சவூதியினால் நிறுவப்பட்ட, வீடுகளுக்கு என்னாச்சு...?
காடுகளுக்குள் வளர்ந்த வீடுகளும் சாம்பலாகிய கனவுகளும்
-றிசாத் ஏ.காதர்-
இலங்கை திருநாட்டின் அனர்த்தம் ஒன்றினால் பாதிப்புற்று, வாழ்வதுக்கு இடமற்று வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள் இன்னும் இந்த தீவிலே வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள். அம்மக்களின் வாழ்வியல் துன்பங்கள் என்பது எண்ணிலடங்காதவை.
அதன் ஒரு பகுதிதான் அம்பாறை மாவட்டத்தில், அக்கரைப்பற்று பிரதேசத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சவூதி அரசினால் நுரைச்சோலை பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட கிங் ஹுசைன் மாதிரிக் கிராமம். அங்குள்ள வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு தசாப்தத்தை எட்டியுள்ளது. ஆனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் பகிர்ந்தளிக்கப்படவில்லை. தற்போதுள்ள சூழலில் பகிர்ந்தளிப்பதற்கு ஏதுவாக அவைகள் இல்லாமல்போயிருப்பது வேதனையானதே. குறித்த வீடுகள் காடுகளாக பரிணாம வளர்ச்சியடைய இந்த நாட்டில் விதைக்கப்பட்ட இனவாத சிந்தனைகளின் ஆரம்பப்புள்ளி என்பது மிகைப்படுத்தலல்ல.
குறித்த பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட 500 வீடுகளில் 303 வீடுகளை ஜனாதிபதி செயலகம் பகிர்ந்தளிக்கவுள்ளதாக சொல்லப்பட்டது. இந்த எண்ணிக்கை முஸ்லிம் மக்களுக்கு வழங்கப்படுவதுக்கான சாத்தியங்கள் அதிகம் என்கிற கருத்து மேலோங்கியே காணப்படுகின்றது. மீதமுள்ள 197 வீடுகளையும் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிங்கள, தமிழ் மக்களுக்கு பகிர்ந்தளிப்பார் எனவும் நம்பப்பட்டது. ஆனால் கருத்து ரீதியாகவே அத்தனையும் இதுவரை இருந்துவருகின்றது. செயற்பாடுகள் செத்து மடியத்தொடங்கிற்று.
கட்டப்பட்ட வீடுகளில் வாழும் கனவுடன் ஒரு தசாப்தமாக காத்திருந்து இந்த உலகை விட்டு பிரிந்தவர்கள் ஏராளமானவர்கள். சந்ததிகளுக்கேனும் தமது கனவுகள் நனவாகுமா என்ற ஏக்கத்துடனே அவர்களின் மரணங்கள் சம்பவித்திருக்கும் என்பதில் ஐயமில்லை.
இந்த மக்களின் வாழ்வியல் நிலை பற்றியும் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளின் தற்போதுள்ள சூழல் பற்றியும் ஏலவே பலமுறை இப்பத்திரிகை எடுத்தியம்பியது.
அவைகளில் எதுவும் எமது சமூகத்திலுள்ள அரசியல் தலைவர்களின் காதுகளுக்கு எட்டவில்லை அல்லது அவர்களின் இதயங்களை இழகச்செய்யவில்லை என்று சொல்வதே பொருத்தம்.
ஓர் அனர்த்தம் நிகழ்ந்து சாதாரணமான வாழ்க்கை முறை ஓரிரு வருடங்களுக்குள் மீளமைக்கப்படுவது வழமை. ஆனால் 13வருடங்கள் பூர்த்தியடைந்தாயிற்று. இன்னும் அதன் வலிகளையும், ரணங்களையும் அணுவணுவாய் புசிப்பதுக்கு விட்டால்போலவே அம்மக்களின் துயர் நிரம்பியிருக்கின்றது. ஆட்சியாளர்களுக்கு இந்த நிலைவரங்களை புரிந்துகொள்வதற்கான ஆற்றல் இல்லாமல் போய்விட்டது போலவே அன்றாட செயற்பாடுகள் நகரத்தொடங்கிற்று.
நுரைச்சோலை வீட்டுத்திட்ட விவகாரத்தினை மிக இலகுவாக பெற்றுக்கொள்வதற்கான அரியதொரு சந்தர்ப்பம் நமது முஸ்லிம் அரசியல் தலைமைகளுக்கு வாய்த்திருந்தது. ஆனால் அந்த விடயத்துக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் என்ன என்பதுவே இன்றுள்ள கேள்வி.
இந்த நாட்டினுடைய பிரதமருக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை என்பது இலங்கையிலுள்ள முஸ்லிம்களுக்கு நீண்ட காலமாக தீர்க்கப்படாமலுள்ள முரண்பாட்டுடன் கூடிய விடயங்களை தீர்ப்பதுக்கு பொருத்தமான தருணமாக இருந்து கைநழுவிப்போயிற்று என்று சொல்வதில் தவறுகள் இல்லை.
குறிப்பாக தமிழ் தரப்பினரை பொறுத்தமட்டில் பிரதமருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையினை மையப்படுத்தி பல விடயங்களை எழுத்து மூலம் ஒப்பந்தமாக செய்துகொண்டனர். அவை அரசியல் அரங்கில் சிலாகித்துப்பேசப்படுகின்றது. அதேபோல் விமர்சிக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது. இந்த நாட்டில் ஒப்பந்தங்கள் ஒன்றும் செய்துவிடப்போவதில்லை என நமது அரசியல் தலைமைகள் விமர்சித்தாலும் குறித்த ஒப்பந்த நடைமுறைக்கு சில பெறுமானங்கள் இல்லாமலில்லை என்பது வெளிப்படையே. ஆனால் தமிழ் தரப்பு சில விடயங்களை தமது சமூகத்துக்கு பெற்றுக்கொடுக்கும் முயற்சியில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டுமுள்ளது.
ஆக, எது எப்படியோ இந்த நாட்டில் மிக நீண்டகாலமாக முஸ்லிம் மக்களின் தீர்க்கப்படாத பிரச்சினை ஒன்றாக நுரைச்சோலை வீட்டுத்திட்ட விவகாரத்தையே பார்த்தல் வேண்டும். குறித்த விடயம் இந்த நாட்டிலுள்ள ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் அவமானப்படுத்திய விடயம் என்றே பார்க்கப்படுகின்றது. ஆனால் நமது முஸ்லிம் அரசியல் தலைமைகள் பேசா மடந்தைகளாகவே இந்த விவகாரத்தில் இருப்பது வெட்கித்தலைகுனிவதுடன், வேதனைப்பட்டுக்கொள்வதாக புத்திஜீவிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
நல்லாட்சி நிறுவப்படுவதற்கு ஏராளமான வாக்குறுதிகள் சிறுபான்மை மக்களை நோக்கி அள்ளிவீசப்பட்டன. கிழக்கிலுள்ள முஸ்லிம் மக்களை மையப்படுத்தி வழங்கப்பட்ட வாக்குறுதிகளில் மிக முக்கியமானது அக்கரைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட நுரைச்சோலை வீட்டுத்திட்ட விடயமாகும். குறித்த விடயத்தை அரசியல் அரங்கில் வெற்றிகொள்ள எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பூச்சியமே.
நுரைச்சோலை வீட்டுத்திட்ட விவகாரத்தை பூதாகரமாக்கி நீதிமன்று வரைகொண்டு சென்று அரசியல் அரங்கில் தனக்கிருந்த செல்வாக்கின் பெறுமானத்தை வெளிப்படுத்திக்காட்டியது ஹெல உறுமய என்கிற கட்சிக்காரர்கள். அதற்கு சொந்தக்காரராக இருப்பவர் இந்த ஆட்சியிலும் மிக்க பலம்பொருந்தியவராகவே இருப்பது இங்குள்ள விசேட அம்சமாகும்.
இவ்வாறான விடயம் நடந்தேறி ஆட்சிமாற்றம் இடம்பெற வழிசமைத்துக்கொடுத்த நமது முஸ்லிம் தலைமைகள் எதனை மையப்படுத்தி ஆட்சிக்கு ஒத்தடம் வழங்கியது என்பது இதுவரை இம்மக்கள் ஐயப்பாட்டுடனே இருப்பது மக்களின் குரல்களின் ஊடாக அறிந்துகொள்ளவும் முடிகின்றது.
காடுகளாகிய வீடுகளை மீளத் திருத்தி கையளிக்கவுள்ளாதாக ஆட்சியாளர் தொடங்கி அமைச்சர்கள் வரை சிலாகிக்கத் தொடங்கினர். ஆனால் அதுவும் வெறும் படங்காட்டலாகவே போயிற்று. கிழக்கு மாகாண ஆட்சி மு.கா.கட்சியின் ஆட்சியில் இருந்தபோது எந்த அரசு வீடுகளை நிர்மாணிக்க உதவி வழங்கியதோ அந்த அரசின் சமய விவகாரங்களுக்கு பொறுப்பான அதிகாரி வரவழைக்கப்பட்டு மாகாண ஆட்சியாளர்கள் படைபட்டாளங்களோடு ஊடகங்களுக்கு முன்னால் வலம் வந்த நிலைமையினை மட்டுமே மக்கள் பார்த்தனர். தொடர் நடவடிக்கை இதுவரை கைகூடவில்லை. 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18ஆம் திகதி இடம்பெற்ற அந்நிகழ்வை மக்கள் “டிசம்பர் மாதம் இடம்பெறவுள்ள கவனயீர்ப்பு நடவடிக்கைக்கு ஆசுவாசப்படுத்த” மேற்கொண்ட முயற்சியாகவே பார்க்கத் தொடங்கினர். அதில் தவறுகள் ஏதுமில்லை என்றே சொல்லுதல் இன்னும் சிறப்பாகவிருக்கும்.
அதனையும் தாண்டி வீடுகள் வழங்கும் துரித நடவடிக்கை என்கிற தோரணையில் பாதிக்கப்பட்ட மக்கள் மீள நேர்முகத் தெரிவுக்கு உட்படுத்தப்பட்டனர். அந்த நடைமுறைக்கும் வருடம் ஒன்றாகப்போகின்றது. மாற்றங்கள் அல்லது சாதக நடவடிக்கை என்பது இன்னுமில்லாமல் இருக்கின்றது.
இவற்றை எல்லாம் வைத்து அனுமானிக்கின்றபோது நல்லாட்சி என்கிற பெயரில் ஆட்சி புரிகின்ற அரசாங்கம் தமது காலத்துக்குள் கொதிநிலை அரசியலை தவிர்த்து முஸ்லிம் மக்களை ஆசுவாசப்படுத்த அவர்களின் தலைவர்களை கொண்டே நாடகம் ஆடுகின்றது என்பது வெளிப்படை உண்மையாகவே தெரிகின்றது.
மீளத் திருத்தங்கள் இன்னும் இடம்பெறவில்லை, இடம்பெறப்போவதுமில்லை. காடுகள் பெருங்காடுகளாக காட்சி தருகின்றன. இன்னும் சிலகாலம் கடந்தால் வன ஜீவராசிகள் திணைக்களம் கையகப்படுத்தி விலங்குகள் வாழ்கின்றன அதற்கு தொந்தொரவு செய்ய அனுமதிக்கப்படமாட்டாது என்கிற வாசகத்துடன் பதாதைகள் காட்சிப்படுத்தப்படலாம். அதற்குரிய காலம் வெகு தொலைவிலில்லை.
மேற்சொன்ன எந்த நிலைகளை பற்றியும் நமது அரசியல் தலைமைகள் சிந்திக்கத் தலைப்படவில்லை. தமது கட்சிக்கு அமைச்சுக்கள், பிரதியமைச்சுக்கள் எத்தனை பெற்றுக்கொள்வது என்பதில் காட்டுகின்ற ஆர்வம் சமூக விடயங்களில் இல்லாமல் போய்விட்டது. அரசியல் என்பது மிக இலகுவாக சம்பாதிக்கும் ஒரு தொழில் என்று இன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளதே தவிர சமூக விடயங்களுக்கு உரிய தீர்வு வழங்கப்படாது போனால் அரசியல் சுத்த ஏமாற்று வியாபாரம் என்கிற விடயம் மறக்கடிக்கப்பட்டுள்ளதே உண்மை.
விடிவெள்ளி
No one address to the Saudi Government about the plight of those houses.
ReplyDeleteஇலங்கை முஸ்லிம்களின் அரசியல் தலைமைகளால் தீர்க்கப்பட முடியாதுபோன இந்த அமானிதத்தை, ஆன்மிகத் தலைமையான உலமா சபை தீர்த்து வைக்க வேண்டிய ஓர் கடமை அதற்கு உள்ளது.
ReplyDelete