‘ஷரீஆ’ வைக் கடைப்பிடித்தால், சரியாகவே எதுவும் நடக்கும்...!
பெரும்பாலும் எல்லா மதங்களும் பெரும்பாவம் செய்யாதே என்றுதான் போதிக்கின்றன. நாஸ்திகனைத்தவிர, “இறைவன் ஒருவன் இருக்கின்றான்” என்பதை அனைவரும் நம்புகின்றோம். புனித இஸ்லாம் மனித சமுதாயம் நெறியோடு வாழ்வதற்கான எளிமையான வழிமுறைகளை ‘ஷரீஆ’ என்ற சட்டத்தின்மூலம் ஒழுக்க விழுமியக் கட்டுப்பாடுகளை நமக்குக் கற்றுத்தருகிறது.
முஸ்லிம்களாகிய நாம் முற்றுமுழுதாக இஸ்லாமிய ‘ஷரீஆ’ வைத் தெளிவாகத் தெரிந்திருக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். ஷரீஆ பற்றிய சந்தேகங்களைப் பெரும்பான்மை சமூகத்தினர் நம்மிடம் வந்து கேட்கின்றபோது நாம் அவர்களுக்கு ஷரீஆவைப் பற்றித் தெளிவாக விளக்கம் தரத் தயங்குவோமேயானால் நாமும் குற்றவாளிகளாகி விடுவோம்.
வஹாபிகள் என்பவர்கள் யார்? ஹராம் என்றால் என்ன? இறைச்சியைப் பற்றிக்கூற முடியுமா? 4 திருமணங்கள் செய்துகொள்வதைப் பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது? இப்படியெல்லாம் தங்களுடைய சந்தேகங்களை அவர்கள் நம்மிடம் கேட்பார்கள். ‘ஷரீஆ’ வின் சட்டதிட்டங்களை நாம் சரியாக அவர்களுக்கு விளக்கமாக எடுத்துச் சொல்லிவிட்டால் மீண்டும் மீண்டும் அவர்கள் நம்மிடம் வந்து முறையிடவும் மாட்டார்கள்.
இஸ்லாத்தைப் பற்றிக் குறைகூறவும் மாட்டார்கள். உதாரணமாக ‘பர்தா’ வைப் பற்றிக் கேட்டால் நாம் அவர்களுக்கு இப்படிப் பதில் கூறலாம். ‘பர்தா’ ஒழுக்கமான ஆடை.10 ஆயிரத்திலிருந்து 15 ஆயிரம் ரூபாய் வரை சாரிகள் விற்கப்படுகின்ற இக்காலத்தில் ‘பர்தா’ மிகக் குறைந்த விலையில் வாங்கிக்கொள்ள முடிகிறது. 3 அல்லது 4 ஆயிரம், ஆகக்கூடினால் 6 ஆயிரம் ரூபாவுக்குள் வாங்கிவிடலாம். அதிலும் கறுப்பு பர்தா என்றால் மிகவும் பொருத்தம். காரணம் எத்தனை தடவை அணிந்தாலும் அது பழசா, புதுசா என்று யாருக்கும் தெரியாது.
மழை எப்போது பெய்யும்? பிறப்பு எந்த நிமிடம் நிகழும்? மரணம் எப்போது வரும்? யாருக்குத் தெரியும்? அனைத்து ரகசியங்களையும் அறிந்தவன் அந்த இறைவன் ஒருவன்தான். அவனுக்குத்தான் தெரியும் ஒரு ஆரம்பமும் அதன் முடிவும்.
நவீன யுகத்தில் எத்தனையோ ‘புதிய கண்டுபிடிப்புகளைக்’ கண்டுபிடித்த விஞ்ஞானத்தால் சிறியதொரு கடுகு மணியைப் பூரணமாகக் கண்டுபிடிக்க முடிகிறதா? நம் கண்ணுக்குப் புலனாகாத மறைபொருளாக அசைக்க முடியாத மாபெரும் சக்தி ஒன்று இயற்கையாக இருந்து இயங்கிக் கொண்டுதான் இருக்கிறது.
மறைபொருளாக இயங்குகின்ற இறைவனைப் பற்றிய பரிபூரணமான விளக்கம் இஸ்லாத்தில் இருக்கிறது. பிறப்பு தொடங்கி மனிதன் அவனுடைய வாழ்நாள் வரையிலும் சிறுநீர் கழிப்பதிலிருந்து தாம்பத்திய உறவு வரையிலான இயற்கைத் தேவைகளை அவன் எவ்விதமாகப் பரிசுத்தமாகப் பேணவேண்டுமென்று இஸ்லாம் மிக அழகாகக் கற்றுத்தருகிறது.
‘ஹராம்’ என்று விலக்கப்பட்டவற்றைத் தவிர்த்து ‘ஹலால்’ என்று விதிக்கப்பட்டவற்றை மட்டுமே நாம் உட்கொள்ளவேண்டும் என்பதே இஸ்லாத்தின் ‘ஷரீஆ’ இட்ட கட்டளை. நாயின் இறைச்சி நமக்கு ஹராம். நஜீஸ் தூய்மையற்றது. விலக்கப்பட்ட விலங்கு அது. அருவருக்கத்தக்க ‘நஜீஸ்’ களை உண்ணும் நாய், புதிய சஹனில் அதற்கு புரியாணி போட்டாலும் வேறொரு நாய் வந்து அதைச் சாப்பிட விடாமல், குரைத்துக் கடித்து விரட்டும். பொறாமைக் குணம் கொண்டது நாய். தன் இனத்தையே விரட்டும். தன் இனத்தையே அது காட்டியும் கொடுக்கும். செத்த பிராணிகளை உண்ணும் இந்த நாய், அதற்கு ‘விஷர்’ வந்து விட்டால் தன்னை வளர்த்த எஜமானனையே கடித்துக் குதறும். இதனால்தான் யாரேனும் நன்றி கெட்டதனமாக நடந்து கொண்டால் சக மனிதனைப் பார்த்து ‘நாயே’ என்று மனிதன் திட்டுகின்றான். காரணமின்றி இறைவன் எதையும் தடை செய்யவில்லை.
இஸ்லாமிய 4 திருமண விடயம் கூட சமூக நலன் கருதியே தவிர, ‘இச்சை’ தீர்க்கும் முழு நோக்கம் அல்ல. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்கூட. விதவைப் பெண்களைத்தான் விவாகம் செய்தார்கள். அதிலும், அன்னை சபியா (ரழி) அவர்களை நபியவர்கள் மணமுடித்தபோது, சபியா (ரழி) அவர்கள் 80 வயதையும் தாண்டியவர்களாக இருந்தார்கள் என்பது வரலாறு.
நம் சமூகத்தில் 4 திருமணங்கள் இவ்வாறான ஏழை அபலை விதவைகளுக்காக அமைகிறதா?
துளியளவேனும் ஈமான், இஸ்லாம் இல்லாதவர்கள், ‘இபாதத்’ என்றால் என்ன என்று தெரியாதவர்கள் பெயரளவில் முஸ்லிமாக இருப்பவர்கள். சித்தீக், அமீன் என்று பெயரை வைத்துக்கொண்டு முடிக்கின்ற இவ்வாறான 4 திருமணங்கள் எந்தவிதத்தில் சத்தியத் தூதரின் வழிமுறையில் லட்சியத் திருமணங்களாகும்-? நெறியான இஸ்லாத்தைப் பற்றிய நிறைவான போதனைகளைக், கடமைகளைப் பற்றி நிறையவே பேசலாம்.
இஸ்லாம் விவசாயத்திற்கு முதலிடம் தந்த மார்க்கம். அதற்குப் பிறகுதான் வியாபாரம், கைத்தொழில் எல்லாம். வருகின்ற காலங்களில் அவர்கள் நமக்கு ‘மரக்கறி’ தர மறுப்பார்களேயானால் நம் நிலை என்ன? யோசிக்கவேண்டும். எதிர்கால சவால்களை சமாளிக்கக் கூடியவிதமான முன்யோசனைகளை முன்வைத்து இவ்வாறான ஆக்கபூர்வமான ஆலோசனைகளை குத்பாக்கள் மூலமாகவும், துண்டுப் பிரசுரங்களாகவும் சமூகத்திற்கு விழிப்புணர்வூட்ட வேண்டியது நம் கடமையல்லவா? தென்னை தொடங்கி, பசளி, கறிவேப்பிலை, கத்தரி, மிளகாய் என ‘வீட்டுப் பயிர்ச்செய்கையை’ செய்வதற்கு ஊக்குவிக்கவேண்டும். குத்பாக்களில் ஓதப்படும் சொல்லப்படும் பயான்கள் அந்தந்தக் கால கட்ட சமகால சூழ்நிலைக்கேற்ற பிரச்சினைகளுக்குத் தீர்வு தரத்தக்க காத்திரமான கருத்துக்களாக அமைய வேண்டியது காலத்தின் கட்டாயமாகிறது.
ஏனென்றால், அண்மைய காலங்களிலிருந்து இஸ்லாத்தின் மீதான ‘அவர்களது’ பார்வை வித்தியாசமாகவே விரிகிறது. நமது இறைச்சி விஷயத்தில் இறுக்கமான மனநிலையில் அவர்கள் இருக்கிறார்கள். ஆனால், நம்மில் 75 வீதமானவர்கள் இறைச்சி உண்பதில்லை என்ற உண்மையை அவர்கள் உணரவில்லை. இப்போது முஸ்லிம்கள் மத்தியிலிருந்து இறைச்சி வியாபாரம் வீழ்ச்சியுற்று அந்தத் தொழிலே விடுபட்டு வருகிறது.
1987 ஆம் ஆண்டு, மாடுகள் ஏற்றிவந்த லொறி ஒன்றைக் கைப்பற்றினர். மர்ஹூம் அமைச்சர் அஷ்ரப், மர்ஹூம் அமைச்சர் ஏ.ஸீ.எஸ். ஹமீட் இருவரது கொடும்பாவிகளையும் எரித்தனர். ஆனால், லொறியின் சாரதியும், கிளினரும் முஸ்லிம் மதத்தைச் சார்ந்தவர்கள் அல்லர். ஜா–எலப் பகுதியைச் சேர்ந்த ‘மெடம்’ ஒருவருக்குச் சொந்தமான லொறி அது. அவரும் முஸ்லிம் அல்ல என்பதுதான் உண்மை. இப்படித்தான் தொடர்ந்து கொண்டிருக்கிறது அவர்களது இனமுறுகலுக்கான அடிப்படைக் குழப்ப ஆரவார அட்டகாசங்கள். எங்கள் பெயரில் அவர்கள் லொறிகள் குளறுபடிகள். துவேச அலைகள்...
ஒருவர் நமக்கு ஓங்கி அடித்தால் நாமும் பதிலுக்கு அவர் ஓங்கி அடித்த அதே அளவுக்குத்தான் ஓங்கி அடிக்க முடியும். ஒருவர் நம்முடைய மேற் பற்களில் ஒன்றை உடைத்தால் நாமும் அடித்தவருடைய மேற்பல்லை மாத்திரம்தான் உடைக்க வேண்டும். சின்னச் சின்னச் சண்டைகளுக்கும் ‘ஷரீஆ’ தருகின்ற சட்டம் சரியாகத்தான் இருக்கிறது. சரியாக ‘ஷரீஆ’ வைக் கடைப்பிடித்தால் எதுவும் சரியாகவே நடக்கும்.
முஸ்லிம்கள் கடும் போக்குவாதிகள், போராளிகள், குழப்பக்காரர்கள் என்ற பயங்கரமான ஒரு சித்திரத்தைப் பெரும்பான்மையினரின் எண்ணங்களில் விஷவிதைகளாகத் தூவி விருட்சமாக்கி விட்டவர்கள் அவர்களுக்குள்ளே இருக்கின்ற கெட்டவர்கள். இஸ்லாத்திற்கு எதிரான விஷமிகள். ஆனால், அவர்களுக்குள்ளேயும் 90 வீதமான நல்லவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.
அதனால்தான் துவேச மழை தூறலோடு நின்று போய்விடுகிறது.
அவர்களுக்கெல்லாம் தெளிவாக ஒன்றைச் சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன். அன்பானவர்களே! 50 வருடங்களுக்கு மேற்பட்ட அரச ஊடக ஒலிப்பதிவு நாடாக்களைத் தேடி எடுத்துத் தேடினாலும் எங்கள் இஸ்லாமிய மதப் பெரியார்கள், உலமாக்கள், பேச்சாளர்கள் என்று எவராக இருந்தாலும், யாராவது ஒருவர் அன்றுதொட்டு இன்று வரைக்கும் எந்த மதத்தையாவது அல்லது அவர்களுடைய மனதை புண்படுத்தியாவது உரை நிகழ்த்தியதாக எங்கேயாவது ஏதாவது ஒரு சாட்சி, அத்தாட்சி, ஆதாரம், ஆவணம் இருக்கிறதா? சொல்லுங்கள். இதுவரை காலமும் மாற்று மதத்தினரை இழிவுபடுத்தி அவர்களது மதங்களுக்கு அபகீர்த்தி ஏற்படுத்தி, மனதுகளைப் புண்படுத்தி எந்த ஊடகங்களிலும் எந்த உரைகளுமே நிகழ்த்தப்படவில்லை. இனியும் நிகழாது. எங்கள் மார்க்கம். சாந்தி மார்க்கம் அன்பு, ஈகை, மனித நேயம், இவைகள் தாம் எங்கள் உயர் பண்புகள். அன்பாய் இருப்போம். மனித நேயத்தோடு வாழ்வோம்.
வை.எம். இப்றாஹிம்
கொழும்பு வர்த்தக சங்கத் தலைவர்
Post a Comment