுமதி மறுத்ததால் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை, அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டம் ஆகியவற்றை வெறுமனே திடீரென நடந்த ஒரு நிகழ்வாக நாம் கருதவில்லை. இது சிவ சேன போன்ற இனவாத இயக்கங்களின் பின்னணியிலும் இனவாத சக்திகளின் தூண்டுதலிலும் மேற்கொள்ளப்பட்ட   திட்டமிட்ட சம்பவமாகவே  கருதுகின்றோம்.

ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள் சமூக வலைத்தளங்களின் வாயிலாகவும் துண்டுப் பிரசுரங்களின் ஊடாகவும் ஆர்ப்பாட்டக்காரர்களை அழைத்திருந்தமை மற்றும் அவர்கள் தாங்கியிருந்த சுலோக அட்டைகளில் முஸ்லிம்களை கொச்சைப்படுத்தும் வாசகங்கள் மற்றும் முஸ்லிம் விரோதக் கருத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்தமையும் இந்த பிற்போக்கு சக்திகளின் பின்னணியேயாகும்.

இன நல்லுறவைச் சீர்குலைக்கும் இந்த விரும்பத்தகாத சம்பவம் ஏற்பட்ட மறுகணமே, கல்வி அமைச்சின் உயர் அதிகாரிகள், திருமலை மாவட்டத்துக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர், மாகாணக் கல்விப் பணிப்பாளர், வலயக் கல்விப் பணிப்பாளர் உட்பட சமூக ஆர்வலர்கள்  ஆகியோருடன் தொடர்புகொண்டு அசாதாரண நிலையை சரி செய்து பாதிக்கப்பட்ட முஸ்லிம் ஆசிரியைகளுக்கு நீதி வழங்கமாறு நாம் கோரிக்கை விடுத்தோம்.

எனினும் இது தொடர்பில் தமிழ்க் கட்சிகளின் முக்கியஸ்தர்களுடன் நான் பல தடவை தொடர்பு கொண்ட போதும் அவர்கள் எனது தொலைபேசி அழைப்புக்கு செவி சாய்க்கவில்லை. அதுமட்டுமன்றி தமிழ் முஸ்லிம் உறவில் விரிசலை ஏற்படுத்தும் ஒரு முக்கிய விவகாரம் நீறுபூத்த நெருப்பாக மாறிக் கொண்டிருப்பதை அறிந்தும் அந்தத் தலைவர்கள் இன்னுமே மௌனம் காத்து வருவது வேதனை தருகின்றது.

மூவின மக்களும் இன நல்லுறவுடனும், சௌஜன்யத்துடனும் திருமலை மாவட்டத்தில் வாழ்ந்து வருதாக மேடைகளிலே மட்டும் கூறி வருவதில் எந்தவிதமான அரத்தமுமில்லை. அதே போன்று தமிழர்களும் முஸ்லிம்களும் பிட்டும் தேங்காய்ப் பூவும் போல வாழ்ந்து வருவதாக பம்பாத்துக் கதைகளை இனியும் நாம் கூறிக்கொண்டிருக்க முடியாது. சமூகங்களுக்கிடையிலே பிரச்சினைகள் ஏற்படும் போது அவற்றை தீர்த்து வைப்பது அந்தந்த சமூகத்தின் பொறுப்புமிக்க தலைவர்களின் கடப்பாடாகும். 

அந்த வகையில் இந்த விடயத்தை பரஸ்பரம் சுமுகமாக தீர்த்து வைக்க அரசியல் தலைவர்கள், மதத்தலைவர்கள், சிவில் சமூக ஆர்வலர்கள் முன்வர வேண்டுமென நான் அன்பாக வேண்டுகிறேன்.

ஓவ்வோர் இனமும் தத்தமது கலாச்சார விழுமியங்களை பின்பற்றி தமது அடையாளங்களை பேணுவதற்கான அனைத்து உரிமைகளும் அந்தந்த சமூகத்தை சார்ந்தவர்களுக்க இருக்கின்றது. அதே போன்று பாடசாலைகளிலும் மாணவர்களும் ஆசிரியர்களும் தமது கலாசார உடைகளை அணிவதற்கு தடைபோட முடியாது இது தொடர்பில் உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்புக்களும் கருத்திற்கொள்ளப்பட வேண்டும்.  இவற்றை மனதில் இருத்தி, திருமலையில் எரியும் இந்தப் பிரச்சினைக்கு  காத்திரமான தீர்வை மேற்கொள்ளுமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முக்கியஸ்தர் என்ற வகையிலும்,  திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் என்ற ரீதியிலும் நான் உருக்கமான வேண்டுகோளை விடுக்கின்றேன். 

இதே வேளை திருமலை மாவட்ட ஜம்மியத்துல் உலமா, திருமலை மாவட்ட சூரா கவுன்சில் மற்றும் கண்டி மாவட்ட சூரா கவுன்சில் ஆகியோருடன் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (29) திருமலையில் கலந்துரையாடல் ஒன்றை நடத்தவுள்ளேன். என்று அப்துல்லாஹ் மஹ்ருப் தெரிவித்தார்.

2 comments:

  1. முஸ்லிம் தலைவர்கள் ஆரம்பித்து வைத்த பிரச்சனை இது.
    இதில் தமிழ் தலைவர்கள் சொல்ல என்ன இருக்கு?

    ReplyDelete
  2. Reply from MR. Mano Ganesan
    https://www.youtube.com/watch?v=-QDT7NL0ew8

    ReplyDelete

Powered by Blogger.