Header Ads



சம்பிக்கவின் மதியுரை: தடியைக் கொடுத்து அடிவாங்கிய தலைவர்கள்

-ரவூப் ஸெய்ன்-

படிமம் மறைந்து கொண்டிருக்கும்போது
மனதில் காற்று வீசுகிறது
மொழிபெயர்க்கப்பட்ட மனிதர்கள்
மொழிபெயர்த்தவற்றுக்குள் மறைகிறார்கள்  (ரொபின் பிளேஸர்)

திகன இனவெறித் தாக்குதல்களின் காயங்கள் இன்னும் ஆறவில்லை. அதன் உளவியல் பின்னடைவும் சொத்திழப்பும் இயல்பு வாழ்க்கையை முடக்கியுள்ளது. அது முஸ்லிம்களின் உள்ளத்தில் ஒரு கறுப்பு விம்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இத்தாக்குதலின் அழிவு விபரங்களை சேகரித்துக் கொண்டிருப்பதாக அரசாங்கம் கூறுகின்றது.

சூத்திரதாரிகளில் சிலர் மெல்ல மெல்ல விடுதலையாகி வருகின்றனர். அரசாங்கம் சுடச் சுட வழங்கிய வாக்குறுதியிலிருந்து விலகத் தொடங்கியுள்ளது. நம்மை நோக்கி ஒரு வெறித் தாண்டவம் வந்தது, ஓய்ந்தது என்று அமைதியடையும் சமூகம் மீளவும் நடந்ததை மறக்கத் தொடங்கியுள்ளது. கஃபா இடிக்கப் பட்டாலும் முஸ்லிம்கள் மூன்று நாட்களுக்கு மேல் கவலைப்பட மாட்டார்கள் என்று அறிஞர் முஸ்தபா ஸிபாஈ சொன்னது உண்மைப்பட்டு வருகின்றது.

இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் முஸ் லிம்களின் தலைமைத்துவம் பற்றிய விவாதங்கள் மேற்கிளம்பியுள்ளன. பெப்ரவரி 5 முதல் 10 ஆம் திகதி வரை ஐந்து நாட்கள் தொடர்ச்சியாகக் கட்டவிழ்க்கப்பட்ட இனவெறி தாக்குதல்களின் போதே தலைமைகளின் பொறுப்பீனம், கையா லாகாத் தனம் குறித்த காரசாரமான கருத்துக்கள் ஊடகங்களில் வெளிவந்துகொண்டிருந்ததை நாம் நினைவுபடுத்துகிறோம். இந்த விவாதம் இன்னும் முடிவடையவில்லை. முடிவடையவும் கூடாது.

முஸ்லிம்கள் ஓர் ஒழுங்குபடுத்தப்பட்ட சமூகம் அல்ல என்பதையும் அவர்களுக்கு சரியானதோர் தலைமைத்துவம் இல்லை என்பதையும் திகன கலவரம் உணர்த்தியுள்ளது. இனவெறித் தாக்குதல்களை எதிர்கொள்ளல் குறித்து முஸ்லிம்களால் முன்வைக்கப்பட்ட எதிரும் புதிருமான நிலைப்பாடுகளும் அணுகுமுறைகளும் தமக்கொரு தலைமை இல்லை என்பதையே உணர்த்தி நின்றது.

சமூக ஊடகங்களில் வெளிவந்த விமர்சனங்களையும் அதிருப்திகளையும் உன்னிப்பாக நோக்கும்போது முஸ்லிம்களுக்கு மூலோபாய ரீதியில் (Strategic) வழிகாட்டத் தக்க, எதிர்கால நோக்குள்ள (Visionary), ஆய்வையும் திட்டமிட லையும் அடிப்படையாகக் கொண்ட தன்னியல் பாக முன்வந்து கருமமாற்றுகின்ற (Pro-active) தலைமையொன்று இல்லை என்பது உறுதியானது. தற்போது தேசியளவில் முஸ்லிம்களின் தலை வர்கள் என்று தம்மை தம்பட்டம் அடிப்பவர்கள் அதற்குரிய தகுதி விதிகள் தம்மிடம் உள்ளனவா என்பதைப் பரிசீலிப்பது மிகவும் நல்லது.

2012 இல் தம்புள்ளை பிரச்சினையுடன் ஆரம்பித்து, ஹலால் சர்ச்சை வழியாக வளர்ந்து, இன்று இனக்கலவரம் ஒன்றுக்கு வழிகோலி யுள்ள சூழ்நிலைகள் கடந்த 6 ஆண்டுகளாக படிப்படியாக வளர்ச்சியடைந்து வந்தன. முஸ்லிம்களுக்கு எதிராக BBS உம் அதன் மடியில் வளர்ந்த பிற தீவிரவாத அமைப்புகளும் பல்வேறு விசப் பிரச்சாரங்களையும் போலிக் குற்றச்சாட்டுக்களையும் சுமத்தி வந்தன.

இக்குறிப்பிட்ட இனவாத சக்திகளுக்கு யாரும் பதிலளிக்க வேண்டியதில்லை என்பது நமது பொதுப் புத்தியாக இருக்கலாம். ஆனால், சிங்களவர்களுக்கு மத்தியில் அச்சத்தை விதைத்து வந்த இந்தக் குற்றச்சாட்டுக்களுக்கு நாம் அறிவுபூர்வமாக பதிலளித்தோமா? இன்று அவை வைரஸ் போல் பரவி, சிங்கள மக்கள் நம்பும் நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது.
திகன கலவரத்திற்கான தூண்டுதல் இன்று நேற்று வெடித்துச் சிதறியதல்ல. ஆறு ஆண்டுகள் அதற்கு அத்திவாரம் இடப்பட்டது. (1990 களிலி ருந்தே இது தொடங்கியது.) இக்கால இடைவெளி யில் 250 இற்கும் மேற்பட்ட அசம்பாவிதங்கள் பதிவாகியுள்ளன. நாட்டில் இத்தகைய புரளியைக் கிளப்பி, இனங்களுக்கிடையில் அமளி துமளிகளை உருவாக்க முயலும் சக்திகளை எதிர்கொள்ளத் தெரியாமல் பட்டும் படாததுமான சகஜீவன உரையாடல்களில் மாத்திரமே தலைவர்கள் ஈடுபட்டனர். அதுவும் தலைநகரைச் சுற்றி வந்ததே ஒழிய, பிராந்திய ரீதியில் விஸ்தரிக்கப்படவோ தொடர்ச்சியாக இடம்பெறவோ இல்லை.

ஒரு சமூகத்தின் இருப்பு, பாதுகாப்பு, கௌரவம் மற்றும் அடிப்படை உரிமைகளை உறுதி செய்வதே தலைமையின் அடிப்படைப் பொறுப்பாகும். இதை விடுத்து அதிகார பீடங்களுக்கு வளையவோ மசிந்து போகவோ தலைமைகள் தயாராக இருக்கக் கூடாது. இறுதிக் கட்டப் போரில் மஹிந்த அரசாங் கம் இழைத்த போர்க் குற்றங்களை இல்லை என்று சாதிக்க ஜெனீவா சென்ற தலைமைகள் உள்ளிட்டு, இன்றைய தலைமைகள் வரை இந்தப் பொறுப்பைச் சரியாக நிறைவேற்றுவதாகத் தெரியவில்லை.

அரசியல்வாதிகளுக்கும் அதிகார பீடங்களுக்கும் ஜால்ரா போடுவதும் பூசி மெழுகுவதும் ஆட்சி யிலுள்ளவர்களைத் திருப்திப்படுத்துவதுமே எமது தலைமைகளின் பிரதான அக்கறையாக உள்ளது. இதற்கு அரசியல்வாதிகளோ ஆன்மீகத் தலைவர்களோ விதிவிலக்கில்லை.

தாக்குதல் நடந்து கொண்டிருந்த போது பிரதமர் ரணிலின் அவசர அழைப்பில் அவரைச் சந்தித்த தலைவர்கள் கேட்டு வந்து சமூகத்திற்கு ஒப்புவித்த செய்தி என்ன? முஸ்லிம்களை அமைதிப்படுத் துங்கள் என்பதுதான் ரணிலின் வேண்டுதல்.   ஏதோ முஸ்லிம்களே இனக்கலவரத்தைத் தூண்டியதுபோல் உள்ளது இந்தக் கூற்று.

மறுநாள், ஒன்றுகூடிய 15 முஸ்லிம் சமூக நிறு வனங்கள் விடுத்த கூட்டறிக்கையைப் பாருங்கள். இராணுவம் பொலிஸார் உள்ளிட்டு இனவாதிகள் மூர்க்கமாகவும் ஆக்ரோஷமாகவும் நன்கு திட்ட மிட்டு கடைகளையும் பள்ளிகளையும் எரித்துக் கொண்டிருந்த தரணத்தில், முஸ்லிம்களே அமைதி யாக இருங்கள் என்றுதான் அறிக்கை கூறியது.

அரசாங்கத் தரப்பால் வழங்கப்பட்டுள்ள பாது காப்பு போதாது என்றோ, இராணுவத் தரப்பும் காடையர்களின் பக்கம் நின்று செயல்படுகின்றது என்றோ அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் அறிக்கை யொன்றை விடுவதற்கு இந்நிறுவனங்களுக்கு துணிவில்லாமல் போனதேன்?

இலங்கையில் இன்று முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் இனவெறித் தாக்குதல்கள் கடந்த சில ஆண்டுகளாக திட்டமிட்டு, நன்கு ஒழுங்கமைக்கப்பட்டு நடாத்தப்படுகின்றன. கங்கொடவில சோம தேரர், ஓமல் பே, ரத்ன தேரர் உள்ளிட்டு BBS இன் ஞானசார, சுமன ரத்ன போன்ற மத குருக்களும் நளின் டி சில்வா, சம்பிக்க போன்ற இனவாத கொள்கைச் சிற்பிகளும் முன்னைய ஆட்சியின் முக்கிய அரசியல்வாதிகளும் இவற்றுக்குப் பின்னணியில் உள்ளனர்.
திகன கலவரத்திற்கு மூல காரணமாயிருந்த அம்பாறை அசம்பாவிதத்திற்கு சிங்களத் தரப்பில் கூறப்பட்ட காரணம் மிக வேடிக்கையானது. தாக்கு தலைத் திட்டமிட்டவர்கள் கர்ப்பத் தடை மாத்திரை கொத்து ரொட்டியில் இருந்ததாகக் கூறி, சிங்களம் தெரியாத முஸ்லிம் காசாளரின் வாக்கு மூலத்தை வீடியோ செய்து சமூக வலைத்தளங்களில் பரப்பி யதன் மூலம் தாக்குதலுக்கான காடையர் அணியைத் திரட்டினர். சிங்கள ஊடகங்களும் அரசியல் வாதிகளும் ஏன் கல்விமான்களும் கூட இச்சம்ப வத்தை எவ்வாறு வியாக்கியானம் செய்தனர் என் பதை நாம் எவரும் உன்னிப்பாக நொக்கவில்லை.

அதாவது, கொத்து ரொட்டி உண்ட ரங்காவிற்கு கர்ப்பத் தடை மாத்திரை இருப்பதாக ஏற்பட்ட சந்தேகமே கலவரத்திற்குக் காரணம் என்று இவர் கள் எல்லோரும் கதை அளக்கிறார்கள். கொத்து ரொட்டிக்குள் இருந்த அதே கோதுமையிலான    மா உருண்டை ஒன்று, கர்ப்பத் தடை மாத்திரை தான் என்ற சந்தேகத்தை எடுத்த எடுப்பிலேயே எப்படி ஏற்படுத்தியது என்று நாம் அறிவுபூர்வமாக சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

அங்கு இடம்பெற்றது முற்றிலும் ஒரு நாடகம். ஏற்கனவே, முஸ்லிம்களின் உணவகங்களிலும் ஆடை விற்பனை நிலையங்களிலும் சிங்களவர் களின் சனத்தொகையைக் கட்டுப்படுத்தும் வகை யிலான கருத்தடை மாத்திரைகள், மருந்துகள்       சேர்க்கப்படுகின்றன என்று இனவெறியர்கள் பரப்பி வந்த போலிக் குற்றச்சாட்டை அம்பாறை சம்பவத்தில் உண்மையாய் காண்பித்து காஸிம் ஹோட்டலையும் பள்ளிவாயலையும் அடித்து நொறுக்கினர். அவ்வளவுதான்.

ஆனால், ஊடகங்களும் மருத்துவர்களும் இதனை தவறான நம்பிக்கையினால் ஏற்பட்ட மோதல் என்று வியாக்கியானம் செய்தனர். இன்னும் செய்துகொண்டிருக்கின்றனர். இது முகநூல் பயங்கரத்தினால் ஏற்பட்ட மோதல் என்று தலதா அதுகோரல சொல்வதை நாம் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும்.

ஏற்கனவே இந்நாட்டில் முஸ்லிம்கள் குறித்த சில கறுப்பு விம்பங்களை செயற்கையான    அச்சங்களை, போலியான குற்றங்களை கற்பிதம் செய்து பரப்பி வருகின்ற இனவாதிகள், அவற் றின் மூலம் முஸ்லிம்களுக்கு எதிராக சிங்கள இளைஞர்களைக் கிளரச் செய்கின்றனர்.

பேரினவாதத்திற்குப் பின்னால் ஒரு கருத்தி யல் தளம் உள்ளது. அதனைக் கட்டமைக்கின்ற கருத்தியலாளர்கள் உள்ளனர். அல்கையிதா,   அல் ஜிஹாத் என்றும், அல்லாஹு அக்பர் என்று பத்தகமெழுதி, சிங்கள இளைஞர்களை இன வாதத்தால் வெறியூட்டிய சம்பிக்க, அத்தகைய கொள்கை சிற்பிகளில் ஒருவர்.

சமீபத்திய திகன கலவரத்திற்குப் பின்னால் இருந்தவர் இவர்தான் என்று விமல் வீரவன்ச, வாசுதேச நாணயக்கார, லக்ஷ்மன் கிரியெல்ல உள்ளிட்ட பலர் ஆவேசமாகக் குரலெழுப்பி யிருந்தனர். லங்கா தீப பத்திரிகை இக்குற்றச்     சாட்டுக் குறித்து நேரடியாகவே சம்பிக்கவிடம் கேள்வியெழுப்பியது.

கலவரம் நடந்துகொண்டிருந்தபோதும் அதைத் தொடர்ந்து வந்த நாட்களிலும் இன அமைதி பற்றியும் சட்டத்தின் ஆட்சி பற்றியும் அபரிமிதமாகப் பேசிய ஒரே அரசியல்வாதி இவர்தான். கடந்த வாரம் இவரது அழைப்பின் பேரில் இவரது வாசஸ்தலத்திற்குச் சென்ற முஸ்லிம் தலைவர்கள் முகத்தில் கரிபூசிக் கொண்டு திரும்பியிருக்கிறார்கள்.

“அரசியல் ரீதியிலும் சமய ரீதியிலும் கூட்டுத் தலைமைத்துவமும் சரியான வழிகாட்டல்களும் இல்லாமையே முஸ்லிம் சமூகம் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்ளக் காரணம். கிறிஸ்தவ சமூகத்தை பேராயர் கர்தினால் சரியாக வழிநாடத்துவது போன்று முஸ்லிம் சமூகத்தை யும் வழிநடாத்த முஸ்லிம் சமயத் தலைவர்கள் முன்வர வேண்டும்.” இது சம்பிக்க முஸ்லிம் தலைவர்களுக்கு வழங்கிய மதியுரை. சந்திக்கச் சென்றவர்களின் முகத்தில் ஓங்கி விழுந்த அறை. தடியைக் கொடுத்து அடிபட்ட கதை.

இனவஞ்சகமும் சூழ்ச்சியும் உள்ளே இருக் கின்ற நிலையில், சம்பிக்க கூறிய அடுத்த வாக்கி யத்தைப் பாருங்கள்.

“ஹலால் விவகாரத்தை திறந்த மனதுடன் பேசி தீர்வு கண்டது போல் ஏனைய பிரச்சினை களுக்கும் தீர்வு காண வேண்டும்.” இது அடுத்த மதியுரை. தலையைத் தடவிக் கொண்டே முதுகில் குத்தும் இந்த வஞ்சகத்தை நமது தலைவர்கள் புரிந்துகொள்ளாமை ஆச்சரியமானது.

நாட்டின் இன்றைய கொதிப்பான சூழல், தொடர்ச்சியான இனவாதப் பிரச்சாரம், குற்ற வாளிகள் அனைவரும் இதுவரை கைதுசெய்யப் படாமை, இனவாதிகளுக்கும் ஜனாதிபதிக்கும் உள்ள உறவு, முஸ்லிம் தலமைகளின் அசமந்தம் இவற்றையெல்லாம் நோக்கும்போது நாம் இன் னொரு இனவெறித் தாக்குதலைக் காத்திருக்கின் றோமா என்ற சந்தேகமே எழுகின்றது.

இத்தனைக்கும் மத்தியில் வருமுன் காப்பது பிராந்தியங்களின் பொறுப்பு, வந்தபின் பார்ப்பது தேசியத்தின் பொறுப்பு என்று அறிக்கை விடு கிறது. இன்னொரு தலைமை.

ஜாஹிலிய்யக் காலத்தில் தைம் என்றொரு கோத்திரம் இருந்தது. அது அன்றைய சமூகத்தில் யாராலும் கவனிக்கப்படுவதில்லை. அரசியல், பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த கூட்டங் கள் நடைபெறும்போது தைம் கோத்திரத்திற்கு அழைப்பு வருவதில்லை. அவ்வாறு வந்தாலும் கூட்டங்களுக்குச் சென்றாலும் ஆக்கபூர்வமான கருத்துக்கள் எதையும் அவர்கள் சொல்வதில்லை. அத்தி பூத்தாற் போல் ஏதேனும் கருத்துச் சொன் னாலும் கூட அவை எடுபடுவதில்ல. யாரராலும் கவனிக்கப்படாத, எல்லோராலும் புறக்கணிக் கப்படுகின்ற கோத்திரமாகவே அவர்கள் இருந்தனர். இன்றைய இலங்கை முஸ்லிம்களின் நிலையும் தைம் கோத்திரத்தையே நினைவு படுத்துகின்றது.

7 comments:

  1. Don't mislead our community.we are with our leaders and ulamas.showing the correct path .this is not Myanmar.
    Our elders built a strong fort to protect Islam before we born.
    In whatsoever plans ethnic groups may have and whatsoever government will protect be mind" ALLAH AND HIS RASOOL" with the guidance of HOLY QURAAN WILL LEAD US to the correct path.
    can't turn away from sunnath wal jama-ah.

    ReplyDelete
  2. This is the truth about the situation of Muslims in sri Lanka. I dont know how far the Muslim politicians and Jamiyathul Ulama will realize this truth and act on this issue.

    ReplyDelete
  3. Terror /Communal/Criminal Champika..... and JVP killer... anyway one day Srilankan President..

    ReplyDelete
  4. I wish to share my views with regard to the comments made Br.Feroz Mohamed, the writer does not mislead the community at all. He tries to trace the true causes which lead this community backwardness and senseless community Kindly go through article once again you will find very important things the writer mentioned with regard to the reasons of Muslim community's predicament. He said leadership of this community has no strategic plans to improve and strength this community and there is no visionary for the leaders and no pro-active guidance to lead this community. As far as I am concerned the above is a very important piece of information to think and ponder over the present situation and draw a right guided plans to lead this Umma to the right directions. Chambika's so called advise to the selective personals who visited him at his residence was really a serious matter to think, plan and work for the betterment of the Muslim community. May Allah guides this Umma to the path where it receives His endless blessings and a community enjoys equal rights in all its living in this land.

    ReplyDelete
  5. Mr. Feroz I think u are one the "Frog inside of well" above article is 100 percentage true our society and our ulamas are going to fully bankruptcy.

    ReplyDelete
  6. கட்டுரையாசிரியர் சொல்லவருவது நல்ல விடயம் தான். பலரும் வியூகங்களை முவைக்கவே முனைகின்றனர்.ஆனாலும் யார் முன்வந்து அமுல்படுத்துவது.உண்மையில் பூனைக்கு மணிக்கட்டுவது யார் என்ற பிரச்சினை தான் ..

    ReplyDelete
  7. கட்டுரையாசிரியர் சொல்லவருவது நல்ல விடயம் தான். பலரும் வியூகங்களை முவைக்கவே முனைகின்றனர்.ஆனாலும் யார் முன்வந்து அமுல்படுத்துவது.உண்மையில் பூனைக்கு மணிக்கட்டுவது யார் என்ற பிரச்சினை தான் ..

    ReplyDelete

Powered by Blogger.